Sunday 9 July 2023

அபிநயசரஸ்வதி சரோஜா தேவி

 பேசும் முறையில் ஏற்ற இறக்கம் காட்டி தனக்கென ஒரு பாணியை அமைத்துக்கொள்வது அனைத்து கலைஞர்களின்வாடிக்கை. அதுபோல கொஞ்சி கொஞ்சி பேசுவதை பாணியாக கொண்டவர் சரோஜாதேவி.




கர்நாடகாவை சேர்ந்த இவர் தமிழ், கன்னடம், தெலுங்கு, ஹிந்தி என்று இருநூறு படங்களுக்கு மேல் நடித்துள்ளார். கடந்த சில வருடம் வரை நடித்துக்கொண்டும் உள்ளார்.
அதுமட்டுமல்ல நடிக்க ஆரம்பித்த வருடம் தொடங்கி இருபத்தி ஒன்பது வருடம் (1954 – 1983) நாயகியாகவே நடித்துள்ளார். (முதல் இருபடம் நீங்கலாக) மொத்தம் 161 படங்கள் அந்த வரிசையில் வரும்.
இவருடைய திரைப்பயணத்தை திருமணத்திற்கு முன் திருமணத்திற்கு பின் என்று பிரித்து கொள்ளலாம். காரணம் அதுவரை காதல்படங்களில் அதிகம் நடித்த அவர் பின் குடும்ப பாங்கான அதே சமயம் நாயகியாய் நடிக்க துவங்கினார்.
ஜெயலலிதா வரும் வரை இவர்தான் எம்ஜிஆருக்கு இணை இருவரும் மொத்தம் 26 படங்களில் இணைந்து நடித்திருக்கின்றனர். அதே போல சிவாஜியுடன் பதினைந்து படங்கள் செய்துள்ளார்.
தென்னக்கத்து சூப்பர் ஸ்டார்கள் எம்ஜி ஆர் , சிவாஜி, என் டி ராமாராவ், நாகேஸ்வரராவ், ராஜ்குமார் ஆகியோருடனும், இந்தியில் திலீப் குமார் , ராஜ் குமார், சுனில் தத் ,ஷம்மி கபூர் ஆகியோருடனும் நடித்துள்ளார்
இரண்டாம் நிலையில் ஜெமினி கணேசன், கல்யாண் குமார் ,முத்துராமன், ரவிச்சந்திரன் ஆகியோருடனும் இணைந்து நடித்துள்ளார்
இவரது சிறந்த படங்கள் என,நாடோடி மன்னன், கல்யாண பரிசு, பாகப்பிரிவினை, திருடாதே , பாலும் பழமும், வாழ்க்கை வாழ்வதற்கே ஆலயமணி , பெரிய இடத்து பெண், புதிய பறவை, பணக்கார குடும்பம் , எங்க வீட்டு பிள்ளை ,அன்பேவா ஆகியவற்றை குறிப்பிடலாம்
தமிழ்நாட்டில் இவரை கன்னடத்து பைங்கிளி என்று கொண்டாடினார்கள். அதேபோல சதுர்பாஷா தாரே ( நான்கு மொழிகளின் நட்சத்திரம் ) என்று அழைக்கப்பட்டார்
தெலுங்கு மற்றும் கன்னடத்தில் மிக அதிக ஊதியம் பெற்றவர் என்ற பெருமையும் இவருக்கு உண்டு. அதை எதையும் வீணாக்காமல் தொழில் துறையில் முதலீடு செய்து சிறப்பாக செயல்பட்டு வருகிறார்
இவரது குடும்பம் இவருக்கு மிக்க உறுதுணையாக இருந்திருக்கிறது இவரது தந்தை நாட்டியம் பயிற்றுவித்து திரை உலகில் இடம் பிடிக்கும் வரை இவரை ஆதரித்து இருக்கிறார். தனது தாய் சொன்ன ஆடை கட்டுப்பாட்டை இறுதிவரை கடைபிடித்து இருக்கிறார்.
பெற்றோர் சொன்னவரைதான்( ஸ்ரீ ஹரி, பாரத் எலெக்ட்ரானிக் பொறியாளார் ) மணம் முடித்து இறுதிவரை அவருடனே தொடர்ந்தது.
மேலும் திருமணத்திற்கு பின்னும் அவரை ஊக்கபடுத்தி இருக்கிறார். மனமொத்த ஜோடிகளாகவே இருந்திருகின்றனர். இதுபோல பிற நடிகைகளுக்கு அமைவது அபூர்வம்.
இவரது புகழ் மற்றும் உண்டு . இவர்படத்தில் அணியும் நகைகள், புடவைகள், ஜாக்கெட் எல்லாம் இவர் நடித்த படத்தின் பெயரோடு சந்தையில் மிக பிரபலமாக விற்றதுண்டு.
இன்றளவில் தொழில் துறையில் வெற்றிகரமாக இயங்கி வருகிறார்
இவர் தனது கணவர் மற்றும் தாயின் பெயரில் அறக்கட்டளை ஏற்படுத்தி அதில் ஏரளமான உதவிகள் செய்து வருகிறார்.
பத்மஸ்ரீ ,பதம பூசன், உட்பட பல விருதுகள் பெற்ற இவர் இருமுறை தேசிய திரைப்பட விருதுகளுக்கான நடுவராக பணியாற்றி இருக்கிறார் .
திருப்தி தேவஸ்தான ஆலோசனை குழுவில் இடம் பெற்று இருக்கிறார்.
இதுபோன்று ஒரே சமயத்தில் திரையிலும் பொது வாழ்விலும், சர்ச்சைகளில் சிக்காமல் நல்ல பெயர் எடுப்பவர்கள் அபூர்வம் அது இவருக்கு வாய்த்திருக்கிறது
தொடரட்டும்.
பல்லாண்டு வாழட்டும்

ஜெயச்சந்திரன்




மெல்லிசை மன்னர் ’மூன்று முடிச்சு’ படத்தில் பாட வாய்ப்பு வழங்கினார். இரண்டு பாடல்கள். இந்த இரண்டு பாடல்களையும் கமலுக்குப் பாடினார். இன்றைக்கும்
🌹 ‘வசந்தகால நதிகளிலே வைரமணி நீரலைகள்’ என்ற பாடலையும்
🌹‘ஆடிவெள்ளி தேடி உன்னை’ என்ற பாடலையும் கேட்டுப்பாருங்கள். அப்படியே கமலின் குரலுக்கு இணையானதொரு குரலாகவும் ஸ்டைலாகவும் பாடியிருப்பார்
கொஞ்சம்கொஞ்சமாக ஜெயச்சந்திரன் குரலுக்கென தனிக்கூட்டம் உருவானது. ‘’ஜெயச்சந்திரனோட குரல்ல பாதி ஜேசுதாஸ் இருக்கார்; பாதி எஸ்பி.பி. இருக்கார்.
புதுமாதிரியா இருக்குப்பா அவரோட வாய்ஸ்’’ என்று தமிழ் ரசிகர்கள் கொண்டாடினார்கள்.
இளையராஜா வந்தார். எழுபதுகளின் மத்தியில் வந்த இளையராஜா, எஸ்பி.முத்துராமன் இயக்கத்தில்
🌹‘காற்றினிலே வரும் கீதம்’ என்ற படத்துக்கு இசையமைத்தார்.
🌹 ‘சித்திரச்செவ்வானம் சிரிக்கக் கண்டேன்’ என்ற பாடலை வழங்கினார். தொடர்ந்து, இளையராஜா தன் இசையில் எஸ்பி.பி-க்கு இந்தப் பாடல்தான், ஜேசுதாஸ் அண்ணாவுக்கு இந்தப் பாடல்தான், மலேசியா வாசுதேவனுக்கு இந்தப் பாடல்தான், எஸ்.என்.சுரேந்தருக்கு, தீபன் சக்கரவர்த்திக்கு, கிருஷ்ணசந்தருக்கு என்றெல்லாம் பாடல்களை வகைவகையாகக் கொடுத்தார்.
அந்தப் பட்டியலில் ஜெயச்சந்திரன், தனியிடம் பிடித்தார்.
பாரதிராஜாவின்
🌹 ‘கிழக்கே போகும் ரயில்’ படத்தில்,
🌹 ‘மாஞ்சோலைக் கிளிதானோ மான்தானோ வேப்பந்தோப்புக்குயிலும் நீதானோ’ என்ற பாடலில் ஸ்வர சஞ்சாரமெல்லாம் செய்து ஆலாபனைகளில் அசத்தி, ‘நீரோடை போலவே’ என்கிற வரிகளில், நம் கண்முன்னே நீரோடையைக் கொண்டு வந்து நிறுத்தினார் ஜெயச்சந்திரன்.
டி.ராஜேந்தருக்கு எஸ்பி.பி-யின் குரல் மீது அதீத காதலே உண்டு. ஆனாலும் மற்ற குரல்களையும் அவர் ரசிக்காமல் இருந்ததில்லை. முதன்முதலாக இசையமைத்த
‘ஒருதலை ராகம்’ படத்திலேயே,
🌹‘கடவுள் வாழும் கோயிலிலே கற்பூரதீபம்’ என்ற பாடலைக் கொடுத்தார். அவரின் குரலாலும் அந்தக் குரல் மூலம் நம்மைத் தொட்ட டி.ஆரின் வரிகளாலும் நாமே அழுது கரைந்தோம். ‘இரயில் பயணங்களில்’ படத்தில், ’வசந்தகாலங்கள் இசைந்து பாடுங்கள்’ என்ற பாடலைக் கேட்கும் போதெல்லாம், அந்த ‘பெல்பாட்ட’ காலத்துக்குள் சென்று பயணிக்கத் தொடங்கிவிடுவோம்.
அப்படியொரு மாயாஜாலக் குரல் ஜெயச்சந்திரனுடையது!
கமலும் சுஜாதாவும் நடித்த ‘கடல்மீன்கள்’ படத்தில், இளையராஜா ஜெயச்சந்திரனுக்காக ஒருபாடலைக் கொடுத்தார். கிட்டத்தட்ட, ஜெயச்சந்திரனுக்காகவே ஸ்பெஷலாக டியூன் போட்டிருப்பாரோ என்றே தோன்றும்
🌹 ‘தாலாட்டுதே வானம் தள்ளாடுதே மேகம்’ என்ற பாடல், நம்மையே தாலாட்டிவிடும். அதில் ‘சொர்க்கத்திலே இது முடிவானது சொர்க்கம் என்றே இது முடிவானது’ என்ற வரிகளை ஜெயச்சந்திரனின் குரலில் கேட்கும்போதே, சொர்க்கம் வந்து நம் வீட்டுவாசலின் கதவு தட்டும். அப்படியொரு ஏகாந்த சுகமான குரல் அது!
பாக்யராஜ் பாலக்காட்டு மாதவனாக நடித்த ‘அந்த 7 நாட்கள்’ படத்தில், மெல்லிசை மன்னரின் இசையில்
🌹 ‘கவிதை அரங்கேறும் நேரம்’ என்ற பாடலைக் கேட்டால், நமக்கே காதல் பூ குலுங்கிக் குலுங்கிப் பூக்கும். ‘’எங்கிட்ட அஞ்சு டியூன் இருக்கு. அதை தனித்தனியா தரமாட்டேன். மொத்தமா ஒரே படத்துக்குத்தான் தருவேன்’’ என்று இளையராஜா, நீண்டநாட்களாக அந்த ஐந்து டியூன்களை அடைகாத்து வைத்திருக்க, ஆர்.சுந்தர்ராஜன், அந்த டியூன்களைத் தட்டிக்கொண்டு செல்லவேண்டும் என்று
‘வைதேகி காத்திருந்தாள்’ உருவாக்கினார். ‘’இந்தா அஞ்சு டியூன், வைச்சிக்கோ’’ என்று இளையராஜா கொடுத்தார்.
🌹‘ராசாத்தி உன்னைக் காணாத நெஞ்சு காத்தாடி போலாடுது’ என்கிற பாடல், காதலர்களின் ஏக்கப் பாடல்.
🌹 ‘காத்திருந்து காத்திருந்து காலங்கள் போகுதம்மா’ என்பது காதலின் துக்கப்பாடல்.
🌹 ‘இன்றைக்கு ஏனிந்த ஆனந்தமே இன்பத்தில் ஆடுது என் மனமே’ என்கிற பாடல், காதலின் குதூகலம் உணர்த்திய பாடல். இந்த மூன்று பாடல்களும் முக்கனிச்சுவை. இந்த முக்கனிகளையும் ஜெயச்சந்திரனுக்கு... அவரின் பலாச்சுளைக் குரலுக்குமாக வழங்கினார்.
’ஆலிலையோ தொட ஆளில்லையோ’ எனும் வரிகளில் ஜீவனைக் குழைத்து தன் குரலில் தோய்த்துக் கொடுத்தார் ஜெயச்சந்திரன்.
🌹’மயங்கினேன் சொல்லத்தயங்கினேன்’ என்றால் நாமே மயங்கித்தான் போனோம். இயக்குநர் விக்ரமனின் இயக்கத்தில், எஸ்.ஏ.ராஜ்குமாரின் இசையில்,
🌹‘சொல்லாமலே யார் பார்த்தது’ என்ற பாடலை எத்தனை முறை வேண்டுமானாலும் கேட்டுக்கொண்டே இருக்கலாம்.

சொர்ணலதா

 1991 ல் வெளிவந்த ‘சின்னத்தம்பி’ திரைப்படத்தில்




🌹 “நீ எங்கே ….என் அன்பே…” என்ற பாடலில் சொர்ணலதா அவர்கள் குரலில் இருக்கும் தேடல் காற்றில் கலந்து நம் மனதை முகம்தெரியாத ஒரு காதலை நிச்சயம் தேட வைத்துவிடும். ....வள்ளி
2000 ஆம் ஆண்டு வெளிவந்த ‘அலைபாயுதே ‘ திரைப்படத்தில் ”

🌹எவனோ ஒருவன் வாசிக்கிறான் …..” பாடல் நம் மனம் வாழ்க்கையில் தொலைத்த யாரையோ தேடவைத்து விடுகிறது. இசைக்கருவிகளில் புல்லாங்குழலுக்கு என்று ஒரு இனிமை உண்டு. அதையும் மிஞ்சிவிடக் கூடிய இனிமை சொர்ணலதா அவர்களின் குரலிற்கு உண்டு என்பது இசைப் பிரியர்களுக்கு தெரிந்த உண்மை.
விருப்பமான சொர்ணலதாவின் பாடல்களை

🌹நட்புகள் தொடரலாம்...
பொதுவாக இசை என்பது செவி வழி நமக்குள் செல்லக்கூடிய ஒன்று. ஆனால் சொர்ணலதா அவர்கள் குரல் மட்டும் ஒரு கூர்மையான அம்பு போல நேரடியாக நம் இதயத்திற்குள் செல்லக்கூடிய வல்லமை பெற்றது.
ஜானகி அம்மா, S.P.B போன்றவர்களின் குரலை நம்மால் எந்தப் பாடலிலும் எளிதாய் கண்டுபிடித்துவிட முடியும். ஆனால் சொர்ணலதா அவர்கள் குரல் ஒவ்வொரு பாடல்களிலும் தனித்துவமாய் அமைந்து இருக்கும்.

🌹 ஏக்கப்பாடல், காதல் பாடல், ரொமான்ஸ் பாடல், கிராமியப் பாடல், துள்ளல் பாடல்கள் என்று எந்தமாதிரியான பாடல்களிலும் சொர்ணலதா அவர்களின் குரல் தனித்து ஒலிக்கும். மேலும் இசையமைப்பாளர்களுக்கும், அந்தப் பாடல்களுக்கும் நிச்சயம் ஹிட் கொடுத்து விடக் கூடிய மந்திரக் குரல் அது......
80 மற்றும் 90 களில் பெண்களுக்கு தாங்கள் நினைப்பதை எல்லாம் சொல்ல இப்போது போல.

🌹facebook , twitter , whatsapp என்று எதுவும் கிடையாது. அவர்கள் வாழ்வின் அத்தனை ரகசியமும் அவர்கள் மனதைத் தாண்டி அதிக பட்சம் அவர்கள் டைரிகளுக்குள்தான் ரகசியமாய் மறைந்து இருக்கும்.
பல பெண்கள் தங்களுக்குப் பிடித்த பாடல்களின் வரிகளை தங்கள் டைரியில் எழுதி வைத்து இருப்பர்.
இன்றும் அந்த வரிகளை வாசிக்கும் போது உங்கள் மனதில் சொர்ணலதாவின் குரலும் சேர்ந்தே ஒலிக்கும். சொர்ணலதா அவர்களின் குரல் பலருடைய உணர்வுகளின் உச்சம் என்றே சொல்லலாம்.

🌹அந்த அரபிக் கடலோரம்……
🌹திருமண மலர்கள் தருவாயா….. போன்ற பாடல்கள் சொர்ணலதா குரலில் இன்றும் கேட்கையில் கல்லூரியின் இனிப்பான நினைவுகள் மனதிற்குள் தேனைப் போல ஊறுகிறது.....

இன்றும் ‘வள்ளி’ படத்தில் வரும்.

🌹“என்னுள்ளே… என்னுள்ளே…” பாடலை பலர் whatsapp ஸ்டேட்டஸ் ஆக வைக்கும் போதும், சூப்பர் சிங்கர் போன்ற இசை நிகழ்ச்சிகளில் வளரும் இளம் பாடகர்கள் அவரது பாடல்களை விரும்பிப் பாடுவதைப் பார்க்கும் போதும்...

சத்ரியன் திரைப்படத்தில்
🌹மாலையில் யாரோ மனதோடு பேச மார்கழி வாடை மெதுவாக வீச தேகம் பூத்ததே ஓ ஓ ஓ மோகம் வந்ததோ
பலருடைய பேருந்துப் பயணங்களின் தனிமையில் ஒரு தாயாய், காதலியாய், சினேகிதியாய் சொர்ணலதா தன் குரல்களால் நம்மோடு பயணித்து இருக்கிறார்.
இன்றும் சில பாடல்களில் சொர்ணலதா குரலைக் கேட்கும் போது படத்தின் காட்சி அமைப்பை நம் கண்முன் கொண்டு வந்து நிறுத்துவதை விட அவரது குரலிற்குள் நாம் பொதித்து வைத்த அந்த நினைவுகள்தான் நமக்குள் மெல்ல அசைவாடும்.

இதுவே சொர்ணலதாவை
“அவருக்கு முன்பும், அவருக்குப் பின்னும் யாரும் அவர் போல இல்லை”
என்ற தனித்துவ அடையாளத்துடன் அவரது எண்ணற்ற ரசிகர்கள் மனதில் இன்றும் நீங்கா தேவதையாக அவரை வாழவைத்துக் கொண்டு இருக்கிறது.
சொர்ணலதா அவர்கள் குரலில் வெளிவந்த பாடல்களின் தொகுப்பை எடுத்து அதில் மென்சோகம் என்று வகைப்படுத்தி அப்பாடல்களை வரிசையாகக் கேட்டால் உங்கள் மனம் அந்தக் குரலுக்கு அடிமையாகி அந்த சோகத்தை சுமக்க ஆயத்தமாகிவிடும்.

தொடர்ந்து அவரது துள்ளல் பாடல்கள் தொகுப்பைக் கேட்டால் அவர் குரலுடன் நம் மனதும் ஆட்டம் போடத் தொடங்கிவிடும்.
அவரது காதல் குரல் நமக்கொரு காதல் இல்லையே என்று ஏங்க வைத்து விடும். இப்படி நான் மட்டும் அல்ல, இந்தியா முழுக்க ஏன், உலகளவிலும் கூட அவருக்கு ரசிகர்கள் உண்டு.
இந்திய மொழிகள் பலவற்றிலும் கிட்டத்தட்ட 7000 பாடல்களுக்கு மேல் பாடியிருக்கிறார்
🌹சொர்ணலதா உயிரை உலகில் இருந்து எடுத்துச் சென்ற எமனால் ஒருநாளும் சொர்ணலதாவின் குரலை நம்மைவிட்டு, இந்த உலகை விட்டு எடுத்துச் செல்லவே முடியாது எனத் தோன்றும்.....வள்ளி

🌹சொர்ணலதா அவர்கள் என்றும் என்றென்றும் நம்மோடு சதாகாலங்களிலும் தம்முடைய குரலால் உயிரோடே இருக்கிறார், இருப்பார்.

Monday 20 March 2023

சார்லி

 கே டிவியில் எபோது போடபட்டாலும் பார்க்கும் திரைப்படங்களில் ஒன்று "வெற்றிக் கொடி கட்டு". இன்றைய நெகட்டிவிட்டி உலகில் பாசிட்டிவிட்டியை அள்ளி தரும் படம். பார்த்திபன், வடிவேலும் காமெடியை தாண்டி படத்தில் வரும் ஒரு காட்சியை மட்டும் தவறவிடவே மாட்டேன். வெளிநாடு செல்லும் ஆசையில் பண்த்தை தொலைத்தவர்களின் கதை. அதில் ஒருவரான சார்லி ஊர் ஊராக அலைந்து கொண்டிருப்பார். படத்தில் இடையில் பார்த்திபனை பார்க்க வந்து மனோரமா கையால் சாப்பிடுவார். பிறகு திரும்ப செல்லும்போது பார்த்திபனும் பேசிக்கொண்டேச் செல்லும் காட்சி தான் அது. பணத்தை தொலைத்த ஏமாற்றம், எதுவும் செய்ய முடியாத இயலாமை, எதிர்காலம் பற்றிய தெளிவின்மை எல்லாம் சேர்த்து கிட்டத்தட்ட அரைப்பைத்தியம் நிலையில் தான் சார்லியின் கேரக்டர் வடிவமைக்கப்பட்டிருக்கும். பார்த்திபன் உடன் ஆற்றாமையோடு பேசிக்கொண்டே வரும் போது, ஒரே நொடியில் " அவந் மட்டும் என் கையில கிடைச்சான், அவன் ரத்ததை குடிக்காம விட மாட்டேன்" என்று கடும் ஆவேசமாகி, அடுத்த நொடியில் அதே இயலாமை, ஏமாற்ற உணர்வை வெளிப்படுத்தும் அந்த காட்சி தான் சார்லி என்னும் யானைக்கு கிடைத்த சோளப்பொறி. நடந்து வரும் பார்த்திபன் ஒரு நொடி தடுமாறி நிற்பார். அடுத்தமுறை அந்த படத்தை பார்க்கும் போது, இந்த காட்சியை காணத் தவறாதீர்கள். 






நினைவு தெரிந்த நாளில் இருந்து இன்று திரையில் பார்த்துக் கொண்டே இருப்பதால் சார்லியின் மகத்துவம் நமக்கு தெரியவில்லை. வெளியில் இருந்து வருபவர்களை வரவேற்று, உபசரித்து,சேவகம் செய்யும் நாம் எப்போதும் வீட்டில் இருப்பவர்களை கண்டு கொள்ள மாட்டோம். அதே போல தான் சார்லியும் நம் வீட்டைச் சேர்ந்தவர் போன்ற ஒரு நபர். அவருக்கு இன்னும் பெரிய அங்கீகாரம் கிடைக்க வேண்டும் என்பது என் விருப்பம். 

முரளி, சின்னி ஜெயந்துக்கு பிறகு தமிழ் சினிமாவில் நீண்ட காலம் காலேஜ் ஸ்டூண்டாக நடித்த பெருமை சார்லிக்கு உண்டு. மோதிரக்கையால் குட்டுப்பட்டவர் சார்லி. இயக்குனர் சிகரம் கே.பாலச்சந்தரால் திரையில் அறிமுகபடுத்தபட்டவர் தான் சார்லி. அதனால் அவரின் படங்களின் சார்லியின் பங்கு எப்போதும் இருக்கும். 1982ல் அறிமுகமான சார்லிக்கு தமிழ் சினிமாவில் இது 40வது வருடம். நகைச்சுவை நடிகனாக தனி ஆவர்த்தனம் செய்ததைவிட கும்பலாக இவர் நடித்தது தான் அதிகம் என்று நினைக்கிறேன். மற்ற நகைச்சுவை நடிகர்களுடன் சேர்ந்து நடிப்பதில் எந்த ஈகோவும் பார்க்காத நல்ல மனதுக்கரர். . சூப்பர் ஸ்டாருடன் தர்மத்தின் தலைவன் படத்தில் கரப்பான் பூச்சி காமெடி இன்றளவும் ரசிக்க வைக்கும். அதன் பிறகு தளபதி, வீரா படங்களில் இணைந்து நடித்திருப்பார். கமலுடன் சிங்காலவேலன் படம் தான் நினைவில் இருக்கிறது. 

சார்லிக்கு பெயர் சொல்லும் ஒரு படம் அது புது வசந்தம் தான். அந்த படத்தில் விகரமனுடன் ஏற்பட்ட நட்பு தான் அவருக்கு பூவே உனக்காக, உன்னை நினைத்து படங்களை பெற்றுத் தந்திருக்கும் என்று நினைக்கிறேன். ரஜினி, கமல், முரளி விஜய்காந்து என சீனியர் நடிகர்களுடன் நடித்தவர் அடுத்த தலைமுறை நடிகர்களான விஜய், அஜீத், பிரசாந்த் உடனும் கூட்டணி போட்டார். பாலச்சந்தர் பட்டறை என்பதால் இயக்குனர் சரண் படங்களிலும் தொடர்ந்து நடித்திருப்பார். 

இயக்குனர் வி.சேகரின் படங்கள் குறிப்பிட்டு சொல்ல வேண்டியவை. ஒன்னா இருக்க கத்துக்கனும், பொngகலோ பொங்கல். பொண்டாட்டி சொன்னா கேட்டுக்கனும், என தொடர்ந்து அவர் படங்களில் நடித்திருக்கிறார்.1980 களிலேயே சார்லிக்கு தனிப்பாடல் ஒன்று கிடைத்தது. நியாயத்தராசு படத்தில் "வெண்ணிலா என்னோடு வந்து ஆடவா" பாடலில் சார்லி தான் லீட் ஆர்டிஸ்ட். இணைந்த கைகள் படத்திலும் ஒரு பாடலுக்கு ஆடியிருப்பார். 

 2000த்துக்கு பிறகு வடிவேலுவுடன் கூட்டணி சேர்ந்து இவர் நடித்தது எல்லாமே அதிரிபுதிரி ஹிட். ப்ரெண்ட்ஸ், கோவில் இரண்டும் மணிமகுடம். சார்லி நல்ல நகைச்சுவை நடிகர் என்று சொல்வதை விட மிகச்சிறந்த குணச்சித்திர நடிகர் என்று சொல்லலாம். அதற்கான உதாரணம் தான் வெற்றிக் கொடி கட்டு படம். சமீபத்தில் மாநகரம், ஜீவா இரு படங்களும் சார்லியின் நடிப்புக்கு தீனி போட்டவை. சென்னையை பற்றி தவறாக பேசும் போது, "நாம கேட்ருக்கோமா சார்" என்று சார்லி கேட்கும் வசனம் யாராலும் மறக்க முடியாது. அதே போல் தான் ஜீவா படத்தில் அவரின் கேரக்டர். 

சார்லி கோவில்பட்டி அருகில் ஒரு கிராமத்தில் பிறந்தவர். காலேஜ் படிக்கும் போதே அவர் ஸ்டேஜ் ஆர்டிஸ்ட். நடிக்க வந்த பிறகும் மேல்படிப்பை முடித்திருக்கிறார். 2019 ம் ஆண்டு "தமிழ் சினிமாவின் வளர்ச்சிக்கு நகைச்சுவை நடிகர்களின் பங்கு" என்ற தலைப்பில் பி எச்டி செய்து டாக்டர் பட்டம் வாங்கியுள்ளார். 2004ல் கலைமாமணி விருதும் பெற்றுள்ளார். 800 படங்களுக்கு மேல் நடித்திருக்கிறார். 

Monday 12 September 2022

நடிகை ஸ்ரீவித்யா உச்சக்கட்டம்!

 நடிகை ஸ்ரீவித்யா அவர்களின் மிக சிறந்த முகபாவங்களில்...




இசையும் வரிகளும் இணைந்து,சிறப்பாய் விரிந்தது ஒரு பாடல் விருந்து..!
சாதாரணமாக ஒரு திரைப்படத்தின் உச்சக்கட்ட காட்சி சரியாக அமைய வேண்டுமானால் அதில் இசையமைப்பாளரின் பங்கு மிகவும் முக்கியமானது,
அது மசாலா படமாக இருந்தால் - கட்டாயம் உச்சக்கட்ட காட்சி என்பது ஒரு சண்டைக்காட்சியாகத்தான் இருக்கவேண்டும். காட்சிக்கு விறுவிறுப்பை ஏற்றி ரசிகர்களின் இதயத்துடிப்பை அதிகரிக்கச் செய்யவேண்டும்.
சமூகப் படமாக - குடும்பக் கதைப்படமாக இருந்தால் தாய்க்குலங்களின் புடவை தலைப்பை நனைக்கும் அளவுக்கு காட்சிக்கு உருக்கத்தை இசையால் ஏற்படுத்த வேண்டும்.
இதுதான் பொதுவாக நமது தமிழ் திரைப்படங்களின் எழுதப்படாத சட்டம்.
இந்தச் சட்டத்துக்கு விதிவிலக்காக படத்தின் உச்சகட்ட காட்சிக்கான பரபரப்பை ஒரு கர்நாடக இசைக் கச்சேரி பாடல் காட்சி மூலம் அமைத்தால் ....அது சரிப்பட்டு வருமா?
அதுவும் விறுவிறுப்பான வயலின்களின் வீச்சோ, தபேலா, ட்ரம்ஸ், பாங்கோஸ் ஆகியவற்றின் வேகமான தாளக்கட்டோ, கிடார் பியானோக்களின் இடைமீட்டல்கள் எதுவும் இல்லாமல், வெறும் கர்நாடக இசைக்க கச்சேரி மேடைகளில் பயன்படுத்தப்படும் ஒற்றை வயலின், ஒற்றை மிருதங்கம், கட்டம், கஞ்சீரா, மோர்சிங் ஆகியவற்றை மட்டுமே வைத்து அமைத்தால் ... சரியாக வருமா? க்ளைமாக்ஸ் சிறப்பாக அமையுமா?
அமையும். அந்தக்காட்சிக்கு இசை அமைப்பவர் மெல்லிசை மன்னர் எம்.எஸ். விஸ்வநாதனாக இருந்தால் ...
நூற்றுக்கு நூறு சிறப்பான ஒரு க்ளைமாக்ஸ் காட்சியை இயக்குனரால் கொடுக்க முடியும்.
இதற்கு மிகச்சரியான உதாரணம் 1975-இல் வெளிவந்த கே. பாலசந்தரின் "அபூர்வ ராகங்கள்".
முதல் முதலாக ஒரு பாடல் மூலம் உச்சகட்ட காட்சி அமைக்கப்பட்ட முதல் தமிழ்ப் படம் "அபூர்வ ராகங்கள்" தான்.
அந்த வகையில் இந்தக் காட்சி சிறப்பாக அமைந்திருக்கிறது என்றால் அதற்கு காரணம் ஒரு வசனகர்த்தாவின் வேலையை கவியரசரும் இயக்குனரின் பணியை மெல்லிசை மன்னரும் மேற்கொண்டதுதான்.
இவர்கள் இருவரும் இல்லை என்றால் இப்படி ஒரு பாடல் காட்சியை உச்சகட்ட காட்சியாக அமைக்கும் எண்ணம் இயக்குனருக்குத் தோன்றியே இருக்காது.
அந்த அளவுக்கு பாடலும் இசையும் காட்சியாக சங்கமித்த அற்புதம் இதுதான்.
பிரிந்து சேர்ந்த ஒரு தந்தையும் மகனும் மீண்டும் சந்திக்கிறார்கள்.
எப்படிப்பட்ட சூழ்நிலையில்...
தந்தை மறுமணம் செய்துகொள்ளவிருக்கும் பெண்ணின் தாயை மனக்கவிருக்கும் மகனாக .. அதாவது தந்தைக்கு மகனே மாமனாராக, தாய்க்கு மகளே மாமியாராக..
இப்படி ஒரு சிக்கலின் ஆரம்பகர்த்தாவான மகன்தான் ஒரு தீர்வு சொல்லவேண்டிய இடத்தில் இருக்கிறான். அவன்தானே "கேள்வியின் நாயகன்."
இதோ கவிஞர் வார்த்தைகளால் விளையாடுகிறார்...
பாடலின் பல்லவியிலேயே மெல்லிசை மன்னர் தர்பாரி கானடா ராகத்தை உச்சத்திலேற்றி தனது இசை விளையாட்டை ஆரம்பித்துவிடுகிறார்.
"கேள்வியின் நாயகனே. இந்த கேள்விக்கு பதில் ஏதய்யா" சட்டென்று மேலே ஏறி அதே வேகத்தில் கீழே இறங்கி.. ஒற்றை வயலினில் ஒரு ராக சஞ்சாரம்.
"இல்லாத மேடை ஒன்றில் எழுதாத நாடகத்தை
எல்லோரும் பார்க்கின்றோம் நாமே எல்லோரும் ரசிக்கின்றோம்."
ஒரு இசைக்கச்சேரியில் பாடகியான அம்மா பாட, கீழே மகளும், மகனை பிரிந்த தந்தையும் முன்வரிசையில் அமர்ந்திருக்க, அவரது மகன் மேடையில் மிருதங்கம் வாசிக்க...
அவனுக்கு நிதர்சனத்தை உணர்த்தும் வண்ணம் மேடையில் பாடகி இசைக்கிறாள். அவளும் உணர்ச்சிக்கொந்தளிப்பில் தானே இருக்கிறாள்!
அந்தக் கொந்தளிப்பை இசையில் ஒற்றை வயலின், மிருதங்கம், கடம் ஆகியவற்றின் சேர்க்கையோடு மட்டுமே வெளிப்படுத்த வேண்டும். அதை எத்தனை லாவகமாக நமது மெல்லிசை மன்னர் செய்திருக்கிறார்!

"பசுவிடம் கன்று வந்து பாலருந்தும் - கன்று
பாலருந்தும் போதா காளை வரும்.
சிலரது வாத்தியத்தில் இரண்டு பக்கம் - கொஞ்சம்
சிந்தை செய்தால் உனக்கும் பிறக்கும் வெட்கம்.
தாலிக்கு மேலும் ஒரு தாலி உண்டா - வேலிக்கு
மேலொருவன் வேலி உண்டா.
கதை இப்படி அதன் முடிவெப்படி..
கதை இப்படி அதன் முடிவெப்படி...
மிருதங்கத்தை சிறப்பான தாளக் கட்டோடு முதல் சரணம் முடிய அதற்கு முத்தாய்ப்பாக வயலின் தர்பாரி கனடாவை ஒரு வீச்சு மூலம் பிரதிபலிக்க...
இசையின் துணையோடு ரசிகர்களை இருக்கை நுனிக்கு கொண்டு வரும் திருப்புமுனைக் கட்டம்...

"தோம்..தோம்.." என்று மிருதங்கத்தின் தொப்பியிலிருந்து வரும் அதிர்வு .. காட்சியோடு சேர்ந்து நம்மையும் அதிர வைக்கிறது.
மேடைப்பாடகியை காதலித்து ஒரு குழந்தைக்கு தாயாக்கி விட்டு சென்ற காதலன் இத்தனை வருடங்களுக்குப் பிறகு இப்போது அந்த அரங்கின் கடைசியில் நின்று கொண்டிருக்கிறான். அங்கிருக்கும் ஒரு சிறுமியின் கையில் ஒரு சிறு காகிதத்தை கொடுத்து பாடகியிடம் அனுப்புகிறான்.
மேடையில் தனி ஆவர்த்தனம் களை கட்டி மிருதங்கம், கடம், கஞ்சிரா, மோர்சிங் ஆகியவற்றின் துரிதமான இசைக் கார்வைகள் விறுவிறுப்பை கூட்டி அடுத்தகணம் வயலினின் வீச்சுக்கேற்ப சர்வ லகுவுக்கு நகர்த்துகிறார் நமது மெல்லிசை மன்னர். பாடகி தன்னிடம் கொடுக்கப்பட்ட துண்டுச்சீட்டை நேயர் விருப்பப் பாடலைக் கேட்டு அனுப்பப்பட்ட சீட்டாக எண்ணி சாதாரணமாக பார்க்க - பரபரத்து போகிறாள். அவளது கண்கள் பாடிக்கொண்டே தனது தலைவனை தேடுகின்றன.

"தலைவன் திருச்சானூர் வந்துவிட்டான்.
மங்கை தர்ம தரிசனத்தை தேடுகின்றாள் .. தேடுகின்றாள் ..
அலமேலு அவன் முகத்தை காண்பாளோ - நங்கை
அவனோடு திருமலைக்கு செல்வாளோ ..செல்வாளோ..
சரணத்தை முடித்து முத்தாய்ப்பாக கடைசி வரியில் பக்க வாத்தியங்கள் அடங்க...
உணர்ச்சிக்கொந்தளிப்பில் இருக்கும் அவள் பாட முடியாமல் திணற...
"கேள்வியின் நாயகனே .. இந்தக் கேள்விக்கு.. " மெல்லிய விசும்பலோடு அவள் தடுமாற , "தத்திங்கின்னத்தோம்ம்" என்று தாளவாத்தியங்கள் இடைவெளியை இட்டு நிரப்ப...
சமாளித்துக்கொண்டு மீண்டும் தொடர்கிறாள் அவள்.
""கேள்வியின் நாயகனே .. இந்தக் கேள்விக்கு.. ".. மேலே பாடமுடியாமல் பாடகி தவிக்க..."பதில் ஏதய்யா " என்று இன்னொரு குரல் எடுத்துக்கொடுக்க...
திரும்பிப்பார்த்தால்... பிரிந்து சென்ற மகள் மீண்டும் வந்து தாயினிடம் அமர்கிறாள்..
தாயும் மகளும் ஒன்று பிரிந்தவர் கூடினால்...பேச்சே எழாமல் சந்தோஷம், துக்கம், பரவசம் இன்னதுதான் என்று இனம் பிரித்து சொல்லமுடியாத தவிப்பும், உணர்ச்சிக்கொந்தளிப்பும் .. அனைத்தையுமே ஒற்றை வயலினில் வீச்சில் அற்புதமாக கொண்டுவந்து விடுகிறார் மெல்லிசை மன்னர். இதுவரை பவனி வந்த தர்பாரி கானடாவிலிருந்து சட்டென்று ராகத்தை மாற்றி விட உணர்ச்சிப்பெருக்கை "அமிர்தவர்ஷிணி" ராகத்தை கையாண்டு மழையாக பிரவகிக்க வைக்கிறார் மெல்லிசை மன்னர்.
கவிஞரின் வரிகளும் தாய் மகள் சம்பாஷணையாக வந்து விழுகின்றன.
இதுவரை இருந்த மென்னடை மாறி இப்போது துரிதகால பிரயோகமாக இந்தச் சரணத்தை அமைத்து மகிழ்ச்சிப்பெருக்கை இடை வெளி இல்லாமல் வேகமாக பிரயோகங்களும் சங்கதிகளும் வருமாறு கையாண்டு இருக்கிறார் மெல்லிசை மன்னர்.
தாய்: ஒரு கண்ணும் மறு கண்ணும் பார்த்துக்கொண்டால் ..
மகள் : பார்த்துக்கொண்டால் ..
தாய்: அவை ஒன்றோடு ஒன்று சொல்லும் சேதி என்ன?
மகள் : இரு கண்ணும் ஒன்றாகச் சேர்ந்துவிட்டால் அவை இரண்டுக்கும் பார்வையிலே பேதம் என்ன.
தாய்: பேதம் மறைந்ததென்று கூறடி கண்ணே..
மகள் : நமது வேதம் தன்னை மறந்து நடக்கும் முன்னே.
தாய்: கண்ணே உன் காலம் சென்ற கதை என்ன?
மகள்: உன்னை காண பிரிந்திருந்தேன் வேறே என்ன?
தாய்: உடல் எப்படி?
மகள்: முன்பு இருந்தாற்படி
தாய்: மனம் எப்படி?
மகள் : நீ விரும்பும்படி..
அமிர்தவர்ஷினியை உச்சத்தில் ஏற்றி சட்டென்று மீண்டும் பல்லவிக்கு வரும்போது தர்பாரி கானடாவை கண்ணிமைக்கும் நேரத்திற்குள் கொண்டு வந்துவிடுகிறார் மெல்லிசை மன்னர்.
இப்போது ஒரு சிறுமாறுதலுடன் ...
"கேள்வியின் நாயகியே இந்தக் கேள்விக்கு பதிலேதம்மா
இல்லாத மேடை தன்னில் எழுதாத நாடகத்தை
எல்லோரும் பார்க்கின்றோம் நாமே எல்லோரும் ரசிக்கின்றோம்.
கேள்வியின் நாயகியே இந்தக் கேள்விக்கு பதிலேதம்மா..
இப்போது உச்சக்கட்டம் முடிவுக்கு வரும் நேரம். சாதாரணமாக ஒரு கர்நாடக இசைக்கச்சேரியின் முடிவில் பாடப்படும் ராகம் மத்யமாவதி. இந்த மேடை சம்ப்ரதாயம் மீறாத வண்ணம்.. இப்போது கடைசி சரணத்தை மத்யமாவதி ராகத்தைக் கையாண்டு அமைத்திருக்கிறார் மெல்லிசை மன்னர்.

இது பிரிந்த தந்தையையும் மகனையும் ஒன்று சேர்க்கும் சரணமாக கவிஞரின் கைவண்ணத்தில் மலர்கிறது..

"பழனி மலையில் வாழும் வேல் முருகா - சிவன்
பல்லாண்டு ஏங்கி விட்டான் வா முருகா.
பிடிவாதம் தன்னை விட்டு விடு முருகா - வந்து
பிரியத்துடன் பக்கத்திரு முருகா.
திரு முருகா..திரு முருகா.."
என்று மத்யமாவதியை உச்சத்தில் ஏற்றிவைத்து உச்ச கட்டக் காட்சியை கச்சிதமாக முடித்துவைக்கிறார் மெல்லிசை மன்னர்.
வாணி ஜெயராம் - பி.எஸ். சசிரேகாவின் குரல்களில் வெளிப்படும் உணர்ச்சிகள் - பாடலுக்கு ஏற்றபடி காட்சி அமைப்புகள் .
இந்த இறுதிக்கட்ட காட்சியில் வென்றவர் இயக்குனர் கே. பாலசந்தரா - கவியரசரா - மெல்லிசை மன்னரா ? ஆண்டவனே வந்தாலும் தீர்ப்பு சொல்வது கடினம்.
மெல்லிசை மன்னரை கேட்டால் "நான் என்ன செய்தேன்? எல்லாம் அவங்க சிச்சுவேஷன் வச்சு அதுக்கு ஏத்தபடி பாட்டு கேட்டாங்க. நான் போட்டுக்கொடுத்தேன். அவ்வளவுதான்." என்று தான் சொல்வார்.
அதனால்தான் அவர் மெல்லிசை மன்னர்!
இணையத்திலிருந்து..
அரசரையும் மன்னரையும் வணங்கி மகிழ்வோம்!