Wednesday 21 November 2018

அந்த விஷயத்துக்கு அடிபோட்டு தான் ஹீரோவுக்காக அட்ஜஸ்ட் செய்கிறாரா நடிகை?

ர்ச்சை நடிகை கோட் நடிகருக்காக விட்டுக் கொடுப்பது ஒரு விஷயத்தை மனதில் வைத்து தானோ என்ற கேள்வி எழுந்துள்ளது.


சர்ச்சை நடிகைக்கு கோட் நடிகர் என்றால் மிகவும் பிடிக்கும். இதை அவரே பல பேட்டிகள், விருது விழா மேடைகளில் தெரிவித்துள்ளார். இந்நிலையில் கோட் நடிகரின் படம் ரிலீஸாவதால் தனது பட ரிலீஸை தள்ளிப் போட்டுள்ளார்.
முன்பும் கூட அவரின் பட ரிலீஸ் ஒரு ஹீரோவுக்காக தள்ளிப் போனது. ஆனால் அதில் நடிகைக்கு கோபம் தான் வந்தது.

நடிகை கோட் நடிகருக்காக தனது பட ரிலீஸை மகிழ்ச்சியுடன் ஒத்தி வைத்துள்ளார். மேலும் கோட் நடிகரின் படத்தில் எந்தவித நிபந்தனையும் விதிக்காமல் நடித்துக் கொடுத்துள்ளார். அட சம்பள விஷயம் பற்றி கூட பேசாமல் அந்த படத்தில் நடிக்க ஒப்புக் கொண்டார். இதற்கெல்லாம் காரணம் கோட் நடிகர் தான்.

தனது காதலரின் படத்தில் கோட் நடிகர் நடிக்க வேண்டும் என்பது நடிகையின் ஆசை. இது தொடர்பாக முன்பே முயற்சி செய்தும் நடக்கவில்லை. அதன் பிறகே அண்ணன் நடிகரிடம் பேசி தனது காதலரின் படத்தில் நடிக்க வைத்தார். இந்நிலையில் கோட் நடிகருக்காக நடிகை இந்த அளவுக்கு இறங்கி வருவதற்கு காரணம் உள்ளது என்று கூறப்படுகிறது.



கோட் நடிகரை தனது காதலரின் இயக்கத்தில் நடிக்க வைக்கவே நடிகை விட்டுக் கொடுப்பதாக கூறப்படுகிறது. கிளமாருக்கு டாட்டா காட்டிய நடிகை கோட் நடிகரின் படத்தில் கவர்ச்சியாக நடித்துள்ளாராம். ஆனால் அது அந்த படத்திற்கு மட்டும் தானாம். அந்த படத்தை பார்த்து யாரும் தன்னை கவர்ச்சியாக நடிக்குமாறு கேட்க வேண்டாம் என்கிறாராம் நடிகை.

முன்னணி நடிகையாக இருந்தும், ஹீரோக்களுக்கு இணையான மார்க்கெட் இருந்தும் அவர் இவ்வளவு விட்டுக் கொடுத்துள்ளார். அவருக்காக கோட் நடிகர் நடிகையின் காதலரின் படத்தில் நடிப்பாரா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம். அது ஏன், எத்தனையோ ஹீரோக்கள் இருந்தும் கோட் நடிகரை தான் தனது காதலரின் படத்தில் நடிக்க வேண்டும் என்று அடம்பிடிக்கிறார் அம்மணி?

Saturday 13 October 2018

"கைப்புள்ளயா நொண்டுனது நடிப்புன்னா நினைச்சீங்க?" -- வடிவேலு ஸ்பெஷல்

ங்கிலிஷ் கலக்காம தமிழ் பேச முடியலைனு நிறைய பேர் சொல்றதைப் பார்க்க முடியும். ஆனா, இன்னைக்குப் பலரால வடிவேலுவின் காமெடி பன்ச் பேசாம அன்றாடம் பேசவே முடியிறதில்ல.

‘என்ன! சின்ன புள்ளத்தனமா இருக்கு’,
‘ஆணியே புடுங்க வேண்டாம்’
‘வட போச்சே’
- இதெல்லாம் சர்வ சாதாரணமா தினம் தினம் நம்மையே அறியாமல் பேசி, 'வடிவேலுயிஸத்தில்’ மாட்டிகிட்டு இருக்கோம் என்பதற்கான எடுத்துக்காட்டு. வடிவேலு ஒரு சகாப்தம். இன்னைக்கு இருக்கிற இ(ளை)ணைய தலைமுறையின் கையில் இருக்கும் ஸ்மார்ட் போன் வரை நாம் நின்னு பேசுவோம் என அவர் நினைச்சி நடிச்சிருக்காரு பாருங்க... அதாங்க, அவர்!
சார்லி சாப்ளினின் அப்பா குடிக்கு அடிமையாகிப்போனார், அவர் அம்மா மனநலம் பாதிக்கப்பட்டார் எனப் பல கஷ்ட நஷ்டங்களுக்கு நடுவில்தான் சாப்ளின் நம்மை சிரிக்க வைத்தார். அப்படித்தான் நம்ம வைகைப் புயலும் பல கஷ்டங்களுக்கு நடுவில்தான் சினிமா வந்து ஜெயித்திருக்கிறார். இவரையும் சார்லி சாப்ளினையும் ஒப்பிட்டு கேள்வி கேட்டா, அப்போகூட 'அவரு எவ்வளவு பெரிய உயரம் தொட்ட மனுஷன், நீங்க வேற ஏன்ணே?' எனச் சொன்ன வைகைப் புயல், 'ஒரு விஷயத்துல என்னையும் அவரையும் ஒப்பிடலாம்ணே... ரெண்டுபேரும் வறுமைக்கு வாக்கப்பட்டவர்கள்' என ரத்தினச் சுருக்கமாகச் சொன்னார்.

சோகத்தைத் தாங்கனும்னா, அதைல் கண்டுக்கவே கூடாதுணே... அது கொஞ்சம் பொறுத்து பொறுத்துப் பார்க்கும். அப்பறம் இவனை ஒன்னும் பண்ண முடியாதுனு இடத்தைக் காலி பண்ணிடும்ணே!' என தன் ஸ்ட்ரெஸ் ரீலிவிங் பத்தி சொல்றார். ஒருநாள் கால்ல பலத்த அடியாம் இவருக்கு. ஷூட்டிங் வேணாம்னு டாக்டர்ஸ் சொல்ல, அந்த நேரத்துலதான் வழக்கத்தைவிட அதிகமா ஷூட்டிங்ல கலந்துக்கிட்டு நடிச்சார். 'வின்னர்' படத்துல நொண்டி நொண்டி நடிச்சிருப்பாரே நம்ம கைப்புள்ள?! அது நடிப்பில்லை, வேதனையோட துடிப்பாம்.

இன்னைக்கு வைகைப் புயலுக்கு பெயர், புகழ், பணம் இருந்தாலும் அன்னைக்கு அவர்கிட்ட ஒரு லட்சம் ரூபாய் இல்லாத காரணத்தால அவரோட அப்பாவைக் காப்பாத்த முடியாம போனது வடிவேலு வாழ்க்கையில் மிகவும் வருத்தமான விஷயம். 'என்ன பண்றதுணே ஆண்டவன் ஒன்ன பறிச்சுட்டுத்தான் இன்னொன்ன கொடுக்குறான்' என்கிறார் வடிவேலு.
வடிவேலு சென்னை வந்த கதையே ரொம்ப சுவாரஸ்யம். சென்னை கிளம்பிய வைகைப்புயலுக்கு மனசுல நிறைய கனவு இருந்தது. ஆனா, பாக்கெட்டில் பத்து பைசா இல்லை. வீட்டுல இருந்த சமையல் சட்டியை வித்து 80 ரூபாயைத் தேத்தியிருக்கார் மனுஷன். 'வாழ்க்கையில ஜெயிக்கணும், இல்ல மெட்ராஸ்லேயே செத்துடணும்' என அவருக்குள்ளே சொல்லிட்டு சென்னைக்குக் கிளம்பிய வடிவேலு, பஸ்ல ஏறலை. சென்னை வரைக்கும் லாரியில டிரைவர்கூட பக்கத்துல உட்கார்ந்து வரணும்னா, 25 ரூபாய். லாரி டாப்ல படுத்துக்கிட்டு வரணும்னா 15 ரூபாய். லாரியில் போவோம் என யோசிச்ச வடிவேலு, 'லாரி டாப்ல படுத்துக்கிட்டு போறேண்ணே!' எனச் சொல்லிட்டு, 'ரைட் போலாம்' எனத் துண்டை உதறியிருக்கிறார். சினிமா கனவை நினைச்சுக்கிட்டே படுத்திருந்த வடிவேலுவுக்கு, செம குளிர். உடம்பு வெடுவெடுக்க, மனசைத் தேத்திக்கிட்டு நடுங்கிக்கிட்டே கெடந்திருக்கார், வடிவேலு. கண் அசந்த நேரம், பையில் இருந்த பைசா காத்துல பறந்துடுச்சு!

வண்டி மெல்ல நகர்ந்து சமயபுரம் வர, சாப்பிடுறதுக்கு டிரைவர் கீழே இறங்குறார். நம்ம வடிவேலு அழுதுகிட்டே மேலே இருந்து கீழே இறங்கி வர்றார். 'அண்ணே, வண்டியில படுத்திருந்தேனா, காசு காத்துல பறந்துடுச்சு!' என அழ, பக்கத்தில் இருந்தவங்கெல்லாம் 'டேய் உன்னை மாதிரி எத்தனையோ பேரைப் பார்த்திருக்கோம்' என சிரித்திருக்கிறார்கள். சில நிமிடங்களுக்குப் பிறகு, 'சரிடா, சாப்பிட்டியா?' என டிரைவர் வடிவேலுவிடம் கேட்டு, அவரை அதிரவெச்சிட்டு, இரண்டு புரோட்டா வாங்கிக் கொடுத்து, புரோட்டாவுக்கான பணத்தை அவரே செட்டில் செய்து, 'விட்றா பார்த்துக்களாம்' எனத் தோளில் தட்டிக்கொடுத்திருக்கிறார். காலையில் தாம்பரம் வர, கீழே இறங்கிய வடிவேலுவுக்குக் கையில் கொஞ்சம் பணமும் திணித்து, அவரைப் பார்த்து ஒரு சிரிப்பு சிரித்தாராம், அந்த டிரைவர்.
அன்னைக்கு அந்த லாரி டிரைவர் வடிவேலுவுக்குக் கொடுத்தது பணம் மட்டுமில்ல, மனசுல தைரியமும்தான்.
நாம இன்னைக்கு வடிவேலு படம் பார்க்க கூட்டம் கூட்டமா தியேட்டருக்குப் படை எடுக்கிறோம். ஆனா, வடிவேலு ஆரம்ப காலத்துல படம் பார்த்த கதை தெரியுமா? படம் பார்க்க காசு கிடைக்காது என்பதால, வடிவேலுவும் அவர் ஃபிரெண்டும் நல்ல டீல் ஒன்னு பேசியிருக்காங்க. தியேட்டர் டிக்கெட் செலவு அவர் நண்பரோடது. அதுக்குப் பதிலா, அவரை சைக்கிள்ல டபுள்ஸ் அடிக்கிறது. அப்படி மாங்கு மாங்கென சைக்கிள் மிதிச்சுதான் பல எம்.ஜி.ஆர் படங்களைப் பார்த்து ரசிச்சிருக்கார், வைகைப்புயல். பட இன்டர்வெல்ல, 'இரு மாப்ள... சைக்கிள் வெளியே நிக்குதானு பார்த்துட்டு வந்துட்றேன்' என நழுவுற அந்த நண்பன், கேண்டீன்ல போய் ரெண்டு முட்டை போண்டாவை முழுங்கிட்டு, ஒண்ணும் தெரியாத மாதிரி வடிவேலு முன்னாடி வந்து அமர்வாராம். வடிவேலும் எதுவும் தெரியாத மாதிரியே கடைசி வரை காட்டிக்கிட்டு இருந்துக்குவாராம். நடிகர் ஆனபிறகு, வடிவேலு அவரைக் கூட வெச்சிகிட்டாராம். ஆனா, நண்பன் வளர்ந்த பொறாமை தாங்க முடியாம, அவரே கொஞ்சநாள்ல போயிட்டாராம்.

வடிவேலுகிட்ட ஒருமுறை, 'படத்துல நீங்க பேசுன பல வசனங்கள் நீங்களே எழுதினதுதானே.. ஏன் நீங்க காப்பிரைட் கேட்கக்கூடாது?' எனக் கேட்டப்போ, 'அட ஏன்ணே நீங்க வேற! அதுக்கு அவசியமே இல்லணே, மக்களுக்கு அது பிடிச்சிருக்கு. அவங்க சந்தோஷத்தை எப்படிணே நான் பரிச்சுக்க முடியும்... நாம போட்ட சாப்பாட்டை ஒருத்தர் சாப்பிடும்போது, அதை அடிச்சுப் புடிங்கிட்டு வந்தா நல்லா இருக்குமா? அதுமாதிரிதான் காப்பிரைட் கேட்குறது. அவங்க நல்லா நிம்மதியா சாப்பிட்டுக்கிட்டு சந்தோஷமா இருக்கட்டுமே!" எனச் சொல்கிறார், வடிவேலு. இந்த நல்ல மனசுக்கும் அவரது கடின உழைப்புக்கும்தான் வடிவேலு படங்கள் சமீபத்தில் ரீலிஸ் ஆகாமல் இருந்தாலும், அவர் முகம் தியேட்டர் திரையில் வராமல் இருந்தாலும், வடிவேலு வசனத்தை உச்சிரிக்காத வாய் இங்கே இருக்க முடியாது. வடிவேலு படத்தை வைக்காத ஒரு மீம் டெம்பிளேட் இருக்க முடியாது. அதனால, இந்தப் புயல் உலகத் தமிழர்கள் மனதில் இன்னைக்கு மையம் கொண்டிருக்கு.

தோற்றத்தாலும் நடிப்பாலும் உயர்ந்த நடிகர் - இரகுவரன்

தமிழ்த்திரையுலகு தந்த நடிகர்களில் இரகுவரனுக்குத் தனியிடமுண்டு. தோற்றத்தால் விளங்கிய உயரத்தை நடிப்பிலும் தொட்டவர் அவர். இந்தி நடிகர் திலீப்குமார் பார்த்து வியந்த தமிழ் நடிகர். உடைந்து தடுமாறுவதைப்போன்ற குருத்துக்குரலை வைத்துக்கொண்டு எதிர்நாயகப் பரப்பில் வன்மையான நடிகராக வலம்வந்தார். சத்தியராஜ், நிழல்கள் இரவி, இரகுவரன் ஆகிய மூவரும் எதிர்நிலை, இடைநிலை வேடங்களில் தொடர்ந்து நடித்தபடி முன்னேறியவர்கள். மூவரும் கோவைப்பின்னணி கொண்டவர்கள். வாட்ட சாட்டமானவர்கள்.


அம்மூவரில் சத்யராஜ் தொடர்ந்து சந்தை மதிப்பு தளராதவராயிருந்தார். நிழல்கள் இரவிக்கு நாயகப் படங்கள் பல அமைந்தாலும் அவரால் முன்னணி இடத்தைப் பெறமுடியவில்லை. இரவி நாயகனாக நடித்த "அம்மன் கோவில் திருவிழா, நான் புடிச்ச மாப்பிள்ளை" ஆகிய படங்கள் வெளிவந்தபோது திரையரங்குகளின் முன்னே கூடிய கூட்டம் நினைவிருக்கிறது. தம்மை வைத்துத் தொடர்ச்சியாகப் படமெடுக்கும் முதலாளிகளும் இயக்குநர்களும் அமையப்பெற்ற நடிகர் முன்னணி இடத்தைப் பிடிக்கிறார். நிழல்கள் இரவி பாரதிராஜாவின் அறிமுகம். அப்பெயரின் முன்னொட்டு அவர் அறிமுகமான படத்தைக் குறிப்பதுதான்.

அம்மூவரும் பல படங்களில் ஒன்றாக நடித்தனர் என்றாலும் இரகுவரனைத் தனித்துக் காட்டிய படம் ஒன்றுண்டு. 'மக்கள் என் பக்கம்' என்பது அப்படத்தின் பெயர். சாம்ராஜ் என்னும் கள்ளக்கடத்தல் தொழிலதிபர் வேடம் சத்தியராஜுக்கு. அவருடைய இரண்டு உதவியாளர்கள் இரகுவரனும் நிழல்கள் இரவியும். அரசியல்வாதிவாக வரும் இராஜேஷின் நோக்கம் சாம்ராஜினை அழித்துவிடவேண்டும் என்பது. இராஜேஷைக் கொன்றுவிட வேண்டும் என்று சாம்ராஜ் வகுத்த திட்டப்படி இரகுவரனும் நிழல்கள் இரவியும் இராஜேஷின் மகிழுந்து வரும் வழியை மறித்து துப்பாக்கிச் சூட்டில் ஈடுபடுவார்கள். அம்முயற்சியில் இரவி இறந்துவிட, படுகாயங்களோடு தப்பி வரும் இரகுவரன் சத்தியராஜின் மடியில் தம்முயற்சித் தோல்வியை நடிப்பால் சொல்லியபடி உயிர்விடுவார். அந்தக் காட்சியில் மட்டுமில்லை, அந்தப் படத்திலும்கூட இரகுவரனுக்கு உரையாடல்கள் பெரிதாய் இல்லை. ஆனால், துடிதுடித்து உயிர்விடும் காட்சியில் அவர் நடிப்பைப் பார்த்த பார்வையாளர்கள் திகைத்துப் போய்விட்டனர். இரகுவரன் திறமையான நடிகர் என்பது அன்று நிறுவப்பட்டது.


ஆயிரத்துத் தொள்ளாயிரத்து எண்பத்திரண்டாம் ஆண்டில் 'ஏழாவது மனிதன்' என்ற திரைப்படத்தில் அறிமுகமானபோதும் இரகுவரனை அடையாளங்காட்டிய முதற்படம் 'சம்சாரம் அது மின்சாரம்'. அம்மையப்ப முதலியாரும் அவருடைய மூத்த மகன் சிதம்பரமும் வீட்டுக்குள் மோதிக்கொள்ளும் காட்சியை இன்றைக்கு நினைத்தாலும் பதைபதைக்கிறது. உரையாடல்களை மடித்துத் தெறித்துப் பேசுவதில் வல்லவரான விசுவோடு நேர்நிகராக எதிர்த்து நடித்தார். உறவுகளின் பெற்றி அறியாமல் காசுக் கணக்கு பார்க்கும் பலரும் இரகுவரனின் உருவில் தம்மை உணர்ந்தனர். இரகுவரனின் பெயர் பரவத் தொடங்கியது. அவ்வாண்டிலேயே 'மிஸ்டர் பாரத்' என்ற படத்தில் அடிதடிக் காட்சி. எல்லா வகையானும் நடிக்கக் கூடியவர் என்பதைத் திரையுலகம் ஏற்றுக்கொண்டது.

மந்திரப் புன்னகை, ஊர்க்காவலன் போன்ற பெரிய படங்களில் இரகுவரனே எதிர்நாயகன். அதனால் சிறிய படங்களின் நாயகனாகும் வாய்ப்பு இரகுவரனைத் தேடி வந்தது. ஆர்.சி. சக்தி இயக்கிய "கூட்டுப் புழுக்கள்" என்ற திரைப்படம் வெற்றியும் பெற்றது. வேலையில்லாக் கொடுமையால் நிறைவேறாக் காதலோடு தளர்ந்து நிற்பவன். அவ்வேடத்திற்கு இரகுவரன் பிசிறின்றிப் பொருந்தினார். கைநாட்டு, மைக்கேல்ராஜ் போன்ற படங்கள் அவரை நாயகனாகத் தூக்கி நிறுத்தத் தவறின. அவ்வமயம் எதிர்நிலை, இடைநிலை வேடங்கள் அவர்க்கு வந்து குவியத் தொடங்கின.
இரகுவரனின் நடிப்புக்குத் தீனி போட்ட இரண்டு படங்கள் பாசில் இயக்கியவை. "பூவிழி வாசலிலே..." என்ற படத்தைப் பார்க்காதவர்கள் இப்போதே பாருங்கள். கொலையைப் பார்த்த குழந்தையைக் கொல்லும் முயற்சியில் ஈடுபடும் பெருந்தனக்காரன் வேடம் இரகுவரனுக்கு. அமைதித் திருவுருவாக இருந்தவாறே அவர் செய்கின்ற தீச்செயல்கள் உள்ளத்தை நடுங்க வைக்கும். பாசிலின் இன்னொரு படம் "என் பொம்முக்குட்டி அம்மாவுக்கு". தத்துக்கொடுக்கப்பட்ட குழந்தையைத் தேடி வரும் தந்தை. கெஞ்சாமல் கதறாமல் தன் மகளை வேண்டித் திரியும் தந்தையாக அப்படத்தில் வேறு உயரத்தைத் தொட்டார்.
"புரியாத புதிர்' என்ற திரைப்படத்தில் இரகுவரனுக்கு மனச்சிதைவுற்ற கணவன் வேடம். மனைவியை ஐயுற்றுத் துன்புறுத்துபவர். "ஐ நோ.. ஐ நோ... டேய் நோ... ஐ நோ..." என்று இரண்டு சொற்களை வைத்துக்கொண்டு அவர் ஆடிய ஆட்டத்தை யாரும் மறந்திருக்க மாட்டார்கள். இராம்கோபால் வர்மாவின் முதற்படமான சிவா 'உதயம்' என்ற பெயரில் தமிழுக்கு வந்தது. இரகுவரன் நடிப்புக்கு அப்படம் கொடுமுடி. ஆங்கிலப் படங்களில்தான் அப்படிப்பட்ட நடிப்பைப் பார்க்க முடியும். 'பவானி'யாக மிரட்டினார். அந்த வரிசையில் காதலன், பாட்சா, முத்து என்று அவர் வென்றாடிய வேடங்கள் பல.
பாலசேகரன் இயக்கிய 'லவ் டுடே' என்னும் திரைப்படத்திலிருந்து இரகுவரன் நடிப்பின் மூன்றாம் பாகம் தொடங்குகிறது. பாசத்திற்குரிய தந்தையாக அவர் நடித்தது பார்த்தோரின் கண்ணீரைப் பிழிந்தது. உல்லாசம் என்ற படத்தில் நல்லவனை வளர்த்துத் தரும் தீயவன் வேடம். அமர்க்களம் என்னும் படத்தினையும் மறந்திருக்க முடியாது. அவருடைய கடைசிக் காலப் படங்களில் ஒன்றான யாரடி நீ மோகினியிலும் அவர் முத்திரை பதிக்கத் தவறவில்லை.
வெறும் இருபத்தைந்தாண்டுகளில் முந்நூறு படங்கள் நடித்தார் இரகுவரன். கூடுதலாக முப்பதாண்டுகள் வாழ்ந்திருந்தால் மேலும் முந்நூறு படங்கள் நடித்திருக்கக் கூடும். அவற்றால் அவர் பன்மடங்கு உயரத்திற்குச் சென்றிருக்கலாம். ஒருவர் என்னவாக வேண்டுமோ அவ்வாறு ஆகாதபடி வீழ்த்துவது போதைப் பழக்கமாகத்தான் இருக்க முடியும். பெருங்கலைஞர்கள் பலரும் வீழ்ந்த அந்தப் படுகுழியில் இரகுவரனும் வீழ்ந்தார். அவருடைய நடிப்பு மட்டுமில்லை, வாழ்க்கையும் இக்காலத்தவர்க்கு ஒரு படிப்பனைதான்.
வெளியூர்க் கலைநிகழ்ச்சியில் பங்கேற்ற நடிகர்குழாம் இருப்பூர்தியில் சென்னை திரும்பிக்கொண்டிருந்ததாம். இருப்பூர்திப் பெட்டி முழுவதும் கலைஞர்கள் நிரம்பியிருந்தனராம். திரையுலகில் அறிமுகமாகியும் பெயர்பெற முடியாத நிலையில் மனம் வெதும்பியிருந்த நடிகர் சூர்யாவும் இரகுவரனும் அப்பெட்டியில் அடக்கம். அப்போது இரகுவரனின் போதைக்குரல் சூர்யாவைக் கடுமையாய் அழைத்ததாம். "டேய் சூர்யா... முடியலல்ல... நீ எதுவுமே ஆக முடியலல்ல... எல்லாம் பண்ணிப் பார்த்தும் எதுவுமே நடக்கலல்ல... வெறுப்பா இருக்குமே... செத்துடலாம்போல இருக்குமே... எனக்கும் அப்படித்தான்டா இருந்துச்சு... மாத்துடா... எல்லாத்தையும் மாத்து... இதென்னடா முடி... இதை மாத்துடா... உடம்ப மாத்துடா.. பார்க்கிறது நடக்கிறது எல்லாத்தையும் மாத்துடா... அப்புறம் பார்றா... எல்லாமே மாறும்..." என்று அறிவுரை கூறினாராம். இரகுவரனின் அவ்வறிவுரையை தெய்வ வாக்காக ஏற்றுக்கொண்டு தம் நடை உடை பாவனைகளை மாற்றிக்கொண்டார் நடிகர் சூர்யா. அதன் பிறகு அவரடைந்த ஏற்றங்களை நாடறியும்.

Saturday 6 October 2018

மழை பாடல் கொண்டாட்டம்

மழைக்காலம் தொடங்கிவிட்டதால் மழை தொடர்பான சில பாடல்களை ரசிக்கலாம்.
தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் நல்ல மழை பெய்து கொண்டிருக்கிறது. வெயில் வாட்டி எடுக்கும் சென்னை தற்போது ஊட்டி போன்று குளிராக உள்ளது.
வெளியே மழை பெய்யும் இந்த நேரத்தில் மழையை கொண்டாடும் பாடல்களை கேட்கலாமே.

மழை


மழை வருவதற்கு முன்பு மேகங்கள் காட்டும் தோரணை, பறவைகளின் முன்னேற்பாடு, வறண்ட நிலத்தின் ஏக்கம் என இயற்கையின் பல செயல்பாடுகளை கரிசனமாகக் கையாண்டவர் இளையராஜா. மழை வருது மழை வருது குடை கொண்டு வா.. மானே உன் மாராப்பிலே.. என்ற பாடலில் இறுதிவரை மழை வராது. ஆனால் மழை வரும் முன்பு இயற்கை ஆயத்தமாகும் உணர்வைக் கொடுத்திருப்பார் இளையராஜா. "வெயில் வருது.. வெயில் வருது... குடை கொண்டுவா.. கண்ணா உன் பேரன்பிலே... உன் தோளிலே பிள்ளை போலே உறங்க வேண்டும் கண்ணா வா.." என பெண் பாடினாலும், அவளின் மாராப்புதான் குடையாக வேண்டுமென ஆண் செல்லமாக அடம்பிடிப்பது போல பாடலை இயற்றிய பெருமை கவிஞர் வாலிக்கே சேரும்.

வைரமுத்து


இளையராஜாவும் மழையும் என டைட்டில் வைத்தால் ஒரு பட்டிமன்றமே நடத்தலாம். அதனால், 90 கிட்ஸ்களுக்கு பரிட்சயமான இசையமைப்பாளர்களில் யார் சிறப்பான மழைப்பாடல்கள் போட்டிருக்கிறார்கள் என்று பார்க்கும்போது, மழை திரைப்படத்தில் தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைத்த "நீ வரும்போது நான் மறைவேனா.." பாடல் முக்கியமானது. பாடல் மட்டுமல்லாமல் படத்திலும் மழைக்கே முக்கியத்துவம். இப்படல் மழை என்ற ஒற்றை வார்த்தை தரும் ஆனந்தத்தையும் கொண்டாட்டத்தையும் சொன்ன பாடல். மழை ஒருவரின் சிறுவயதை திரும்பத்தரும் என்ற அடிப்படையில் எழுதப்பட்ட வரிகள் இவை. "கொள்ளை மழையே கொட்டி விடுக.. பிள்ளை வயதே மறுபடி வருக... நிற்க வேண்டும் சொற்பமாக... தாவனியெல்லாம் வெப்பமாக..." நகரத்திலுள்ள இளைஞி ஒருவள் சிறுமியாக மாறி ஆடைகளைக் களைந்து மழையோடு மழையாக மழையைக் கொண்டாட விரும்பும் உணர்வைக வரிகளில் காட்சிப்படுத்தியிருப்பார் வைரமுத்து. ஸ்ரேயாவை மறந்து நீங்கள் இந்த பாட்டை ரசித்தீர்கள் என்றால் நிச்சயம் நீங்கள் ஐ.எஸ்.ஐ முத்திரை குத்தப்பட்ட இசை ரசிகர்தான்.


கண்ணதாசன்


அது என்ன பெண்கள் மட்டும்தான் மழையைக் கொண்டாடுவாங்களா? ஆண்கள் என்ன பாவம் செய்தார்கள் அவங்களும் மழையை கொண்டாடலாம் என ஜெமினிகணேசனைக் கொண்டாட வைத்தவர் கவியரசர் கண்ணதாசன். அவளுக்கென்ன ஒரே மனம் திரைப்படத்தில், மழையில் நனைந்து கொண்டு ஆனந்த ஆட்டம் போட்டிருப்பார் நம் காதல் மன்னன். " ஆயிரம் கனவு காணுது மனது ஓஹோ... பெண்ணை தொட்ட உள்ளம் எங்கும் இன்ப வெள்ளம்.. எங்கே அந்த சொர்க்கம் ஹா... எங்கே அந்த சொர்க்கம் ... என்று துள்ளிக்குதிப்பார் ஜெமினி. "மூடி வைத்த தட்டில் இன்று மோக சின்னங்கள் ஆடு தொட்டில் போடும் எந்தன் காதல் எண்ணங்கள்.. கை கொள்ளாத வண்ணம் அவள் சுகம் கொடுத்தாளோ... " என காதல் கைகூடிய இளைஞனின் கொண்டாட்ட மனநிலையை மழையும் சேர்ந்து கொண்டாடுவது போல பாடல் அமைத்திருப்பார். இப்பாடலுக்கு இசையமைத்தவர் எம்.எஸ்.வி, துள்ளலாகப் பாடுவதற்காக எஸ்பி.பாலசுப்பிரமணியத்தைப் பாடவைத்தார். கேட்டுப் பாருங்க... புதுமையான அனுபவமாக இருக்கும்.


ஏஆர்.ரஹ்மான்


ரஹ்மானும் வைரமுத்துவும் இணைந்தால் ஹிட் ஆகாத பாடல் ஏது? அப்படிப்பட்ட ஒரு கொண்டாட்டமான பாடல்தான் குரு படத்தில் வரும் "வெண்மேகம் வெட்ட வெட்ட.." வீட்டை விட்டு வெளியேறும் ஒரு இளைஞிக்கு இருக்கும் ஆசைகளை மழையோடு பகிர்ந்துகொள்வாள். மழை பெய்யும்போது மேகக்கூட்டத்தினால் ஏற்படும் மெல்லிய இருட்டையும் விடாமல் மழையோடு மணிரத்னம் காட்சிப்படுத்தியிருப்பார். வெகுளித்தனமாக மாறியிருக்கும் ஷ்ரேயா கோஷலின் குரல் வைரமுத்துவின் வரிகளுக்கு உயிருட்டியிருக்கும். தற்போது வெளியான மழைக்குருவி பாடல் நம்ம ஊரில் பிறந்த சிட்டுக்குருவி வெளிநாட்டுக்கு போய் பிற கலாச்சாரங்களையும் மொழிகளையும் கற்றுக்கொண்டு, ஏதோ ஒரு நாட்டில் மழையைப் பார்த்த அனுபவத்தில் ஒரு பாட்டை பாடி அதை நம்ம ஊர் மழைக் காலத்துடன் ஒப்பிட முயல்வது போல இருந்தது.


அடடா மழைடா...


யுவன் ஷங்கர் ராஜாவின் அடடா மழைடா பாடலும் மழையின் கொண்டாட்ட உணர்வை ஏற்படுத்தக்கூடியதுதான். பாசமாக பக்கத்தில் உட்கார்ந்து கணக்கு சொல்லி கொடுக்கும் மூன்றாம் வகுப்பு டீச்சரைப் போல், மிக எளிமையான வரிகளையே கையாண்டிருப்பார் நா.முத்துக்குமார். தமன்னாவை பிக்கப் செய்ய வேண்டுமென்ற நோக்கில் கார்த்தி காரில் பிக்கப் செய்து போகும்போது இருவரையும் மழை ஒன்றிணைப்பதால் அவர் மழைக்கு நன்றி சொல்வதைப் போல பாடல் அமைந்திருக்கும். " பின்னி பின்னி மழையடிக்க.. மின்னல் வந்து குடை பிடிக்க வானம் ரெண்டாச்சு பூமி துண்டாச்சு என் மூச்சு காத்தால மழ கூட சூடாச்சு" போன்ற வரிகள் மூலம் மழை மற்றும் காதலின் பிரம்மாண்டத்தை கையாண்டிருப்பார் நா.முத்துக்குமார். வழக்கம்போல யுவன் முத்துக்குமார் மேஜிக்கில் கலக்கிய பாடல்.

டி.ராஜேந்தர்


கிளிஞ்சல்கள் திரைப்படத்தில் வரும் "அழகினில் விளைந்தது மழையினில் நனைந்தது" பாடல் இவற்றிலிருந்து முற்றிலும் மாறுபட்ட மழைப்பாடல். ஐயய்யோ மழையில் மாட்டிகிட்டேனே என கதாநாயகி நினைக்கும் நேரத்தில் சுகமான தொல்லையாக காதலன் தோன்றுவது. மறுக்க நினைத்தாலும் முடியாமல் காதலி அதை ஏற்றுக்கொண்டு டூயட் பாடுவது போன்ற ஒரு சூழலில் அமைந்திருக்கும். "என்னைவிட்டு எங்கேயும் போகமுடியாது, நீ இந்த மழைபோல் என்னையும் ஏற்றுக்கொள்" என்று கதாநாயகன் லவ் டார்ச்சர் செய்வதுபோலவே பாடல் வரிகளையும், பாடலுக்கான இசையையும் அமைத்திருப்பார் டி.ராஜந்தர். மைக் மோகன் குடைபிடித்து பாடிய பாடல். மிஸ் பண்ணிடாதீங்க!

இளையராஜாவின் பாடல்களைக் காட்சிப்படுத்திய இயக்குநர்கள் - யார் சிறந்தவர் ?

சில பாடல்கள் நம்மை உருக்கிக் கூழாக்கி ஓரத்தில் ஊற்றிவிடும். அதிலிருந்து மீண்டும் உருப்பெற்று எழுவதற்குப் பன்னாழிகைகள் தேவைப்படும். பாடல் மட்டுமல்லாமல் பாடற்காட்சிகளும் அவ்வாறு செய்வதுண்டு. என்னை எப்போதும் அலைக்கழித்த பாடற்காட்சியாக சிப்பிக்குள் முத்து படத்தின் 'மனசு மயங்கும் மௌன கீதம் பாடு’ என்ற பாடலைச் சொல்ல முடியும். அந்தப் படம் வெளியானபோது நான் பார்க்க இயலவில்லை. பிற்காலத்தில் அதனைத் தொலைக்காட்சி ஒளிபரப்பு ஒன்றில்தான் பார்த்தேன். அப்படியிருந்தும் என்னால் அந்தப் பாடல் காட்சியின் காதல் வலிமையைக் காணும் நெஞ்சுரம் போதவில்லை. பாட்டும் அதற்குச் செய்யப்பட்ட காட்சியும் உயிரை வதைப்பது ஏன் என்றே தெரியவில்லை. அப்பாடலைக் கண்டுமுடித்த ஒவ்வொரு முறையும் உள்ளுறுப்பில் ஏதோ ஒன்று குழைந்து மீள்கிறது. பாயும் குருதித் துகளில் பனித்தொற்று படிகிறது.



இளையராஜாவின் பாடல்கள் காதலுணர்ச்சியின் தனிப்பேரிசை என்றாலும் அதனைப் படமாக்கிய விதத்தில் நம் இயக்குநர்கள் எத்தகைய எல்லைக்கும் கீழிறங்கியே வந்திருக்கிறார்கள். அதனாற்றானோ என்னவோ அவர் இசையமைத்துக் கொடுத்த பாடல்கள் எவ்வாறு படமாக்கப்பட்டிருக்கின்றன என்று பார்க்கும் ஆர்வத்தை இழந்திருக்கிறார், அதற்கு அவர்க்கு நேரமும் இருக்கவில்லைதான். 'மலையோரம் வீசும் காத்து’ பாடலைக் கடலோரம் படமாக்கியவர்கள் நம் இயக்குநர்கள். ஆனால், சில பாடல்கள் படமாக்கப்பட்ட விதத்தில் அவருடைய இசைக்கோலங்களை நிகர்த்த காட்சிக் கோலங்களையும் காண முடியும். அவற்றில் ஒன்றுதான் 'மனசு மயங்கும் பாடல்’.
ஒரு பாடல் படத்தின் கதைச்சூழலில் நன்கு அமர்வதற்குக் காரணம் அப்படத்தின் இயக்குநர்தான். கதைச்சூழலைச் சொல்லி அதற்கு வேண்டிய பாடலைப் பெற்றுச் செல்லும் இயக்குநர் தாம் விரும்பியவாறு அதனைப் படமாக்கிக்கொண்டு வரவேண்டும். தமிழ்ப்படங்களில் பல பாடல்கள் இயக்குநர்களின் கட்டுப்பாட்டில் இருப்பதில்லை. பாடலில் ஆடல் தேவைப்படுமென்றால் அது நேரடியாக ஆடலாசிரியரின் கட்டுப்பாட்டுக்குப் போய்விடும். அரங்கமைத்து எடுக்கப்படும் ஆடற்காட்சிகளை இயக்குபவர் அப்படத்தின் இயக்குநர் இல்லை என்பது பலர்க்கும் வியப்பாக இருக்கும். ஒரு படத்தின் பெரும்பொருட்செலவு பாடற்காட்சிக்கான அரங்குகளை அமைப்பதில்தான் செலவிடப்படும். ஆனால், அவ்விடத்தில் ஓர் இயக்குநரின் தலையைக் காண்பதே அரிதாக இருக்கும். நடனக்குழுவினரோடு தம் அடிப்பொடிகள் சூழ ஆடலாசிரியர்தான் அந்நடனக் காட்சியை எடுத்துக்கொண்டிருப்பார். படத்தின் பாடற்காட்சிகளை ஆடலாசிரியரும் சண்டைக் காட்சிகளை மோதலாசிரியரும் எடுத்துக்கொடுத்தது போக மீதமுள்ள காட்சிகளான உரையாடற்காட்சிகளை மட்டுமே ஓர் இயக்குநர் இயக்குகிறார். இதற்கு எதற்கு இயக்குநர் என்கிறீர்களா ? அஃதே உண்மை.
ஒரு படத்தின் முதன்மைப் படைப்பாளர் என்ற நிலையிலிருந்து கீழிறங்கி முதன்மை மேற்பார்வையாளராக மாறிப்போவதால்தான் இயக்குநர்கள் பலரும் தத்தம் பெருமையை இழந்து நிற்கின்றார்கள்.


பாரதிராஜாவைப் பற்றிய ஒரு செய்தி உண்டு. அவர் பாடற்காட்சிகளைத் தாமாகவே இயக்குவாராம். அதில் இடம்பெற வேண்டிய ஆடலையும் அவரே கற்றுக்கொடுத்து எடுத்து முடிப்பாராம். அதற்காக ஆடற்கலைஞர்கள் சங்கத்திலிருந்து 'ஒறுப்புக்கட்டணம்’ கேட்கப்பட்டாலும் அதனைச் செலுத்திவிடுவாராம். பாடலைப் படமாக்குவதில் அவர் அவ்வளவு முனைப்பைக் காட்டினார். ஆடலாசிரியர் கற்பித்து எடுத்துக்கொடுக்கும் பாடல்களால் அவர்க்கு நிறைவேற்படுவதில்லை என்பதனையே இது காட்டுகிறது. தம் படத்தின் ஒவ்வொரு சுடுவும் தாம் கற்பனை செய்தவாறு இருக்க வேண்டும் என்னும் பிடிவாதம். அதனாற்றான் பாரதிராஜா படங்களின் பாடற்காட்சிகள் தாழ்வில்லாமல் இருக்கின்றன. இளையராஜாவின் பாடல்களை நன்கு படமாக்கிக் காட்டியோருள் பாரதிராஜாவுக்கே முதலிடம். அதனைத் தம் முதற்படமான 'செந்தூரப்பூவே’ பாடற்காட்சியிலேயே மெய்ப்பித்துக் காட்டிவிட்டார்.
மகேந்திரன் படங்களில் இடம்பெறும் பாடல்கள் அவற்றின் உயிர்ப்பினை மேலும் ஈரமாக்கும் தன்மையோடு இடம்பெற்றன. “மெட்டியொலி காற்றோடு என் நெஞ்சைத் தாலாட்ட’ என்னும் பாடலில் இழையும் 'கசப்பு மாறாத மகிழ்ச்சி மனநிலையை’ இன்னொருவர் படம்பிடித்துக் காட்டுவது கடினமே. இளையராஜாவின் பாடல்களை 'மாண்டேஜஸ்’ எனப்படும் காட்சித் தொகுதிக்கான பின்னணியாகப் பயன்படுத்துவதிலும் பலர் ஆர்வம் காட்டியிருக்கின்றனர். தம் படத்தில் ஒரு பாடலையேனும் அவ்வாறு வைத்துக்கொள்வதைப் பாலுமகேந்திரா விரும்பினார். திரைப்படங்களுக்கு வகுக்கப்பட்ட மேனாட்டு இலக்கணங்களின்படி காட்சித் தொகுதியின் பின்பாட்டாகவே இசைக்கோப்பு இடம்பெற வேண்டும்.

இளையராஜா பாடல்களை வேற்றுத் தளத்திற்கு நகர்த்திச் சென்றதில் மணிரத்தினத்திற்கும் பங்குண்டு. 'பூமாலையே தோள் சேரவா’ பாடலிலேயே அதற்குரிய ஊக்கத்தைக் காட்டியவர் மணிரத்தினம். அதன் பிறகு வந்த படங்களான மௌனராகம், அக்னிநட்சத்திரம், தளபதி ஆகிய படங்களில் ஒரு பாடலை எவ்வளவு மேன்மையாகப் படமாக்கலாம் என்றுணர்த்தினார். பிசி ஸ்ரீராம் போன்ற ஒளிப்பதிவாளர்கட்கு ஓர் இசைக்கோப்புக்கு எத்தகைய காட்சிக் கலையை முன்வைக்க வேண்டும் என்பது தெரியும். ஒரு பாடலைக் கண்ணுக்கினிய காட்சி விருந்தாக்கிய பெருமையே பிசி ஸ்ரீராமையே சாரும். உறுத்தாமல் பொருத்தமாய்ப் பாடற்காட்சிகளை வைப்பதில் பாலசந்தரும் இளைத்தவரல்லர். சில படங்கள்தாம் என்றாலும் அவற்றிலேயே சிறப்பாகச் செய்தவர். சிந்து பைரவி, புதுப்புது அர்த்தங்கள் படப்பாடற் காட்சிகளை யாரால் மறக்க முடியும் ?
எல்லா இயக்குநர்கட்கும் இளையராஜாவின் பாடல்கள் மணிமணியாய்க் கிடைத்தன என்றாலும் அதனைத் தம் படங்களில் சிறப்பான காட்சிகளாக்கி வென்றவர்கள் சிலரே. கங்கை அமரனுக்குக் கிடைத்தவை எல்லாம் பிற இயக்குநர்கட்குக் கிடைக்கவேயில்லை. செல்வமணி, செந்தில்நாதன், மணிவண்ணன், பாக்கியராஜ், மனோபாலா, எஸ்பி முத்துராமன், ஆர் சுந்தரராஜன் என்று பட்டியல் நீளும். 'தாயம் ஒன்னு’ என்ற திரைப்படத்திற்கு முத்தான பாடல்கள் கிடைத்திருந்தும் அதனைத் தம் குழப்பமான திரைக்கதையால் வீணடித்தமைக்காக அதன் இயக்குநர் வருந்திக்கூறியது நினைவுக்கு வருகிறது.
இளையராஜாவின் பிறமொழிப் பங்களிப்பினையும் நாம் நினைவிற்கொள்ள வேண்டும். கே. விஸ்வநாத் இயக்கிய படங்களில் இடம்பெற்ற பாடல்கள் தமிழ்ப் பாடல்களுக்கு ஒருபடியேனும் மேலாக விளங்கின. மொழிமாற்றுப் படங்களின் பாடல்களும் இங்கே புகழ்பெற்றன. இதயத்தைத் திருடாதே, உதயம், சிப்பிக்குள் முத்து, சலங்கை ஒலி ஆகிய படத்தின் பாடல்கள் தெலுங்குக்குச் செய்யப்பட்டவை. அவற்றில் சலங்கை ஒலிக்கும் சிப்பிக்குள் முத்துக்கும் தலைமை இடம் தரவேண்டும். தம் படத்தின் பாடற்காட்சிகளை இழைத்து இழைத்து உருவாக்கிய கற்றச்சராய்த் தோற்றமளிக்கிறார் கே. விஸ்வநாத். தாதாசாகேப் பால்கே விருது பெற்றுள்ள பெரியவரான கே. விஸ்வநாத் தெலுங்குத் திரையுலகிற்குச் செய்துள்ள பங்களிப்பு வாயடைக்கச் செய்கிறது. ஆந்திரத்தின் பேராற்றங்கரைகளில் அவர் ஆக்கியளித்த படக்காட்சிகள் பாடல்களை நிகர்த்து நிற்கின்றன.

Tuesday 24 July 2018

தன் விழியழகால், பண்பட்ட நடிப்பால் அனைவரையும் ஈர்த்த ஸ்ரீவித்யா!

தன் விழியழகால், பண்பட்ட நடிப்பால் அனைவரையும் ஈர்த்த ஸ்ரீவித்யாவின் பிறந்தநாள் இன்று.

தமிழ்த்திரையுலகில் எத்தனையோ அம்மாக்கள் தோன்றியிருக்கிறார்கள். பண்டரிபாய், எம்.வி.ராஜம்மா, கண்ணம்பா என்று பலர் பல படங்களில் நடித்திருக்கிறார்கள். ஆனால் இவர்களுக்கும் ஸ்ரீவித்யாவிற்கும் சில வேறுபாடுகள் உண்டு. மற்ற அம்மா நடிகைகள் எல்லாம் உண்மையிலேயே அம்மாவுக்குரிய வயதும் தோற்றமும் உடையவர்கள். ஆனால் 23 வயதிலேயே அதாவது ஒரு சராசரி கதாநாயகியைவிட குறைவான வயதிலேயே அம்மாவாக நடித்தவர்தான் ஸ்ரீவித்யா. அதுவும் ஒரு கைகுழந்தைக்கோ, சிறுமிக்கா அல்ல, வயது வந்த ஜெயசுதாவிற்கு "அபூர்வராகங்க"ளில்.

கொடிகட்டி பறந்தார்




1970களில் தொடங்கி 2000 வரை என சுமார் 30 ஆண்டுகள் மிகத் துல்லியமான நடிப்பு, நேர்த்தியான வசன உச்சரிப்பு, பேசும் விழிகளாலும், தென்னிந்திய சினிமா ரசிகர்களையே தன்னகத்தே வைத்திருந்தார் ஸ்ரீவித்யா. கர்நாடக இசையின் தேவகானக்குயில் எனப்படும் எம்.எல்.வசந்தகுமாரியின் மகள். இசை, நாட்டியம், இரண்டையும் கற்ற ஸ்ரீவிதியா சினிமா உலகினரால் வித்தி என அன்போடு அழைக்கப்பட்டார். "திருவருட்செல்வர்" படத்தில் நடிப்பின் பிள்ளையர் சுழி போட, சிறிது காலத்திலேயே புகழில் கொடிகட்டி பறக்க தொடங்கினார்.

கம்பீரமாக நடைபோட்டார்




நாட்டியம், நடிப்பு, இசை என அசாத்திய திறமைகளை ஒருசேரப்பெற்று, திரைத்துறையில் கம்பீரமாக நடைபோட்டவர்கள் ஒருசிலரே. அதில் முக்கிய இடம் ஸ்ரீவித்யாவுக்குத்தான் போய்சேரும். தங்கையாய், காதலியாய், மனைவியாய், தாயாய், அண்ணியாய், தோழியாய், பாட்டியாய் என்று ஒரு பெண்ணின் அனைத்து முக்கிய பரிணாமத்தையும் படங்களில் குறைவின்றி வெளிப்படுத்தியவர்.

மணவாழ்க்கையில் கசப்பு




கபடமற்ற, எதையும் நல்லதாகவே நம்பும் குழந்தை மனமே அவரது வாழ்க்கையை புரட்டி போட வைத்தது. 35 வயதுக்கு பின்னர், மணவாழ்க்கையில் விதி விளையாட துவங்கியது. மண வாழ்க்கையில் சறுக்கி விழுந்தார். 9 வருட கால போராட்டத்துக்கு பின்னர் தனித்து வாழ்ந்தாலும், காலை சுற்றின பாம்பு கூடவே இருந்தது. குழந்தையிலிருந்து ஸ்ரீவித்யாவுக்கு இருக்கும் ஆன்மீக ஈடுபாடு அவரை பண்படுத்தின. பக்குவப்படுத்தியது. பல கதாபாத்திரங்களை துணிந்து ஏற்று நிறைவாக நடித்தார். தளபதி, காதலுக்கு மரியாதை, புன்னகை மன்னன் போன்ற படங்களில் அவரது சாந்தமான முகம்-கைகூப்பி வணங்ககூடிய எழிலார்ந்த தோற்றம், இயல்பான நடிப்பு, பக்குவமான உணர்வு போன்றவை மறக்க முடியாதது.

நம்பி ஒப்படைத்த சொத்துக்கள்


ஆனால் காலம் கொடுத்த சம்மட்டி அடியான புற்றுநோயால் பாதிக்கப்பட்டார். அழகிய ஓவியம் அலங்கோலமாக தொடங்கியது. வடித்து வைத்த சிலை ஒன்றினை கறையான் அரிக்க துவங்கியது. பெற்றவர்கள் இன்றி, உற்றார் உறவுகளின்றி, தவித்தார். எல்லாமே சூன்யமாகி போனது. அனைத்து சொத்துக்களையும் என்ன செய்வது? வசதியும் ஆதரவும் அற்ற கலை ஆர்வம் கொண்ட ஏழை குழந்தைகளின் வளமான எதிர்காலத்திற்காக கோடிக்கணக்கான சொத்துக்களை உயில் எழுதி கொடுத்தார். நம்பி ஒருவரிடமும் ஒப்படைத்தார். ஆனால் அதில் எள்ளளவும் அந்த குழந்தைகளுக்கு போய்ச் சேரவில்லை. சொத்துக்களின் கதி இதுவரை என்னவென்றும் தெரியவில்லை.

காலத்தின் கோலம்


திரைத்துறையில் எப்பேர்பட்ட பிரபலங்களாக இருந்தாலும் தனிப்பட்ட வாழ்வில் அவர்கள் சிக்குண்டு போய்விடுகிறார்கள் என்பதும், காலம் அவர்களை ஒரு புரட்டு புரட்டியே போட்டு தன்னுடன் அழைத்து சென்றுவிடுகிறது என்பதற்கும் ஸ்ரீவித்யா உதாரணம். அவர் எந்த அளவிற்கு விசால மனம் படைத்தவர் என்பதற்கும், அவரது மாபெரும் மனித நேயத்திற்கும், நாட்டியக்கலை மீது இருந்த பற்றுக்கும் அவர் எழுதி வைத்த உயிலே சாட்சியாகும். இதமான இதயத்தை அது பிரதிபலித்தது. இதைக்கூட புரிந்து கொள்ளாத ஒருவன் அவருக்கு கணவராக இருந்தது காலத்தின் கோலம் என்றுதான் சொல்ல வேண்டும். தாய்மையடைந்த போதெல்லாம் அந்த வாய்ப்பு தட்டிப் பறிக்கப்பட்ட இந்த திரைத்தாயினால் கடைசிவரை நிஜத்தாயாக வாழமுடியாமல் போனது துரதிர்ஷ்டமே!


Sunday 24 June 2018

கண்ணதாசன் வர்ணித்த ஆணழகன்

M.G.R. -க்கு உள்ள தனிப்பட்ட சிறப்பு தன்னைப் போற்றுவோருக்கு மட்டுமின்றி, கடுமையாக தூற்றுவோருக்கும் உதவிகள் செய்வார். சொல்லப் போனால், தன் மீது கல் வீசுவோருக்கு கனி தரும் மரம் போல, தன்னைக் கடுமையாக தாக்கிப் பேசுவோருக்கு அதிகமாகவே உதவுவார். அவர்கள் திறமையாளர்களாக இருந்துவிட்டால் கருத்து வேறுபாடுகளை ஒதுக்கிவிட்டு, அவர்களின் திறமைக்கு உரிய கவுரவமும் அங்கீகாரமும் அளிப்பார்.


எம்.ஜி.ஆர். நடித்த சூப்பர் டூப்பர் ஹிட் படம் ‘ஆயிரத்தில் ஒருவன்’. படத்தின் க்ளைமாக்ஸுக்கு முன் ஒரு பாடல். அடிமை முறையை ஒழித்து சுதந்திர சமுதாயம் காணப் புறப்பட்ட ஒரு புரட்சி வீரன் பாடுவது போன்ற பாடல்.அந்தக் காட்சிக்கு பலர் பாடல் எழுதியும் எம்.ஜி.ஆருக்கு திருப்தி ஏற்படவில்லை.
அப்போது ஒரு கவிஞர் ஏற்கெனவே எம்.ஜி.ஆருக்கு நெருக்கமாக இருந்தவர்தான். அரசியல் கருத்து வேறுபாடுகள் காரணமாக எம்.ஜி.ஆரை மேடைகளில் கடுமையாக விமர்சித்து வந்தார். ஆனாலும், அந்தக் கவிஞர் என் படங்களில் பாடல் எழுதக் கூடாது என்று எம்.ஜி.ஆர். கூறிய தில்லை. எம்.ஜி.ஆர். படங்களுக்கு நான் பாடல் எழுத மாட்டேன் என்று அந்த கவிஞரும் சொன்ன தில்லை. மேடைப் பேச்சுக்கள் ஏற்படுத்திய தர்ம சங்கடத்தால் எம்.ஜி.ஆர் படங்களின் தயாரிப்பாளர் களும் இயக்குநர்களும் கவிஞரை அணுகத் தயங் கினர். அதனால், எம்.ஜி.ஆரின் சில படங்களில் அவர் பாடல்கள் இடம்பெறவில்லை.
‘ஆயிரத்தில் ஒருவன்’ படத்தில் மேலே குறிப் பிட்ட காட்சிக்கான பாடலுக்காக பல கவிஞர்கள் எழுதியும் திருப்தி ஏற்படாத நிலையில், எம்.ஜி.ஆரை விமர்சிக்கும் அந்தக் கவிஞரை விட்டே அந்த பாடலை எழுதச் சொன்னால் என்ன? என்ற யோசனை பிறந்தது. படக்குழுவினர் கவிஞரி டம் விஷயத்தைச் சொல்ல, அவரும் எழுதிக் கொடுத்தார். எம்.ஜி.ஆருக்கு அந்தப் பாடல் மிக வும் பிடித்துப் போனதுடன் கவிஞரின் திறமையை பாராட்டி அந்தப் பாடலை ஓ.கே. செய்தார்.
அந்தப் பாடல்தான் காலத்தால் அழியாத
‘அதோ அந்த பறவை போல வாழ வேண்டும்…’
அந்தப் பாடலை எழுதியவர் கவியரசு கண்ண தாசன். அவர் கடுமையாக தாக்கிப் பேசுவாரே தவிர, மனதில் ஒன்றும் கிடையாது என்பதும் எம்.ஜி.ஆருக்குத் தெரியும்.
எம்.ஜி.ஆர். நடித்த வெள்ளிவிழா படமான ‘மாட்டுக்கார வேலன்’ படத்தில்,
‘பூ வைத்த பூவைக்கு பூக்கள் சொந்தமா?’
என்ற இனிமை யான பாடலை எழுதியவர் கண்ணதாசன். நாயகி யைப் பார்த்து எம்.ஜி.ஆர். பாடும் வரிகளில்
‘பள்ளிக் கணக்கு கொஞ்சம் சொல்லிப் பழக்கு, நீ இல்லையென்றால் நான் தொடுப்பேன் காதல் வழக்கு’
என்று வரும்.
பதிலுக்கு நாயகி, ‘போடுங்கள்.. கூண்டில் ஏற்றுங்கள்.. நான் போதும் என்று சொல்லும் வரை நீதி சொல்லுங்கள்’
என்று பாடுவதுபோல எழுதியிருந்தார் கண்ணதாசன். நாயகி பாடும் வரிகள் எம்.ஜி.ஆருக்கு திருப்தி இல்லை. கண்ணதாசனிடம் சொல்லி அந்த வரிகளை மாற்றச் சொன்னார்.
கண்ணதாசன் உடனே மாற்றிக் கொடுத்த வரிகள்தான்,
‘போடுங்கள் கூண்டில் ஏற்றுங்கள், உங்கள் பொன்மனத்தை சாட்சி வைத்து வெற்றி கொள்ளுங்கள்’.
நட்பு ஒருபுறம் இருந்தாலும், எம்.ஜி.ஆரின் மனதை பொன்மனம் என்று வர்ணித்தாலும், அரசியல் கருத்து வேறுபாடுகள் காரணமாக எம்.ஜி.ஆர் முதல்வரான பிறகும் அவரை தாக்கி பேசுவதை கண்ணதாசன் நிறுத்தவில்லை.
ஒருநாள், முதல்வர் வீட்டில் இருந்து கண்ணதாசன் வீட்டுக்கு தொலைபேசி அழைப்பு. தனது மகன் திருமண விஷயமாக கண்ணதாசன் வெளியூர் சென்றிருந்தார். இப்போதுபோல அப்போது செல்போன் எல்லாம் கிடையாது. தீவிர முயற்சிக்குப் பிறகு, கண்ணதாசனை தொடர்பு கொண்ட எம்.ஜி.ஆர்., அவரை உடனே புறப்பட்டு சென்னை வரச் சொன்னார்.
எதற்காக வரச் சொல்கிறார் என்பது புரியாமலே தன்னை சந்தித்த கண்ணதாசனுக்கு எம்.ஜி.ஆர். இன்ப அதிர்ச்சி அளித்தார். ‘‘தங்களை தமிழக அரசின் அரசவைக் கவிஞராக நியமிக்க முடிவு செய்திருக்கிறேன். சம்மதம் என்ற ஒரே வார்த்தையை மட்டுமே உங்களிடம் எதிர்பார்க்கிறேன்’’ என்றார். எம்.ஜி.ஆரின் அன்பிலும் மகிழ்ச்சியிலும் திக்குமுக்காடிப் போனார் கண்ணதாசன்.
‘அரசவைக் கவிஞர்’ பட்டமளிக்கும் விழாவில் உணர்ச்சிவசப்பட்ட கண்ணதாசன், ‘‘நான் இறந்துவிட்டால் எனக்கு அரசு மரியாதை கிடைக்கும். இந்த சிறப்பை எனக்கு வழங்கிய எம்.ஜி.ஆருக்கு முன்கூட்டியே நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்’’ என்றார்.
அவர் கூறியது போலவே நடந்தது. அமெரிக் காவுக்கு சிகிச்சைக்காக சென்ற கண்ணதாசன் வெறும் உடலாகத்தான் திரும்பினார். அவரது உடல் பொதுமக்கள் அஞ்சலிக்குப் பின் இறுதி ஊர்வலத்துக்குத் தயாரானது. கண்ணதாசன் உடல் வாகனத்தில் ஏற்றப்பட்ட பின், யாரும் எதிர்பாராத வகையில் முதல்வர் எம்.ஜி.ஆர். மின்னலாய் அந்த வாகனத்தின் மீது ஏறிவிட்டார். கண்ணதாசன் உடலை சற்று உயர்த்தி சிறிய ஸ்டூல் மீது அவரது தலையை பொருத்தி கட்டி விட்டு கீழே இறங்கிய எம்.ஜி.ஆர்., ‘‘இப்போது, கவிஞரின் முகம் பொதுமக்கள் பார்க்க வசதியாக நன்றாக தெரிகிறது’’ என்றார்.
எம்.ஜி.ஆர்… அதிலும் தமிழகத்தின் முதல்வர். கண்ணசைத்தால் காரியம் செய்ய காத்திருப்போர் ஆயிரம் பேர். என்றாலும் கண்ணதாசனின் முகத்தை பொதுமக்கள் இறுதியாக பார்த்து அஞ்சலி செலுத்த வேண்டும் என்பதற்காக, தானே வேன் மீது ஏறினார் என்றால், கவிஞர் மீது அவர் கொண்டிருந்த அன்பும், எதையும் மக்களின் கோணத்தில் இருந்தே பார்க்கும் எம்.ஜி.ஆரின் நுண்ணறிவும் பிரமிக்கத்தான் வைக்கும்.
சினிமாவில் பொதுவாக பெண்களின் அழகைத்தான் கவிஞர்கள் வர்ணிப்பார்கள். ஆண்களின் அழகையும் வர்ணிக்க முடியும் என்றால் அது எம்.ஜி.ஆருக்குத்தான் பொருந்தும்.
‘குடும்பத் தலைவன்’ படத்தில் ‘கட்டான கட்டழகு கண்ணா, உன்னைக் காணாத பெண்ணும் ஒரு பெண்ணா?’
என்று எம்.ஜி.ஆரை வர்ணித்திருப்பார் கண்ணதாசன்.
எம்.ஜி.ஆரின் அழகை, ஆளுமையை ‘நீதிக்குப் பின் பாசம்’ படத்தில் இடம் பெற்ற ஒரு பாடலில், நாயகி பாடுவது போல கண்ணதாசன் விவரித்திருப்பார். அந்த வரிகள்…
‘தேக்கு மரம் உடலைத் தந்தது
சின்ன யானை நடையைத் தந்தது
பூக்கள் எல்லாம் சிரிப்பை தந்தது
பொன்னல்லவோ நிறத்தை தந்தது’
இந்த வரிகளைப் படித்தாலே நினைவுக்கு வருபவர் எம்.ஜி.ஆராகத்தான் இருக்க முடியும்.
எம்.ஜி.ஆருக்கு மிகவும் பிடித்த கண்ண தாசன் பாடல் ‘மன்னாதி மன்னன்’ படத்தில் அவர் எழுதிய ‘அச்சம் என்பது மடமையடா, அஞ்சாமை திராவிடர் உடமையடா...’பாடல். காரில் எம்.ஜி.ஆர். செல்லும்போது அவர் கேட்டு ரசிக்கும் பாடல்களில் இந்த பாடல் தவறாமல் இடம் பெறும்.

அது ஏன் "மே மே"ன்னு கண்ணதாசன் எழுதினார்னு தெரியுமா..?

'அன்பு நடமாடும் கலை கூடமே ஆசை மழை மேகமே.. என்ற பாடல் வாட்ஸ்அப்பில் தற்போது வைரலாக வருகிறது. இந்த பாடல் 1975-ம் ஆண்டு நடிகர் திலகம் சிவாஜி கணேசன், மஞ்சுளா நடித்து வெளிவந்த 'அவன்தான் மனிதன்' என்ற படத்தில் இடம் பெறுவது.


இந்த பாடலின் அத்தனை அடிகளுமே "மே" என்றுதான் முடியும்...! கவியரசு கண்ணதாசனின் பாடல் வரிகளுக்கு உயிர்கொடுத்து உலவ விட்டிருப்பார் இசையமைப்பாளர் எம்.எஸ்.விஸ்வநாதன்.
இப்பாடலை இவ்வளவு காலம் இல்லாமல் மே மாத சிறப்பு பாடலாக வாட்ஸ் அப் வாசிகள் புகழ் பாடி வருகின்றனர். என்றாலும் "மே" என முடியும் வகையில் இந்த பாடலை கண்ணதாசன் ஏன் எழுதினார் என கேட்கும் ஆவல் ஏற்பட்டது.

அதற்கு கவியரசர் கண்ணதாசனின் மகனும், கண்ணதாசன் பதிப்பகத்தின் நிறுவனருமான காந்தி கண்ணதாசன் இவ்வாறு கூறுகிறார்: "இதற்கு முன்பு இந்த பாடலை மையப்படுத்தி சில கட்டுக்கதைகளையெல்லாம் பலமுறை அவிழ்த்துவிட்டிருக்கிறார்கள். அவை எதுவுமே உண்மை கிடையாது. கவியரசர் தன் மனதில் அந்த சமயத்தில் என்ன நினைப்பாரோ, அந்த நேரத்தில் என்ன தோன்றுமோ அதையே பாட்டாக எழுதிவிடுவார். அதுதான் அவரது சிறப்பே. அதுபோல்தான் இந்த பாடலும். 'அவன்தான் மனிதன்' படக்காட்சிக்காக படத்தின் தயாரிப்பாளர் ஏ.ராமாநுஜம் கேட்க, கவியரசும் பாட்டு எழுதி தர ஒப்புக்கொண்டார். ஆனால் படக்காட்சிகள் சிங்கப்பூரில் படமாக்க இருப்பதால், நடிகர், நடிகைகள் அனைவரும் வருகிற மே மாதம் சிங்கப்பூர் செல்லவிருக்கிறோம் என்று சொல்லவும், அதனை மையப்படுத்தியே கவியரசர் 'மே'-எழுத்தில் முடியுமாறு எழுதி கொடுத்தார்" என்றார்.

4 பேர் கூடினாலே கவிஞர் இருப்பார்


அதேபோல், திரைப்பட தயாரிப்பாளரும், கண்ணதாசனின் அண்ணன் ஸ்ரீநிவாசனின் மருமகளுமாகிய ஜெயந்தி கண்ணப்பன் இந்த பாடல் குறித்து நம்மிடம் பேசினார். அப்போது, "வாட்ஸ்அப்பில் கண்ணதாசனின் பாடல்கள் வலம் வருவது கேட்பதற்கு மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது. நான்கு பேர் ஒன்று கூடி எதைப்பற்றி பேசினாலும், அங்கும் கண்ணதாசன்தான் இருப்பார். இந்த பாடல்களை இளைய தலைமுறைகள் கேட்பது இரட்டிப்பது மகிழ்ச்சி, இந்த பாடலை கண்ணதாசனை தவிர வேறு யாராலும் இவ்வளவு அழகாக எழுதியிருக்க முடியுமா என்று தெரியவில்லை" என்றார்.

அர்த்தம்-அழகு-இனிமை


உண்மைதான். ஒற்றை எழுத்து முடியுமாறு பாடல் எழுதுவது மிகவும் கடினம். பாடலின் முடிவில் ஏதோ ஒற்றை எழுத்து வந்தால் போதும் என எழுத முடியாது. அப்படியே எழுதினாலும் அதில் அர்த்தம் பொதிந்திருக்க வேண்டும், இசைக்கு பொருந்தி வரவேண்டும். பாடல் கேட்கும்போது இனிமை தரவேண்டும். இதையெல்லாவற்றையும் சேர்ந்து அளித்திருப்பார் கண்ணதாசன். இது ஒரு பாட்டு என்று மட்டுமல்ல, இதுபோன்ற ஏராளமான பாடல்களில் புது புது யுக்திகளில் வெளிப்படுத்திய அழியா கலைஞன் கண்ணதாசன். இன்றைய நாளில் இந்த பாட்டு ட்ரெண்டு என்பதைபோல், அனைத்து பாடல்களுமே ட்ரெண்ட் ஆனால் நன்றாக இருக்கும் என அடிமனதில் நினைக்க தோன்றுகிறது.

உலக இலக்கியம் - கண்ணதாசன்


அப்போதுதான் இளையதலைமுறைகளுக்கு, அக்கால வாழ்க்கை நெறிமுறைகளை தெரிந்து கொள்ள ஒரு வாய்ப்பாக இருக்க முடியும். ஏனெனில் காதல், அன்பு, பாசம், தாய்மை, வீரம், மொழிப்பற்று, தேசப்பற்று, ஏக்கம், வெட்கம் என அனைத்தும் அன்றைய காலகட்டத்தில் எவ்வாறு சமூகத்தில் பின்னிப் பிணைந்திருந்தது என்பதற்கு சான்று கண்ணதாசனின் அனைத்து வகை பாடல்களுமே. சங்க இலக்கிய செழுமையும், யதார்த்த வாழ்வியலின் எளிமையும் பாமரனும் சென்றடைய எழுதிய பாங்கே கண்ணதாசனின் என்னும் மகாகவியின் வெற்றியின் ரகசியம் இதுவரை வெற்றிநடை போட்டு வருகிறது. வாழ்க்கையின் அனைத்து பக்கங்களையும் தெரிந்துகொள்ள உலக இலக்கியங்கள் தேவையில்லை-கண்ணதாசனின் பாடல்களே போதும். மெட்டுக்குள் கட்டுப்படுகிற வார்த்தைகளில் வாழ்வியலின் உணர்வுகள் அத்தனையும் தெறித்து அழகியல்நடை போடும் கவியரசரின் பாடல்களில். அதனால்தான் கண்ணதாசன் இன்றும் காலத்தின் பொற்கனியாய் இனித்து கொண்டிருக்கிறார்.

தாழையாம் பூ முடிச்சு.. தடம் பார்த்து நடை நடந்து.. இது யாரை நினைத்து கவியரசர் எழுதினார் தெரியுமா?

கவிஞர் கண்ணதாசன் கலையுலகத்திற்கு வழங்கிய பாடல்கள் அனைத்துமே அற்புதம்தான்.


ஆனால் அவற்றில் சில பாடல்கள் தன் குடும்பத்தினரை மையப்படுத்தியும், மனதில் வைத்தும் எழுதினார் என்று கேள்விப்படும்போது கவிஞரின் தன் குடும்பத்தினரிடம் அளவு கடந்த பிரியம் எவ்வளவு வைத்திருந்திருக்கிறார் என்பது புலப்படுகிறது.
கண்ணதாசனின் மூத்த மகள் அலமேலு கண்ணதாசன் அதை நம்மிடம் பகிர்ந்து கொள்கிறார். படியுங்கள் வாசகர்களே.

பூ முடிப்பாள்.. இந்த பூங்குழலி


நான் மூத்த பெண் என்பதால், என் மேல ரொம்ப பாசமா இருப்பாரு. என்னை டாக்டராக்கனும்னு அப்பா ரொம்ப ஆசைப்பட்டாரு. அது முடியாம போச்சு. எனக்கு கல்யாணம் செய்யறதுக்காக அப்பா மாப்பிள்ளை பாத்துட்டு இருந்தார். அந்த சமயத்தில் எழுதிய பாட்டுதான் "பூ முடிப்பாள்.. இந்த பூங்குழலி" என்ற பாடல். அந்த பாட்டை எழுதிமுடித்துவிட்டு வீட்டுக்கு வந்த அப்பா என்னிடம், உனக்கு சீக்கிரமா கல்யாணம் நிச்சயம் ஆயிடும்"ம்மா என்றார். அது மாதிரியே நிச்சயமும் ஆகி கல்யாணமும் செஞ்சு வச்சார். எங்களுக்கு நிறைய புத்திமதிகள் சொல்லிக் கொடுப்பார்.

என் பையன் மேல அவ்ளோ ஆசை


என் 2-வது பையனுக்கு அவருடைய பேர் வைக்கணும்னு ஆசைப்பட்டேன். அதுக்கு அப்பா சொன்னார், "நீ கண்ணதாசன்னு வெச்சுக்கோ. ஆனா கிருஷ்ணர் அடிக்கடி என் கனவில வர்றார். அதனால் நீ கிருஷ்ணா"னுதான் கூப்பிடணும் னு சொன்னார். எவ்வளவு பெரிய மீட்டிங்கா நடந்துட்டு இருந்தாலும் சரி, என் பையனைதான் மடிமேல தூக்கி வச்சிப்பார். அவனுக்கு பத்மா சேஷாத்ரி ஸ்கூல்லகூட அப்பாதான் சீட் வாங்கி கொடுத்தாரு. அவ்வளவு ப்ரியம் அவன்மேல.

தாழையாம் பூ முடிச்சு..


"தாழையாம் பூ முடிச்சு தடம் பாத்து நடை நடந்து.. வாழை இலை போல வந்த பொன்னம்மா.. என்வாசலுக்கு வாங்கி வந்தது என்னம்மா"ன்னு ஒரு பாட்டு வருமே.. அது எங்க அம்மாவுக்காகவே எழுதின பாடல். எங்க அம்மா பொன்னம்மா. எங்க அம்மாவுக்காக ஒரு கவிதை கூட எழுதியிருக்காரு. அப்பாவுக்கு எங்க அம்மா சமையல்ன்னா ரொம்ப பிடிக்கும். அதுவும் அம்மா செஞ்ச தக்காளி பச்சடியும், வெல்ல பணியாரத்தையும் ரொம்ப ருசிச்சு சாப்பிடுவார். அது கவிஞரின் கவிதை தொகுப்பில் கூட வெளிவந்திருக்கு. அப்பாவோட அர்த்தமுள்ள இந்து மதம் படிச்சிட்டு என்கிட்டேயே நிறைய பார் பாராட்டுவாங்க. எழுத்தாளர் லட்சுமிகூட என்னிடம் சொன்னாங்க "எப்பவுமே ஒரு எம்.எஸ்,விஸ்வநாதன்தான்.. ஒரு சுசிலாதான்.. ஒரு கண்ணதாசன்தான்... ஒரு டி.எம்எஸ்.தான்"னு.

நிறைய பாட்டுக்களை எழுதிட்டு வந்து வீட்டில எங்ககிட்ட அதை பத்தி சொல்லுவார். அம்பிகை அழகு தரிசனம் என்ற பாடல் எனக்கு ரொம்ப பிடிச்ச பாடல். அதேபோல, கந்தசஷ்டி கவசம் போலவே கிருஷ்ண கவசம் எழுதியிருப்பார் அப்பா. அதுவும் நான் அடிக்கடி விரும்பி படிக்கும் புத்தகம். நாளாம் நாளாம் திருநாளாம், கங்கைகரைதோட்டம் இந்த பாட்டெல்லாம் ரொம்ப விரும்பி அடிக்கடி கேப்பேன். அவர் உயிரோட இருந்திருந்தா, இலக்கியங்கள் நிறைய எழுதியிருப்பார். அப்பா இன்னும் கொஞ்ச நாள் உயிருடன் இருந்திருக்க கூடாதான்னு அடிக்கடி நினைச்சிப்போம்.

எந்த நிலையிலும் இவருக்கு மரணமில்லை... கண்ணதாசன்!

உலகத் தமிழர்களின் உள்ளங்களில் சிங்காரமாக சிம்மாசனம் போட்டு வீற்றிருக்கிறார் கவியரசர் கண்ணதாசன்.


கவிஞரை நினைவு கூர்ந்து ஐரோப்பிய கண்ணதாசன் ரசிகர்கள் பகிர்ந்து கொண்ட ஒரு பிளாஷ் பேக் பதிவு:
தமிழ் எழுத்துலகில் ஆரம்பித்து திரை உலகத்திலே புகுந்து கலைவாணி இட்ட கட்டளையை கட்சிதமாக செய்து முடித்த ஒரே கவியரசன் என்ற பெயருக்கு தகுதியானவர். இவர் வருகைக்கு பின்புதான் திரையுலகத்திலே பாடல்கள் பெருமை பெற்றன. இன்றுவரை இந்தக்கவியரசை வெல்ல ஒருவரும் வரவில்லை.
தமிழர்கள் மரபிலே எத்தனையோ கவிஞ்சர்கள் தோன்றி மறைந்திருக்கின்றர்கள். ஆனாலும் தமிழர்கள் எல்லோரும் புரிந்துகொள்ளும் வகையில் தன்னுடைய எழுத்துக்களை, பாடல்களை, படைப்புக்கள் வழங்கியவர் கண்ணதாசன். அவர் எழுத்துக்களில் இதுதான் சிறந்தது என்று சொல்லிவிட முடியாது எல்லா எழுத்துக்களும் ஒவ்வொரு தரப்பினர்க்கும் அவரவர் எண்ணங்களுக்கு ஏற்றால் போல் அமைந்ததுதான் கண்ணதாசனின் சிறப்பு.திரை உலகில் பெயர் பெற்றாலும் தன் தமிழ்ப்பற்றையும் சரியான முறையிலே பதிவு செய்தவர். இலங்கையில் தமிழர்கள் தாக்கப்பட்டபோது தொடங்கி, அங்கு தமிழருக்கு இன்னல்கள் ஏற்பட்டபோதெல்லம் குரல் கொடுத்தவர் கவியரசர்.


"அர்த்தமுள்ள இந்துமதம்".. இது ஒரு உபயோகமுள்ள வாழ்க்கைக்கு அர்த்தத்தை சொல்லித்தரும் அற்புதமான காலக் களஞ்சியம். தனி ஒரு மனிதன் வாழ்க்கையில் ஒவ்வொரு நாளும் அவரவர் சந்திக்கும் ஒவ்வொரு விஷயத்துக்கும் இன்பமாகட்டும், துன்பமாகட்டும், காதல், பிரிவு, கடமை, தொழில், சோதனகள், வேதனைகள் ஏற்பட்டாலும் அங்கே ஆறுதல் சொல்வது போல் இவரது பாடல்கள் வந்து துணை நிற்கும். இது தான் கண்ணதாசனின் சிறப்பு.
''நான் நிரந்தரமானவன் அழிவதில்லை எந்த நிலையிலும் எனக்கு மரணமில்லை'' என்று சொன்னது போலவே இன்றும் வாழ்ந்து கொண்டு மற்றவர்க்கு தனது பாடல்களால் ஆறுதல் தந்து கொண்டிருக்கும் கவியரசரே நீங்கள் இந்தத் தமிழ் உலகம் வாழும் வரை வாழ்வீர்கள்.



Tuesday 12 June 2018

நாட்டிய பேரொளி பத்மினி..

கலையே குடும்பம், கலையே வாழ்க்கை, கலையே மூச்சு, கலையே சகலமும் என்று வாழ்ந்தவர்  நாட்டிய பேரொளி பத்மினி .


சிறந்த நடனமங்கையாக இருந்தவரை திரையுலகில் கதாநாயகியாக அறிமுகம் செய்தது கலைவாணர் என்.எஸ்.கிருஷ்ணன்தான். தாய்மொழி மலையாளம் என்றாலும் இன்றைய தமிழர்களால் கூட பேச முடியாத அளவிற்கு நீண்டநெடிய வசனங்களை மனப்பாடம் செய்து - ஏற்ற இறக்கத்துடன் - பிசிறில்லாமல் - உச்சரிப்பு மாறாமல் - உணர்ச்சிப் பெருக்குடன் பேசிய அவரது அற்புதமான ஆற்றல் சாதாரணமானதல்ல.
இன்றைய இரண்டாம் தர, மூன்றாம்தர நடிகைகள் போல கதாநாயகிகள் என்று சொல்லிக் கொண்டு ஆபாச படமாகவும், அரை நிர்வாண ஓடமாகவும் - பின்னணி குரலில் ஒழுங்காக வாயசைக்கக்கூட முடியாமல் நடனம் என்ற பெயரில் வலிப்பு வந்தவர்போல் பேயாட்டம் போட்ட நடிகை அல்ல பத்மினி.
பரதநாட்டியம், கதகளி, குச்சிப்புடி என்று இந்தியாவின் பெரும்பான்மையான நடன உத்திகளை நுட்பமாக பயின்றவர். பரதம் உள்ளிட்ட அனைத்து நடனங்களையும் கற்றுத்தேர்ந்து கதாநாயகியாகவும் நடித்த நடிகைகள் இரண்டே பேர்கள்தான். ஒருவர் பத்மினி, இன்னொருவர் வைஜெயந்திமாலா.

சபாஷ் சரியான போட்டி!




"வஞ்சிக்கோட்டை வாலிபன்" படத்தில் இவர்கள் இணைந்து அரங்கேற்றிய போட்டி நடனம் வெள்ளித்திரையில் வரலாறாகிவிட்டது. பாடலின் நடுவே வரும் "சபாஷ்... சரியான போட்டி" என்ற அந்த வசனம்கூட இன்றைய இளையதலைமுறைகளால் பெரிதும் ரசிக்கப்படுபவை. இனி அது போன்ற நடனத்தை எக்காலத்திலும் நாம் பார்க்க முடியாது. இந்திய படங்களிலேயே மிகச்சிறந்த போட்டி நடனம் எது என்றால் இந்த பாடலை துணிச்சலோடும் கர்வத்தோடும் பெருமையோடும், சொல்லலாம். அமரதீபம், எதிர்பாராதது, தெய்வப்பிறவி, சித்தி, புனர்ஜென்மம், தில்லானா மோகனாம்பாள் போன்ற பல படங்கள் பத்மினியின் பண்பட்ட நடிப்பில் காவியங்களாயின.

தபால்தலை வெளியீடு


அதனால்தான் அவருக்கு தபால் தலையை வெளியிட்டு சோவியத் யூனியன் பல்லாண்டுகளுக்கு முன்பே பெருமைப்படுத்தியது. ஒரு கலைஞர் - அதிலும் குறிப்பாக ஒரு பெண் கலைஞர் எவ்வாறு இருக்க வேண்டும் என்பதற்கு உதாரணமாக திகழ்ந்தவர் பத்மினி. தான்தோன்றித்தனமாக உளறிக் கொட்டாமல் - காட்டுக் கூச்சல் போட்டு அமர்க்களம் செய்யாமல் - அரை வேக்காட்டுத்தனமாக அலட்டிக் கொள்ளாமல் தன்னடக்கம் கொண்ட நடிகையாக அவர் வாழ்ந்தார். அரசியல் ரீதியாக, ஒரே சமயத்தில் கருணாநிதியையும், எம்ஜிஆரையும், ஜெயலலிதாவையும் மதித்து போற்றிய அவரது பெருந்தன்மையை இன்றைய திரைப்பட நடிகைகள் கற்றுக் கொள்வது அவசியம்.

பக்குவப்பட்ட நடிகை


விரும்பி நேசித்த இளைஞனை திருமணம் செய்து கொள்ள முடியாமல். அவனது தந்தையையே மணந்து வாழ வேண்டிய அவலத்திற்கு நடுவில் - காதலனே மகனாக திரும்பி வந்த பிறகு - ஒரு பெண்ணின் இதயம் எந்த அளவிற்கு வேதனையால் வதைபடும் என்பதை "எதிர்பாராதது" படத்தில் அற்புதமாக வெளிப்படுத்தியிருக்கும் பதமினியின் நடிப்பு அபாரமானது.கணவனின் சந்தேகத்திற்கு இரையாகி தன் மீதான பழியை துடைக்க போராடும் ஒரு பெண்ணின் மன உணர்வு எவ்வாறு இருக்கும் என்பதற்கு மிகச்சிறந்த எடுத்துக்காட்டாக விளங்கியது .
"தெய்வப்பிறவி".நாட்டியத்தையும் நடிப்பையும் சரிபாதியாக கலந்து ஒரு சிறந்த பொழுது போக்கு படைப்பின் வெற்றிக்கு முக்கிய காரணியாக திகழ்ந்த திரைப்படம் தில்லானா மோகனாம்பாள்.. பல படங்களில் குணச்சித்திர நடிப்பை பதித்திருந்தாலும், தன்னால் கதாநாயகியாக மட்டுமல்ல பாட்டியாகவும் நடித்து தான் ஒரு பக்குவப்பட்ட நடிகை என்பதை "பூவே பூச்சூடவா" படத்தில் நிரூபித்தார்.

எந்த நிலையிலும் மரணமில்லை


கோடி கோடியாய் சம்பாதித்தாலும் - சொர்க்க பூமி என்று போற்றப்படும் அமெரிக்காவிலேயே வாழும் வாய்ப்பு கிடைத்தாலும் - தாய் நாட்டில்தான் வாழ்வேன் - தமிழ்நாட்டில்தான் சாவேன் என்று கூறி அதேபோல தமிழ் மண்ணில் தன்னை கரைத்து கொண்ட தன்னிகரற்ற தேசபக்தர்தான் நடிகை பத்மினி. அவர் மறைந்தபோது நடிகர் கமலஹாசன் தனது இரங்கல் செய்தியில், "தொலைக்காட்சிகள் ஒரு வரப்பிரசாதம். பத்மினி அம்மா இறந்து போனார்கள் என்கிற உணர்வு கூட இல்லாமல் அவர் நடித்த படங்களையும், ஆடிய நடனங்களையும் நாம் பார்.த்து கொண்டு இருக்கலாம்" என்றார்.
மக்கள் மனதில் ஆழப்பதிந்து போன யாராக இருந்தாலும் அவர்களுக்கு கவியரசு கண்ணதாசன் பாடியபடி "எந்த நிலையிலும் மரணமில்லை"தான். இது நாடு போற்றும் நாட்டிய பேரொளி பத்மினிக்கும் பொருந்தும்.