Monday 25 September 2017

பாண்டியராஜன்... எளிய கதைகளில் வலிய நகைச்சுவை நிகழ்த்தியவர்!

பெரிய நடிகர்கள், கலைஞர்களைப் பங்கேற்கச் செய்து வணிகச் சந்தைக்கான பொழுதுபோக்கு வெற்றித் திரைப்படங்களைத் தொடர்ந்து இயக்கியவர் எஸ்.பி. முத்துராமன். எளிமையான கதைச் சுற்றுகளுடன் கூடிய தொய்வில்லாத தெளிவான படங்கள் அவருடையவை. அவருடைய நேர்காணல் ஒன்றில் தம்மைக் கவர்ந்த அருமையான பொழுதுபோக்குப் படங்கள் என்று சிலவற்றைக் கூறினார். அப்பட்டியலில் ஆண் பாவம் என்ற படம் இருந்தது. சிறு வயதில் பார்த்திருந்த அப்படம் கலகலப்பாக இருந்தது என்பதுதான் நினைவு. முத்துராமன் கூறிய பிறகு பின்னொரு வாய்ப்பில் ஆண் பாவம் திரைப்படத்தைப் பார்த்தேன். தெள்ளத் தெளிவாக, எடுப்பு சுத்தமாக, களிகூறுகளின் தொகுப்பாக ஆக்கப்பட்ட தமிழ்த் திரைப்படம் ஆண் பாவம். இன்றைக்கும் எந்தத் தொலைக்காட்சியில் அப்படம் காட்டப்பட்டாலும் தளர்வாக அமர்ந்து புன்னகை மாறாத முகத்தோடு காணலாம். நாம் நம்புவதற்குக் கடினமான இளமை அகவையிலேயே அப்படத்தை எடுத்து முடித்திருந்தார் பாண்டியராஜன். 
 
 
 
 
ஆயிரத்துத் தொள்ளாயிரத்து ஐம்பத்தொன்பதில் பிறந்தவரான பாண்டியராஜன் ஆயிரத்துத் தொள்ளாயிரத்து எண்பத்தைந்தாம் ஆண்டில் ஆண்பாவம் திரைப்படத்தை வெளியிட்டார். அதற்கும் ஓராண்டு முன்னதாக அவருடைய முதற்படம் கன்னிராசியை எடுத்து முடித்திருந்தார். இருபதாம் அகவைத் தொடக்கங்களில் படங்களை இயக்கி வெற்றி பெற்றுத் தொடர்ந்து பயணித்தவர்களில் ஸ்ரீதரும் பாண்டியராஜனுமே தலையாயவர்கள்.


திரையுலகில் நுழைவதற்கே ஆண்டுக்கணக்கில் காத்திருக்க நேர்ந்த அக்காலத்தில் இவர்கள் செய்ததைச் செயற்கரிய செயல் என்றே சொல்ல வேண்டும். தம் இருபத்தைந்தாம் அகவையில் இப்படத்தை எடுத்து முடித்த பாண்டியராஜன் அதற்கும் முன்பாகவே சில ஆண்டுகளாக உதவி இயக்குநராகவும் பணியாற்றினார். ஸ்ரீதர் பணக்கார வீட்டுப் பிள்ளை. தம் சொந்தப் பொருளையே முதலீடாக்கி முதற்படம் எடுத்தவர். ஆனால், பாண்டியராஜன் குமுகாயத்தின் கடைத்தட்டு வாழ்வினர். சென்னையைச் சேர்ந்த வெள்ளந்தி மக்களின் பிள்ளை. அத்தகைய பின்புலத்திலிருந்து திரைத்துறைக்குள் நுழைந்து ஒரு முதலீட்டாளரைப் பிடித்துப் படமெடுத்து வென்றது வியப்புக்குரியதுதான். பாண்டியராஜனைப் போன்ற ஒருவர் இளமையிலேயே தொழில் கற்று வெற்றி பெற்றதற்கு அவருடைய ஆசான் பாக்யராஜின் சந்தை மதிப்பும் ஒரு காரணம். 
 
 பாண்டியராஜனை நான் எளிமையாக மதிப்பிட்டிருந்தேன். அவருடைய நேர்காணல் ஒன்றைப் படித்த பிறகுதான் அதை மாற்றிக்கொண்டேன். திரைத்துறையில் நுழைந்து ஓர் உதவி இயக்குநராகப் பணியாற்றிப் படமியக்கும் வாய்ப்பைப் பெறுவது குறித்து அவர் தெளிவான வரையறை ஒன்றைச் சொன்னார். 
 
நினைவிலிருந்து அதைச் சொல்கிறேன் : "சினிமாவில நீங்க உதவி இயக்குநராகச் சேர்ந்துட்டீங்கன்னா தொழில்நுட்பம் சார்ந்து கத்துக்கிறதுன்னு ஒரு பகுதி இருக்கு. அதைக் கத்துக்கிறதுக்கு மூன்று நான்கு படங்கள் போதுமானது. ஓர் உதவி இயக்குநராக மூன்று நான்கு படங்களுக்கு மேல் நீங்க கத்துக்கறதுக்குப் பெரிசா எதுவுமிருக்காது. அந்த மூன்று நான்கு வருசத்துக்குள்ள நாலைஞ்சு படம் வேலை செஞ்சிருப்பீங்க. அது போதும். வேண்டியதைக் கத்துக்கிட்டாச்சு. அந்த இடத்திலிருந்து உங்க உதவி இயக்குநர் வாழ்க்கைய விட்டு வெளிய வரப் பார்க்கணும். நீங்க படம் இயக்குறதுக்கு முயற்சி பண்ணனும். அந்தச் சரியான நேரத்தை விட்டுட்டீங்கன்னா உங்க வாழ்க்கை உதவி இயக்குநராகவே கழிஞ்சிடும். பத்து வருசம் இருபது வருசம் போறதே தெரியாது. கடைசி வரைக்கும் படமியக்கும் வாய்ப்பு கிடைக்காமப் போய்விடலாம்."
 
இந்தத் தெளிவுதான் பாண்டியராஜனை இளமையிலேயே படமியக்கச் செய்தது. ஆண்பாவத்தின் வெற்றிதான் பாண்டியன் என்ற நடிகரை மேலும் இன்னொரு சுற்று வரவைத்தது. அக்காலப் பெரியம்மாக்கள் தம் மகனுக்குச் சீதாவைப் போன்ற பெண்ணைத் தேடினார்கள். கொல்லங்குடி கறுப்பாயி என்ற பாட்டியம்மா தமிழகம் அறிந்தவரானார். பாண்டியராஜனுக்கும் ஒரு நடிகராக வரவேற்பு கிடைத்தது. இயக்கத்துக்கு அப்பால் அவர் நாயகனாகவும் நடிக்கலானார். 
 
பாண்டியராஜனிடம், "உங்கள் தேதிகளை வாங்க வேண்டுமென்றால் நான் என்ன செய்ய வேண்டும் ?" என்று தயாரிப்பாளர் ஒருவர் கேட்டாராம். அப்போது வெளியாகியிருந்த பகல்நிலவு என்ற படத்தின் வழியாக மணிரத்னம் என்ற புதியவர் சிறிய சலனத்தை ஏற்படுத்தியிருந்தார். "மணிரத்னம் என்னும் இயக்குநர் நன்கு படமெடுக்கிறார். அவரை இயக்குநராக அமர்த்தி என்னை வைத்துப் படமெடுப்பதானால் சொல்லுங்கள். உடனே தேதிகளைத் தருகிறேன்" என்று அந்தத் தயாரிப்பாளரிடம் பாண்டியராஜன் கூறினாராம். அவர்கள் இருவரும் ஒரு படத்திலேனும் இணையும் வாய்ப்பு அமையவில்லை. ஆனால் இந்நிகழ்வை மணிரத்னம் ஒரு விழாவில் நன்றியோடு கூறியமர்ந்தார். பாண்டியராஜனுக்குத் திரைப்போக்குகளைப் பற்றிய நுண்ணுணர்வு இருந்தமையால்தான் அவர் அப்போதே மணிரத்னத்தைக் கணித்தார்.
 
 
பாண்டியராஜன் நடித்தவற்றில் 'ஏட்டிக்குப் போட்டி' என்ற படம் எனக்குப் பிடித்த படம். அக்காலத்து ஊர்ப்புறத்து இளைஞன் ஒருவனுக்கும் அவன் வாழ்வில் எதிர்பாராத விதமாக வரும் நகரத்துப் பள்ளி மாணவிக்கும் இடையில் தோன்றும் காதல்தான் அப்படத்தின் கதை. பாண்டியராஜனின் கிராமத்துக்குச் சாரணர் இயக்க மாணவியர் குழுவொன்று சேவை முகாமுக்காக வரும். அக்குழுவில் ஒரு மாணவி காட்டுக்குள் காணாமல் போய்விடுவார். மாணவியைக் காணாத சாரணர் குழு தேடிப்பார்த்துவிட்டுச் சென்று விடும். அம்மாணவியைத் தற்செயலாகக் கண்டுபிடித்து தம் வீட்டுக்கு அழைத்து வருவார் பாண்டியராஜன். வீட்டுக்கு வந்தவுடன் அம்மாணவி பூப்பெய்திவிடுவாள். யார் வீட்டுப் பெண்ணாயினும் தம் வீட்டில் பூப்பெய்தினால் அவ்வீட்டுக்கு நன்னிகழ்வுதானே ?
 
 பாண்டியராஜனின் வீட்டார் அப்பெண்ணுக்கு உரிய சடங்குகளைச் செய்து ஓலை கட்டி அமர்த்தி வைப்பார்கள். இடையில் நாயகியைத் தேடி பெண் வீட்டார் வருவதும், சடங்கு முடியாமல் அனுப்ப மாட்டோம் என்று ஊரார் வாதிடுவதுமாக அக்கதை நகரும். காணமற்போன நாளிலிருந்து தன்னைக் கண்ணாகக் கவனித்துக்கொள்ளும் பாண்டியராஜன் குடும்பத்தார் மீது அவளுக்குப் பாசம் தோன்றிவிடும். அது நாயகன் மீது காதலாக மாறிவிடும். 
 
எதிர்ப்புகளை வென்று காதலர்கள் எவ்வாறு சேர்கிறார்கள் என்பது மீதக்கதை. என் நினைவிலிருந்து படக்கதையைக் கூறியிருக்கிறேன். ஏட்டிக்குப் போட்டி படத்திற்குத் திரைக்கதை வசனம் எழுதியவர் பாண்டியராஜன்தான். இயக்கியவர் ஆர். கோவிந்தராஜன். இணையத்தில் இப்படம் இருக்கிறது. எண்பதுகளின் கலகலப்பான நாட்டுப்புறப் படங்களை விரும்புவீர்கள் என்றால் கட்டாயம் பார்க்கலாம். 
 
பாண்டியராஜன் இயக்கிய நெத்தியடி என்ற படத்தின் முதற்பாதியில் 'தமிழ்த் திரைப்படங்களில் ஆக்கப்பட்ட மிகச்சிறந்த நகைச்சுவைப் பகுதி' இருக்கிறது. பாண்டியராஜனின் படங்களில் ஜனகராஜ், ஈரோடு சௌந்தர், திடீர் கண்ணையா ஆகியோர் நல்ல கதைப் பாத்திரங்களில் வெளிப்பட்டனர். மூத்த நடிகர்கள் வீகே இராமசாமி, தங்கவேலு (மனைவி ரெடி) ஆகியோரையும் பாண்டியராஜன் நன்கு பயன்படுத்தினார். 
 
தொண்ணூறுகளின் தொடக்கத்தில் அகல் திரைப்படங்களும் பொருட்செலவுப் படங்களும் போக்குகளைத் தீர்மானம் செய்தன. அப்போதுதான் பாண்டியராஜனின் திரைப்படங்கள் பின்தங்கின. ஆனால், பாண்டியராஜனின் முப்பதுக்கும் மேற்பட்ட படங்கள் இன்றைக்குப் பார்த்தாலும் களிப்பூட்டத் தவறாதவை. கதைக்குள் நிகழ்த்தப்படும் நகைச்சுவைக்கு எப்போதும் தனிச்சுவை உண்டு. அதை விரும்புவோர்க்குப் பாண்டியராஜனின் படங்கள் இப்போதும் பிடிக்கும்.

- கவிஞர் மகுடேசுவரன்

Thursday 7 September 2017

நடிகர் திலகம்... ஏற்காத வேடமில்லை!

தமிழ்க் கலையுலகில் நாடக நடிகராக நுழைந்து, திரைப் படத்துறைக்குள் சாதாரண நடிகராக அடி வைத்து, 'பராசக்தி' படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமானவர் விசி கணேசன் எனும் சிவாஜி கணேசன். 
 
 
 
 
பல்வேறு சவாலுக்குரிய வேடங்களை ஏற்று ஈடுஇணையற்ற முறையில் இந்திய திரையுலகமே திரும்பிப் பார்த்து ஆச்சரியம் கொள்கின்ற அளவிற்கு தனது நடிப்பாற்றலை வெளிப்படுத்தி 'நடிகர் திலக'மாக ஜொலித்தவர் சிவாஜி கணேசன்.
 
அவர் ஏற்று நடிக்காத கதாபாத்திரங்களே இல்லை என்று சொல்லலாம். சிவாஜி, தான் ஏற்றுக் கொள்ளும் கதாபாத்திரங்களை சரியான முறையில் உள்வாங்கி அந்த கதாபாத்திரத்தின் போக்குப்படி சிரிப்பது, நடப்பது, கோபப்படுவது, கண்ணீர் விடுவது என்று அனைத்தையும் தனது முகபாவங்களினாலும், உடல் அசைவுகளினாலும் அப்படியே செய்து காட்டுவதில் உலகத் திரைப்படக் கலைஞர்களின் வரிசையில் நடிகர் திலகம் சிவாஜிகணேசன் முதன்மையானவர், நிகரற்றவர். 
 
 
 
 
சிவாஜிக்கு நடிப்பதற்கு கிடைத்த கதாபாத்திரங்களைப்போல் வேறு எந்த நடிகருக்கும் ஏன் இந்தியத் திரைப்பட அளவில் உள்ள எந்த கலைஞர்களுக்கும் அமையவில்லை. 
 
 'நவராத்திரி' படத்தில் அப்பாவியாக, முரடனாக, டாக்டராக, குடிகாரனாக, தொழுநோயாளியாக, விவசாயியாக, கூத்துக் கட்டுபவராக, காட்டிலாகா அதிகாரியாக, காவல்துறை அதிகாரியாக இப்படி ஒன்பது விதமான வேடங்களை எந்த விதமான கிராபிக்ஸ் வேலைகள் இல்லாமல், மேக்கப்பின் மூலம் எந்த மேஜிக்கும் செய்யாமல் ஒவ்வொரு வேடத்திற்கும் வெவ்வேறுவிதமான வேறுபாடுகளை காண்பித்து நடிப்பினால் மட்டும் வித்தியாசத்தை காட்டி நடித்து சாதனைப் புரிந்த ஒரே நடிகர் உலகத்திலேயே நடிகர் திலகம் சிவாஜி கணேசன் ஒருவர் தான் என்றால் அது மிகையான செய்தி அல்ல.
 
 
 

'ராஜபார்ட் ரங்கதுரை' படத்தில் நாடக நடிகராக அர்ஜீனன், நந்தனார், ஸ்ரீமுருகன், ஹரிச்சந்திரன், ஹாம்லட், பகவத்சிங், திவான்பகதூர், கிறிஸ்துமஸ் தாத்தா, கொடிக் காத்த திருப்பூர் குமரன் இப்படி ஒன்பதுவிதமான நாடகங்களில் ஒன்பது விதமான வேடங்களை ஏற்று நடித்து சிறப்பித்தவர் நடிகர் திலகம். 'தெய்வமகன்' படத்தில் அப்பா, பெரியமகன், சிறிய மகன் என்று மூன்று விதமான கதாபாத்திரங்களில் வித்தியாசம் காட்டி நடித்து படம் பார்த்தவர்களை பிரம்மிக்க வைத்தவர் நடிகர் திலகம். 
 
இதற்காக இந்தப் படம் ஆஸ்கர் விருதுக்காக முதன்முதலில் போட்டியில் கலந்துக் கொண்டது என்பது அனைவரும் அறிந்த செய்தியாகும். தேர்வுக் குழுவிலிருந்த பலரும், இந்த மூன்று வேடங்களையும் ஒரே நடிகர் நடித்தார் என்பதை முதலில் நம்பவில்லை. 
 
 
 
 
 'உத்தமபுத்திரன்' படத்தில் இரட்டை வேடம் ஏற்றார். 'கௌரவம்' படத்திலும் இரட்டை வேடத்தில் நடித்தார். 'மனிதனும் தெய்வமாகலாம்' படத்தில் ஆத்திகன் & நாத்திகன் என்று இரட்டை வேடத்தில் நடித்தார். 'பாட்டும் பரதமும்' படத்தில் பாட்டையும், பரதத்தையும் இணைக்கும் இருவிதமான கதாபாத்திரம். 'திரிசூலம்' படத்தில் தந்தை, மூத்தமகன், இளையமகன் என்று மூன்றுவிதமான கதாபாத்திரத்தில் நடிப்பும் மூன்றுவிதமாக இருந்தது. அதனால் படமும் ஹிட்டாகி வசூலையும் தந்தது.

'எமனுக்கு எமன்' படத்தில் எம தர்மராஜனாக, எதிர்க்கும் இளைஞனாக இரண்டு கதாபாத்திரங்களில் நடிப்பாற்றலை சிறப்பாக வெளிப்படுத்தினார். 'வெள்ளை ரோஜா' படத்தில் புனிதமான கிறிஸ்துவ பாதிரியாராகவும், போலீஸ் அதிகாரியாகவும் மாறுபட்டட நடிப்பை வெளிப்படுத்தினார். 
 
'சந்திப்பு' படத்திலும் இரட்டை வேடமேற்றார். 'எங்க ஊர் ராஜா', 'என் மகன்', 'சிவகாமியின் செல்வன்', 'புண்ணியபூமி', 'விஸ்வரூபம்', போன்ற படங்களில் இரட்டை வேடமேற்று நடித்தார். 'பலே பாண்டியா' படத்தில் 3 வேடங்கள். 
 
ஒவ்வொரு படத்திலும் மாறுபட்ட வேடமேற்று நடிகர் திலகம் சாதனைப் புரிந்தார். ஒரு வேடத்தை ஏற்றிருந்த படங்களிலும், ஒப்பற்ற நடிப்பாற்றலை வெளிப்படுத்தி நடித்தார். முதல் படமான 'பராசக்தி'யில் சீர்திருத்தம் பேசும் இளைஞராக நடித்த சிவாஜி, 'திரும்பிப்பார்' படத்தில் பெண்பித்து பிடித்தவராக வந்தார். 
 
'மனோகரா'வில் சங்கிலியால் பிணைக்கப்பட்ட வீரனாக அனல் தெறிக்கும் வகையில் வசனம் பேசி அந்நாளில் ரசிகர்களை ஈர்த்தார். 'அந்த நாள்' படத்தில் தேசத் துரோகியாக துணிச்சலாக வேடமேற்று நடித்தார். 'சபாஷ்மீனா', 'கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி' படங்களில் முழுநீள காமெடி வேடங்களில் நடித்தார்.
 
 
 
'வணங்காமுடி' படத்தில் முரட்டுத்தனமான வேடத்தில் நடித்தார். 'துளிவிஷம்' படத்தில் வில்லன் வேடம் ஏற்று வீர்யமாக நடித்திருந்தார். 'கூண்டுக்கிளி' யில் எம்.ஜி.ஆருடன் இணைந்து வில்லன் போன்ற கதாபாத்திரத்தில் துணிச்சலுடன் நடித்தார். 'முதல் தேதி' படத்தில் தற்கொலை செய்துக் கொள்ளும் கோழையாக, 'தெனாலிராமனில்' நகைச்சுவை கலந்த அறிவாளி வேடத்தில், 'ரங்கோன் ராதா' படத்தில் வில்லன் தன்மை கலந்த கதாபாத்திரமாக வாழ்ந்தார். 'மக்களைப் பெற்ற மகராசி'யில் முதன்முறையாக கொங்குநாட்டு தமிழ் பேசும் விவசாயியாக நடித்தார். 
 
'தங்கமலை ரகசியம்' படத்தில் காட்டுவாசியாகவும் குரூரமான வேடத்திலும் நடித்தார். 'அம்பிகாபதி' படத்தில் அம்பிகாபாதியாக நடித்தார். 'சம்பூர்ண ராமாயணம்' படத்தில் பரதனாக நடித்து முதறிஞர் ராஜாஜியின் பாராட்டைப் பெற்றார். 'காத்தவராயன்'' படத்தில் காவல்தெய்வமாக நடித்தார். 
 
'வீரபாண்டிய கட்டபொம்மன்' படத்தில் கட்டபொம்மனாக ஆங்கிலேயரை மிரட்டிய வரலாற்று கதாபாத்திரத்தில் நடித்தார். 'பாகப் பிரிவினை' யில் ஊனமுற்ற இளைஞர்.'தெய்வப் பிறவி'யில் தெய்வப் பிறவியாகவே மாறியிருந்தார். 'படிக்காத மேதை'யில் மனித நேயமிக்க மகத்தான கதாபாத்திரம். 'பாவை விளக்கு' படத்தில் எழுத்தாளராக நடித்தார். 
 
'பாவமன்னிப்பு' படத்தில் இந்துவாக பிறந்து இஸ்லாமியரால் வளர்க்கப்பட்டு கிறிஸ்துவப் பெண்ணை மணக்கும் மதநல்லிணக்க கதாபாத்திரத்தில் நடித்தார். 'பாசமலர்' படத்தில் அன்பான அண்ணன் வேடத்தில் நடித்தார். 'பாலும் பழமும்' படத்தில் மருத்துவர் வேடத்தில் நடித்தார். 'கப்பலோட்டிய தமிழன்' படத்தில் இந்திய சுதந்திர போராட்ட வீரர் வ.உ.சியாக மாறி, இன்றுவரை வஉசி என்றால் சிவாஜியின் முகமே நினைவுக்கு வரும் அளவுக்கு சிறப்புச் சேர்த்தார். 'ஆலயமணி' படத்தில் வில்லன் தன்மை கலந்த ஹீரோ பாத்திரம் அவருக்கு. 'இருவர் உள்ளம்' படத்தில் பிளேபாய் வேடம். 'பார்மகளே பார்' படத்தில் சுயகௌரவம் பார்க்கும் ஜமீந்தார் வேடத்தில் நடித்தார். 
 
'கர்ணன்' படத்தில் மகாபாரதத்தின் மாபெரும் கதாபாத்திரமான கர்ணனாகவே காட்சி தந்தார். 'புதிய பறவை' கணவனாக, காதலனாக, புதுவிதமானன கதாபாத்திரத்தில் தோன்றினார். 'ஆண்டவன் கட்டளை' கல்லூரிப் பேராசிரியராக நடித்தார். 'திருவிளையாடல்' புராணக் கதையில் சிவபெருமனாகவே மாறியிருந்தார். 'மோட்டார் சுந்தரம் பிள்ளை' படத்தில் வயது வந்த 3 பிள்ளைகளுக்கு தந்தையாக வாழ்ந்தார்.
 
 
'மகாகவி காளிதாஸ்' படத்தில் காளியின் அருள்பெற்ற கவி காளிதாஸாக நடித்தார். 'சரஸ்வதி சபதம்' கவிஞர் வித்யாபதி, நாரதர் என்று இருவிதமான கதாபாத்திரத்தில் நடித்து கவர்ந்தார். 'கந்தன் கருணை'யில் முருகப்பெருமானின் தோழன் வீரபாகுவாகவும், 'திருவருட்செல்வர்' படத்தில் அப்பராக, சங்கரராக, திருமலை மன்னனாகவும், 'திருமால் பெருமை' திருமாலின் புகழைப் பரப்பும் தொண்டராகவும், 'தில்லானா மோகனாம்பாள்' படத்தில் நாதஸ்வர வித்வானாகவும், 'மிருதங்க சக்கரவர்த்தி' யில் மிருதங்க வித்வானாகவும், 'தங்கச் சுரங்கம்' படத்தில் ஜேம்ஸ்பாண்ட் வேடத்திலும், 'வியட்நாம்வீடு' படத்தில் பிரிஸ்டிஜ் பத்மநாபன் என்ற ஐயர் வேடத்திலும், 'ராமன் எத்தனை ராமனடி'யில் சாப்பாட்டு ராமன் - நடிகர் விஜயகுமார் என இரு வேடங்களில் கலக்கினார். 'குலமா குணமா' படத்தில் நாட்டாமையாக, நல்ல அண்ணனாக வந்தவர், 'சவாலே சமாளி' படத்தில் சுயமரியாதை கலந்த விவசாய இளைஞராக நடித்து மனம் கவர்ந்தார்.
 
 'பாபு' படத்தில் கை ரிக்ஷா இழுப்பவராக நடித்திருப்பார். ராஜா படத்தில் கடத்தல்காரனாகவும், 'ஞானஒளி' படத்தில் சந்தர்ப்ப சூழ்நிலையில் தவறு செய்துவிட்டு தவிப்பராகவும், 'பட்டிக்காடா பட்டணமா' படத்தில் தமிழ்பண்பாட்டை போற்றும் மூக்கையாவாக, 'தவப்புதல்வன்' படத்தில் மாலைக் கண்நோயாளியாக, 'வசந்த மாளிகை'யில் ஜமீன்வாரிசாக, 'பாரதவிலாஸ்' படத்தில் ஜாதி மத, மொழி பேதமற்றவராக, 'ராஜாராஜசோழன்' படத்தில் ராஜராஜ சோழன் என்ற சரித்திர கதாபாத்திரத்தில் வாழ்ந்து காட்டி, அந்தப் பாத்திரங்களை இன்னும் மறக்க முடியாமல் செய்துள்ளார். 
 
 
'தங்கப்பதக்கம்' படத்தில் எஸ்.பி.சௌத்ரியாக கம்பீரமாக வந்த சிவாஜியைப் பார்த்து தாங்களும் அப்படி மாற நினைத்தவர்கள் பலர். 'அவன்தான் மனிதன்' படத்தில் அடுத்தவருக்கு அள்ளித்தருபவராக, 'டாக்டர் சிவா' படத்தில் தொழுநோயாளியை குணப்படுத்தும் டாக்டராக, 'நாம் பிறந்த மண்' படத்தில் சுதந்திர போராட்ட வீரராக, 'கல்தூண்' படத்தில் நடிப்பில் தூணாக வெளிப்பட்டார். 
 
எண்பதுகளின் மத்தியில் தன் வயதுக்கேற்ற வேடங்களில் நடிக்க ஆரம்பித்தார் நடிகர் திலகம். அவற்றுள் முக்கியமானது 'முதல் மரியாதை' படத்தில் ஊரே மதிக்கும், ஆனால் சொந்த வாழ்க்கையில் நிம்மதி இழந்த ஊர்ப் பெருசு வேடம். சிவாஜின் வாழ்க்கையில் காவியப் படமாக நின்றது. நடிகர் திலகத்தின் நடிப்பும், இசைஞானி இளையராஜாவின் இசையும் அந்தப் படத்துக்கு காவிய அந்தஸ்தைத் தந்தன.
 
 
 ரஜினியுடன் ஆரம்பத்தில் சிவாஜி கணேசன் படங்களில் கவுரவ வேடங்களில் வந்தவர் ரஜினி. ஜஸ்டிஸ் கோபிநாத், நான் வாழவைப்பேன் போன்ற படங்கள். எண்பதுகளில் ரஜினியின் படங்களில் முக்கிய வேடத்தில் நடித்தார் சிவாஜி. அவற்றில் முக்கியமானவை விடுதலை. படிக்காதவன். விடுதலை படத்தில் யாருக்கு முக்கியத்துவம், ரஜினிக்கா.. சிவாஜிக்கா? என இரு தரப்பு ரசிகர்களுக்குள் எழுந்த மோதலால் பெரும் கலவரமே ஏற்பட்டது .
 
தியேட்டர்களில். 'படிக்காதவன்' படத்தில் மீண்டும் ரஜினியுடன், அவரது பாசமிகு அண்ணனாக வந்தபோது அதே ரசிகர்கள் படத்தைக் கொண்டாடினர். வெள்ளி விழா கண்ட படம் அது. சிவாஜிக்கு கடைசி படமாக அமைந்தது ரஜினியின் படையப்பாதான். 
 
கமலுடன் சிவாஜி கணேசனின் நடிப்பு வாரிசு என்று அழைக்கப்படும் கமல் ஹாஸனுடனும் சிவாஜி கணேசன் நடித்துள்ளார். ஆனால் ரஜினியுடன் நடித்த அளவுக்கு இல்லை. இருவரும் இணைந்து நடித்தவை மூன்று படங்கள்தான். ஆரம்ப நாட்களில் நாம் பிறந்த மண் படத்தில் சிவாஜியின் வில்லத்தனம் கொண்ட மகனாக கமல் நடித்தார். பின்னர் சத்யம் படத்தில் சிவாஜியின் தம்பியாக கமல் நடித்திருப்பார். சிவாஜி - கமல் சேர்ந்து நடித்த மூன்றாவது படம் தேவர் மகன். சிவாஜிக்கு தேசிய விருது பெற்றுத் தந்த படம். படத்தின் தரமும் சிவாஜி நடிப்பும் தேசிய விருதுக்கு மரியாதை சேர்த்தன என்றால் மிகையல்ல.
 
 'அன்புள்ள அப்பா', 'பசும்பொன்' படங்களில் மகள் மீது அழ்ந்த பாசம் கொண்ட ஒரு தந்தையாக வாழ்ந்திருப்பார் சிவாஜி. குறிப்பாக பசும்பொன் படத்துக்காக இன்னொரு தேசிய விருதே அவருக்குத் தந்திருக்க வேண்டும். 
 
இன்றைய தலைமுறை நடிகரான விஜய்யுடன் இணைந்து 'ஒன்ஸ்மோர்' படத்தில் நடித்து அசத்தியிருப்பார் சிவாஜி. 'என் ஆச ராசாவே' படத்தில் குதிரையாட்டம், ஒயிலாட்டம் கலைஞராகவும், 'பூப்பறிக்க வருகிறோம்' படத்தில் காதலர்களைச் சேர்த்து வைக்கும் மூத்தவராகவும் நடித்திருப்பார். 
 
இப்படி எண்ணிக்கையில் அடங்காத எண்ணற்ற கதாபாத்திரங்களில் நடித்து தமிழ் சினிமாவின் தலைச்சிறந்த கலைஞராக இன்றுவரையிலும் ஈடு இணையாற்றவராக அனைவராலும் போற்றப்பட்டு வருகிறார். 
 
அண்ணா எழுதிய சிவாஜி கண்ட இந்து சாம்ராஜ்யம் நாடகத்தில் சிவாஜியாக நடித்தால் தந்தை பெரியாரால் வி.சி.கணேசனாக இருந்தவர் சிவாஜி கணேசனாக்கப்பட்டார். வியட்நாம் வீடு நாடகத்தைப் பார்த்து ஜெமினி அதிபர் எஸ்.எஸ்.வாசன் கண்ணீர் விட்டு கதறினார். 'என் வாழ்க்கையில் நடந்த சம்பவத்தை நினைவுப்படுத்துவது போல் நடித்தீர்கள்' என்று சிவாஜியைப் பாராட்டினார். சிவாஜி படங்களை ரீமேக் செய்யும்போது 'சிவாஜி நடிக்கின்ற கதாபாத்திரங்களில் எங்களால் நடிக்க முடியாது' என்று இந்தி, தெலுங்கு, மலையாளம் மற்றும் அனைத்து மொழிப் பட உலகைச் சேர்ந்த மாபெரும் கலைஞர்கள் அறிவித்தார்கள். 
 
இன்றைய கலைஞர்களுக்கு நடிப்பின் பெட்டகமாக இன்றுவரை திகழ்ந்து கொண்டிருப்பவர் நடிகர் திலகம் சிவாஜிகணேசன். மார்லன் பிராண்டோ போன்ற ஹாலிவுட் நடிகர்கள் இவரது படங்களைப் பார்த்து பிரமித்துப் போனார்கள். 'எங்களால் நம்பவே முடியவில்லை இப்படியெல்லாம் ஒருவரால் நடிக்க முடியுமா? அபாரம், அற்புதம் இதுபோன்று வேறு எவராலும் நடிக்க முடியாது. எங்களைப் போல் உங்களால் நடிக்க முடியும், உங்களைப் போல் எங்களால் நடிக்க முடியாது,' என்று ஆச்சரியப்பட்டு நடிகர் திலகத்தை மனம் திறந்து பாராட்டினார்கள். அவருடன் இணைந்து படமெடுத்துக் கொண்டு மகிழ்ந்தார்கள்.
 
 
சிவாஜியைப் பாராட்டிய மேலும் சில பிரபலங்கள்... 
 
தன்னுடைய கைவிரல் அசைப்பின் மூலமே நம்மையெல்லாம் கவர்ந்துவிட்ட சிவாஜிகணேசன் ஓர் உலகப் பெரு நடிகர்.
 
 - முதறிஞர் ராஜாஜி 
 
உலகிலேயே சிறந்த நடிகரான சிவாஜிகணேசன் தமிழ்நாட்டில் இருப்பது நாம் பெற்ற பாக்கியமாகும். 
 
 - தந்தை பெரியார் 
 
நடிப்பிற்கு இலக்கணம் வகுத்தவரே நடிகர் திலகம் சிவாஜி கணேசன்தான். நம் பாரத நாட்டிற்கு அவர் தம் நடிப்பின் மூலம் மகத்தான பெயரைத் தேடித் தந்திருக்கிறார். அவரைப் பெற்றதால் இந்த நாடே பெருமையடைகிறது. பாரதத் தாய் பூரிப்படைகிறாள். 
 
 - பெருந்தலைவர் காமராஜர் 
 
 எனது திரைக்கதை, உரையாடல்களுக்கு உயிரோட்டம் தந்தவர் என்றும் தமிழாக, தமிழ் உரை நடையாக வாழக்கூடியவர் எனது நண்பர் சிவாஜி கணேசன். 
 
- கலைஞர் மு. கருணாநிதி. 
 
 தமிழகம் பெருமைப்படும் வகையில், தனது திறமையின் மூலம் புகழ்பெற்று வாழ்பவர் அறிஞர் அண்ணா போற்றிய என் அன்புத் தம்பியான கணேசன். 
 
- புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர். 
 
சிவாஜியின் நடிப்பாற்றலை 'சம்பூர்ண ராமாயணம்' படத்தில் இணைந்து நடிக்கும்போது பார்த்தேன், தலைச்சிறந்த கலைஞரோடு நான் நடித்தது எனது பாக்கியம். 
 
- என்.டி. ராமாராவ் 
 
 புதிய தலைமுறை நடிகர் நடிகையர் நடிப்பைப் பற்றித் தெரிந்துக் கொள்ள வேண்டும் என்றால் சிவாஜி அவர்கள் நடித்த படங்களைப் பார்த்தாலே போதும். ஒரு பல்கலைக் கழகத்தில் பயின்றது போன்ற ஒரு உணர்வு ஏற்படும்.
 
- புரட்சித் தலைவி செல்வி. ஜெ.ஜெயலலிதா
 
 எங்கள் ஏவிஎம் நிறுவனம் தயாரித்த 'உயர்ந்த மனிதன்' படத்தில் நடிகர் திலகமும், நடிகர் அசோகனும் இணைந்து நடித்தார்கள். ஒரு காட்சியில் நடிப்பதற்கு அசோகன் பல டேக்குகள் வாங்கினார். அங்கிருந்த சிவாஜி அவரை இப்படி நடிக்கச் சொல்லுங்கள் என்று எங்களுக்கு நடித்துக் காட்டினார். அதில் பத்து பர்சன்ட்தான் அசோகனால் நடிக்க முடிந்தது. அந்த 10% நடிப்பிற்கே அவ்வளவு பாராட்டுக்கள் வந்து குவிந்தது. 10 பர்சன்டுக்கே இவ்வளவு பாராட்டுக்கள்... அவர் சொல்லிக் கொடுத்தபடி 100 சதவீதம் நடித்திருந்தால்...? நாங்கள் வியந்துபோனாம். 
 
- ஏவிஎம் சரவணன்.


-பெரு துளசிபழனிவேல்

 


 




எம்என் நம்பியார்.. வில்லனல்ல, ஹீரோ!

ஏதோ ஒரு ஊரில் புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆரின் படம் ஓடிக்கொண்டிருந்தது. அந்தப் படத்தில் எம்.ஜி.ஆரும் எம்.என்.நம்பியாரும் மோதிக்கொண்டிருந்தார்கள். இருவரும் உருண்டு புரண்டு வாள் சண்டைப்போட்டுக் கொண்டிருந்தார்கள். அப்படி நடந்துக் கொண்டிருக்கின்ற சண்டையில் எம்.ஜி.ஆர் வாளை நம்பியார் தட்டிவிடுவார். எம்.ஜி.ஆர். நிராயுதபாணியாக ஆபத்தில் சிக்கிக் கொள்வார். அப்போது டெண்ட்டு கொட்டகையில் படம் பார்த்துக்கொண்டிருந்த ஒருவர் 'தலைவரே இந்தாங்க கத்தி... பிடித்துக் கொள்ளுங்கள்' என்று தன்னிடம் உள்ள கத்தியை, ஒடிக்கொண்டிருப்பது படம் என்றுகூட தெரியாமல் திரையின் மீது வீசி எறிந்தார். கத்திப்பட்டதும் இறுக்கமாககட்டப்பட்டிருந்த துணியால் ஆனதிரை கிழிந்துவிட்டது.
 
 
 

அதே போல் எம்.ஜி.ஆர் தேர்தலுக்காக ஒட்டுக் கேட்டு வரும்போது ஒரு வயதானபாட்டி கற்பூரம் ஏற்றிஆரத்தி எடுத்திருக்கிறார். அப்போது நீங்க அந்தப் பாவி நம்பியாரிடம் கொஞ்சம் ஜாக்கிரதையாக இருங்க தம்பி என்றுச் சொல்லி நெற்றியில் பொட்டு வைத்தாராம். 
 
இந்த இரண்டுமே பின்னாளில் திரையில் காட்சிகளாகவும் வந்துவிட்டன. இப்படித்தான் டைரக்டர் வி.சேகரின் 'நீங்களும் ஹீரோதான்' படத்தில் நடிப்பதற்காகநம்பியார் ஒரு கிராமத்திற்கு வந்து தங்கியிருக்கிறார். இவரைப் பார்த்த வயதான ஊர்ப் பெண்கள், "ஐயோ இவனா... படங்களில் பல பெண்களைக் கற்பழித்தவனாச்சே...", என்று பயந்து ஒடியிருக்கிறார்கள். 
 
இப்படி பல படங்களில் வில்லனாக நடித்து படம் பார்த்தவர்களையே பயமுறுத்தி நிஜம் என்று நம்பும்படி தனது நடிப்பாற்றலை சிறப்பாக வெளிப்படுத்தி படம் பார்த்தவர்களுக்கெல்லாம் நிஜமாகவே எதிரி போல் தெரிந்தவர் எம்.என்.நம்பியார்.




எம்.ஜி.ஆர். படம் பார்த்த அத்தனை ரசிகர்களுக்கும் இவர் விரோதியாகவே தெரிந்தார். குறிப்பாக எம்.ஜி.ஆர். ரசிகர்களுக்கு இவர் பரம விரோதியாகவே அறியப்பட்டார். அந்த அளவிற்கு இவரது வில்லன் நடிப்பு எம்.ஜி.ஆர். படங்களில் கொடூரமாகவே இருக்கும். இவர் நடித்த பலபடங்களில் குடிப்பார். பெண்களை துரத்தி துரத்திகற்பழிப்பார். ஹீரோவை அடிப்பார், குழந்தைகளை, முதியோர்களை துன்புறுத்துவது போல் நடிப்பார். இந்த நடிப்பைப் பார்த்துதான் கெட்டவர்களை பார்த்தால் 'நீ என்ன பெரிய நம்பியாராடா' என்று கேட்டபார்கள். அப்படிப்பட்ட வில்லன் வேடங்கள் அவருக்கு அமைந்தன. 
 
நிஜ வாழ்க்கையில் தெய்வப்பக்தி கொண்டவராகவும் நல்ல பழக்க வழக்கங்களை கடைப்பிடிப்பவராகவும் இருந்தார். சைவ உணவைத் தவிரஅசைவ உணவை அறவே வெறுத்து 60 வருடங்களாக சபரிமலைக்கு புனிதயாத்திரை மேற்கொண்டவர். ஒரே மனைவியுடன் இறுதிவரை உண்மையான அன்புடன் வாழ்ந்த இவரை இறக்கும் வரை படங்களில் பார்த்த காட்சிகளை மனதில் வைத்துக் கொண்டு அவரை நிஜமான வில்லனாக சிலர் பார்த்தார்கள். அதுதான் மிகவும் கொடுமை. அந்த அளவிற்கு சினிமாவை நேசித்தார். தான் ஏற்றுக் கொண்ட வேடங்களில் ஈடுபாடு காட்டி நடித்தவர் எம்.என். நம்பியார்.

இவரது கலைப் பயணம் நாடகத் துறையிலிருந்து தொடங்கியது. அதுவும் ஒன்பதாம் வகுப்பு படிக்கும் போதே தொடங்கியது. நவாப் ராஜமணிக்கம், ஸ்ரீ மதுரை தேவி வினோத பாலகான சபாக்களிலும் 12 வருடங்களாக நாடக நடிகராக பணியாற்றியிருக்கிறார். 
 
சக்தி நாடகச் சபா தயாரித்த 'கவியின் கனவு' நாடகம் இவருக்கு நல்லப் பெயரை பெற்றுத் தந்தது. இவர் நடித்த 'பக்த ராமதாஸ்' நாடகம் படமாக்கப்பட்ட போது நாடகத்தில் இவர் ஏற்று நடித்த மந்திரி மாதண்ணா, வேடத்தை படத்திலும் ஏற்று நடித்து தமிழ் சினிமாவுக்கும் புதுமுக நடிகராக அறிமுகமானார்.
 
 'திகம்பரசாமியார்' படத்தில் 11 விதமான கெட்டப்பில் தோன்றி அசத்தினார். அந்த வகையில் சிவாஜ், கமலுக்கெல்லாம் முன்னோடி நம்பியார்.
 
 'கல்யாணி கஞ்சன்', 'நல்லதங்கை' போன்ற படங்களில் கதாநாயகனாக நடித்தார். 'கவிதா', 'வித்யாபதி', 'ராஜகுமாரி', 'மர்மயோகி', 'மோகினி', 'தூறல் நின்னுப்போச்சு' போன்ற படங்களில் காமெடி கலந்த வேடங்களில் நடித்திருக்கிறார். கொடூரமான வில்லனாக நடித்த இவர் 'ரகசிய போலீஸ 115', 'கண்ணே பாப்பா', 'சுபதினம்', 'பாசமலர்', 'மக்களைப் பெற்ற மகராசி', 'வேலைக்காரி' போன்ற படங்களில் நல்லவராகவும் நடித்திருக்கிறார்.
 
 
 
புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆருடன் 'ராஜகுமாரி' முதல் மதுரையை மீட்ட சுந்தரபாண்டியன்' வரை எம்.என்.நம்பியார் இணைந்து நடித்திருக்கிறார். இதில் 'மந்திரிகுமாரி', சர்வாதிகாரி', 'எங்க வீட்டு ப்பிள்ளை', 'குடியிருந்த கோயில்', 'நான் ஆணையிட்டால்', 'புதிய பூமி', 'ஆயிரத்தில் ஒருவன்', 'திருடாதே', 'வேட்டைக்காரன்', 'படகோட்டி', 'உலகம் சுற்றும் வாலிபன்' போன்ற படங்களில் வில்லனாக நடித்தார். 
 
 நடிகர் திலகம் சிவாஜி கணேசனுடன் 'தங்கப் பதுமை', 'ராஜபக்தி', 'அன்னை இல்லம்', 'தெய்வமகன்', 'லட்சுமி கல்யாணம்', 'நிச்சயதாம்பூலம்', 'குலமா குணமா', ' சிவந்தமண்', 'திரிசூலம் போன்ற படங்களிலும் வில்லனாக நடித்திருக்கிறார். 
 
தொடர்ந்து ஜெமினி கணேசன், ஜெய்சங்கர், ரவிச்சந்திரன், ரஜினிகாந்த், கமல்ஹாசன், விஜயகாந்த், சரத்குமார் ஆகியோரின் படங்களிலும் வில்லனாக நடித்திருக்கிறார். 'தேவதாஸ்', மிஸ்ஸியம்மா', போன்ற படங்களிலும் 'நெஞ்சம் மறப்பதில்லை', படத்தில் திகிலூட்டும் வகையில் வில்லத்தனம் காட்டியிருப்பார். எம்.என்.நம்பியார் தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி என்று பிறமொழிப் படங்கள் சிலவற்றிலும் நடித்திருக்கிறார். 'ஜங்கிள்' என்ற ஆங்கிலப் படத்திலும், 'தேவதா' என்ற இந்திப் படத்திலும் நடித்திருக்கிறார்.
 
 
'பக்த ராமதாஸ்' (1935) முதல் விஜயகாந்த் நடித்த 'சுதேசி' (2006) வரை 750 படங்களுக்குமேல் நடித்து முடித்திருக்கிறார். நீண்ட நெடுநாளைய கலைப் பயணமிருந்தும் இவரைப்பற்றி எந்த கிசு கிசுவும் பத்திரிகைகளில் வந்ததில்லை. 
 
இவர் தமிழக முதல்வர்கள் பேரறிஞர் அண்ணா திரைக்கதை, வசனம் எழுதிய 'வேலைக்காரி', 'நல்லவன் வாழ்வான்' படங்களிலும், கலைஞர் மு.கருணாநிதி வசனம் எழுதிய 'அபிமன்யூ', 'அரசிளங்குமாரி', 'ராஜகுமாரி', போன்ற படங்களிலும், புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆருடன் பலபடங்களிலும், வி.என்.ஜானகியுடன் 'வேலைக்காரி', மோகினி' ஆகியப் படங்களிலும் புரட்சித்தலைவி ஜெ.ஜெயலலிதாவுடன் பல படங்களிலும் பணியாற்றியிருக்கிறார். ஆந்திரா முதல்வர் என்.டி.ராமாராவுடனும் நடித்திருக்கிறார். 
 
தமிழக அரசிடமிருந்து 1967ஆம் ஆண்டு கலைமாமணி வருது, 1990ஆம் ஆண்டு எம்.ஜி.ஆர் விருது, 1992 ஆம் ஆண்டு ஜெயலலிதா விருது என்றபல விருதுகளைப் பெற்றிருக்கிறார். 
 
எம்.என்.நம்பியார் 5.3.1919 ஆம் ஆண்டு கேரளாவில் உள்ள கண்ணனூர் தாலுக்காவில் மஞ்சேரி என்ற சிற்றூரில் பிறந்தார். மஞ்சேரி நாராயணன் நம்பியார் என்ற தனது பெயரை சுருக்கி எம்.என்.நம்பியார் என்று வைத்துக் கொண்டார். 1946ஆம் ஆண்டு ருக்குமணி என்ற பெண்மணியை திருமணம் செய்துக் கொண்டார். இவருக்கு சுகுமாரன், மோகன் என்ற 2 மகன்களும், சிநேகலதா என்ற ஒரு பெண்ணும் உண்டு. 
 
திரைப்படத் துறையில் 71 ஆண்டுகள் தனது கலைப்பயணத்தைத் தொடர்ந்த எம்.என்.நம்பியார்,  19.11.2008 ஆம் ஆண்டு தனது கலைப்பயணத்தை முடித்துக்கொண்டு இறைவனடி சேர்ந்தார். நம்பியாரின் மூத்த மகன் சுகுமாறன் நம்பியார் 2012-ல் காலமானார். எம்.என்.நம்பியார் போன்ற தலைச்சிறந்தகலைஞர்கள் அதிலும் பன்முகம் கொண்ட கலைஞர்கள் தமிழ் சினிமாவிற்கு இனி கிடைப்பார்களா? கிடைக்க மாட்டார்கள் அதுதான் காலகாலத்துக்கும் நமக்குள் இருக்கப் போகிற ஏக்கமும் ஏமாற்றமும்!


- பெரு துளசிபழனிவேல்

எம்.ஜி.ஆரை திரையுலகின் முடிசூடா மன்னனாக்கிய படங்கள்!

தமிழ்த் திரையுலகில் துணை நடிகராக நுழைந்து 'சதிலீலாவதி' (1936) முதல் ஸ்ரீமுருகன், சுலோச்சனாவரை சுமார் 15 படங்களில் சிறிய வேடங்களில் தோன்றி வளர்ந்து வந்த எம்.ஜி.ஆர், 'ராஜகுமாரி' (1947) படத்தின் மூலம் கதாநாயகனாக உயர்ந்தார். பின்னர் புரட்சி நடிகரானார்... மக்கள் திலகமானார். அவர் புரட்சித் தலைவராக புகழ்பெற்று, கடைசியாக நடித்த படம் 'மதுரையை மீட்ட சுந்தரபாண்டியன் (1978)'. அந்தப் படம் வெளியாவதற்குள் தமிழகத்தின் முதல்வராகிவிட்டார் (1977). 
 
 
 
 
 115 படங்கள்வரை கதாநாயகனாக நடித்து தமிழ்த் திரையுலகில் வெற்றி நாயகனாக உலாவந்தவர் எம்.ஜி.ஆர். அவர் கதாநாயகனாக நடித்த பெரும்பாலான படங்களும் வெற்றிப் படங்களாகவும், வசூலை வாரிக்கொடுத்த படங்களாகவும் அமைந்தன. 100 நாட்கள் ஓடாத அவரது சில படங்களும் கூட தோல்விப் பட லிஸ்டில் சேர்ந்ததில்லை. 
 
 
 
 எம்.ஜி.ஆர். தமிழ்த் திரையுலகில் 42 ஆண்டுகள் வெற்றிகரமாக உலாவந்தாலும் அதற்கு இடைப்பட்ட காலங்களில் பலசோதனைகளையும் வேதனைகளையும் சந்தித்தார். அப்படிப்பட்ட சோதனைகளும், வேதனைகளும் எம்.ஜி.ஆரை நெருங்கி நிலைகுலைய வைத்த போது திரையுலகைச் சேர்ந்தவர்களில் சிலர் 'எம்.ஜி.ஆரின் திரையுலகப் பயணம் இத்தோடு முடிந்தது இனி அவரால் கதாநாயகனாக வெற்றி பெற முடியாது. மக்களும் அவரை ஏற்றுக் கொள்ள மாட்டார்கள்' என்று அவரது காதுபடவே கேலியும், கிண்டலுமாக பேசினார்கள். ஆனால் அதையெல்லாம் மீறி அவர் நடித்த சிலப டங்கள் அவருக்கு சோதனையான காலகட்டத்திலும் மக்களைக் கவரும் மாபெரும் வெற்றிப் படங்களாக அமைந்து அவரது திரையுலக வாழ்க்கைகே திருப்பு முனையாகத் திகழ்ந்தன. எம்.ஜி.ஆரை நம்பி படம் எடுக்கவந்தவர்களுக்கு பணத்தை அள்ளிக் கொடுத்தன. சோதனையான வேதனையான காலகட்டத்தில் அவரது சினிமா மார்க்கெட் வீழ்ந்து விடாமல் தூக்கி நிறுத்தி வெற்றி நாயகனாக அவரை வலம் வர வைத்த சில படங்களை இந்தக் கட்டுரையில் பார்ப்போம். 
 
 ராஜகுமாரி (1947) 
 
எம்.ஜி.ஆருக்கு சிறிய வேடங்களில் நடிப்பதற்கு மட்டும் வாய்ப்புகள் கிடைத்துக் கொண்டிருந்த காலம் அது. கதாநாயனாக நடிக்க வேண்டும் என்ற எம்.ஜி.ஆரின் கனவை, இலட்சியத்தை 1947ஆம் ஆண்டு வெளிவந்த ஜூபிடர் பிலிம்ஸ் நிறுவனம் தயாரித்த ‘ராஜகுமாரி' படம் தான் நிறைவேற்றிக் கொடுத்தது. மாலதி என்ற நடிகை ஜோடியாக நடித்தார். ஏ.எஸ்.ஏ.சாமி படத்தை இயக்கினார். இந்தப் படத்தில் உதவி வசனம் என்று மு.கருணாநிதி பெயர் போடப்பட்டது. துணை நடிகராக வலம் வந்துக் கொண்டிருந்த எம்.ஜி.ஆர். கதாநாயகனாக உயர்ந்தார். எம்.ஜி.ஆரின் திரையுலக வாழ்க்கைக்கு முதல் திருப்புமுனையை ஏற்படுத்தியது இந்த ‘ராஜகுமாரி' படம்தான். 
 
மருதநாட்டு இளவரசி (1950) 
 
 கோவிந்தன் கம்பெனி மூலம் தயாரிக்கபட்ட படம் ‘மருதநாட்டு இளவரசி'. ஏ.காசிலிங்கம் இயக்கிய இந்தப் படத்திற்கு வசனம் மு.கருணாநிதி என்று முதல் முதலில் டைட்டிலில் பெயர் வந்தது. கதாநாயகியாக எம்.ஜி.ஆருடன் முதன்முறையாக இணைந்து நடித்தார் வி.என். ஜானகி. 133 நாட்கள் ஓடி அதிக வசூலை கொடுத்ததால் இந்தப்படத்திற்கு பிறகு எம்.ஜி.அரை தொடர்ந்து கதாநாயகனாக நடிக்க வைத்து படங்களை தயாரிக்கலாம் என்ற நம்பிக்கையை தயாரிப்பாளர்களுக்கு கொடுத்தது ‘மருதநாட்டு இளவரசி' படம். எம்.ஜி.ஆரின் திரையுலக வாழ்க்கைக்கு மட்டுமல்ல, இல்வாழ்க்கையிலும் திருப்பத்தைத் தந்த படம் இது. 
 
மர்மயோகி (1951) 
 
 ஜூபிடர் பிலிம்ஸ் நிறுவனம் கே.ராம்நாத் இயக்கத்தில் தயாரித்த படம் ‘மர்மயோகி' 151 நாட்கள் ஓடி வெற்றி விழா கொண்டாடியது. இந்தப் படத்தில் எம்.ஜி.ஆருக்கு ஜோடியாக மாதுரி தேவி நடித்தார். வசனத்தை ஏ.எஸ்.ஏ. சாமி எழுதினார். எம்.ஜி.ஆரை அன்றிருந்த கதாநாயகர்களின் வரிசையில் முதல் வரிசையில் கொண்டுபொய் உட்கார வைத்த படம் ‘மர்மயோகி'. ஏழை எளியவர்களின் வாழ்க்கைப் பிரச்சனைகளுக்காக போராடுகின்ற நாயகன் எம்.ஜி.ஆர்தான் நல்ல என்ற நல்ல பெயரை மக்களிடம் பெறுகின்ற அளவிற்கு அமைந்தது ‘மர்மயோகி'. 
 
மலைக் கள்ளன் (1954) 
 
 ஸ்ரீராமுலு நாயுடு பக்ஷிராஜா பிலிம்ஸ் நிறுவனம் சார்பில் தயாரித்து இயக்கிய படம் ‘மலைக்கள்ளன்'. தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், இந்தி, சிங்களம் என்று பல்வேறு மொழிகளில் தயாரிக்கப்பட்டது. தமிழில் எம்.ஜி.ஆருடன் இணைந்து ஜோடியாக நடித்தவர் பி.பானுமதி. ஸ்ரீராமுலு நாயுடு நாமக்கல் கவிஞரின் நாவலை அடிப்படையாகக் கொண்டு இந்தப் படத்தை உருவாக்கியிருந்தார். 150 நாட்கள் ஓடி எல்லா மொழிகளிலும் வசூலை அள்ளிக் கொடுத்து முதல்வரிசையில் இருந்த எம்.ஜி.ஆரை திரையுலக பாக்ஸ் ஆபீஸில் வசூல் சக்கரவர்த்தியாக மாற்றிய படம் ‘மலைக் கள்ளன்'. 
 
நாடோடி மன்னன் (1958) 
 
எம்.ஜி.ஆர். இரட்டை வேடத்தில் நடித்து தனது எம்.ஜி.ஆர் பிக்சர்ஸ் நிறுவனத்தின் சார்பில் தயாரித்து இயக்கிய முதல் படம் ‘நாடோடி மன்னன்'. இவருக்கு ஜோடியாக பி.பானுமதி, சரோஜா தேவி நடித்திருந்தார்கள். கவியரசர் கண்ணதாசன் படத்திற்கான வசனத்தை எழுதியிருந்தார். படம் வெளியாவதற்கு முன் 'இந்தப் படம் ஓடினால் நான் மன்னன் இல்லை என்றால் நாடோடி' என்று பத்திரிகைகளுக்கு எம்.ஜி.ஆர். பேட்டிக் கொடுத்திருந்தார். இந்தப்படம் 200 நாட்களுக்கு மேல் ஓடி வசூலை வாரிக்குவித்து நல்ல தயாரிப்பாளராகவும், இயக்குநராகவும் மட்டுமில்லாமல் இரட்டை வேடத்தை ஏற்று சிறப்பாக நடிக்க கூடிய நடிகராகவும் மக்கள் ஏற்றுக் கொண்டாடிய படம். மக்கள் மனதில் இன்று வரை மன்னனாக எம்.ஜி.ஆர் அமர்ந்துக் கொண்டிருப்பதற்கு முக்கிய காரணமாக அமைந்த படம் ‘நாடோடி மன்னன்'. 
 
திருடாதே (1961) 
 
 ஏ.எல்.எஸ்.புரொடக்ஷன்ஸ் நிறுவனம் சார்பில் ஏ.எல். சீனிவாசன் ப.நீலகண்டன் இயக்கத்தில் தயாரித்த படம் ‘திருடாதே'. வசனத்தை கவியரசர் கண்ணதாசன் எழுதியிருந்தார். எம்.ஜி.ஆருக்கு ஜோடியாக சரோஜாதேவி நடித்து முதல் முதலில் ‘திருடாதே' படம் எடுக்கப்பட்டாலும், எம்.ஜி.ஆருக்கு கால் முறிவு ஏற்பட்டு தாமதமானதால் படம் தாமதமாக வந்தது. ‘நாடோடி மன்னன்' சீக்கிரமாக வெளிவந்துவிட்டது. அதுவரையில் சரித்திர படங்களில் நடித்துக் கொண்டிருந்த எம்.ஜி.ஆரால் சமூகப் படங்களிலும் சிறப்பாக நடிக்க முடியும் என்பதை நிரூபித்த படம் ‘திருடாதே'. 161 நாள் ஓடி வெற்றி விழா கொண்டாடியதால் தொடர்ந்து பல சமூகப் படங்களில் எம்.ஜி.ஆர் நடிப்பதற்கான திருப்பு முனையை ஏற்படுத்தித் தந்த படம் ‘திருடாதே'. 
 
தாய் சொல்லைத் தட்டாதே (1961) 
 
 ‘திருடாதே' படத்தை எடுத்து முடிக்க சந்தர்ப்ப சூழ்நிலையால் பல மாதங்கள் ஆனதால் எம்.ஜி.ஆரை வைத்துப் படம் எடுத்தால் வெளிவருவதற்கு பல மாதங்கள் ஆகும் என்ற ஒரு அவப்பெயர் எம்.ஜி.ர் மீது சுமத்தப்பட்டது. அந்தப் அவப் பெயரை நீக்கிய படம் ‘தாய் சொல்லைத் தட்டாதே' சாண்டோ சின்னப்ப வேரின் தேவர் பிலிம்ஸ் நிறுவனத்தால் குறுகிய காலத்தில் எடுத்து முடிக்கப்பட்டு விரைவாக வெளிவந்த படம். ஆரூர்தாஸ் வசனம் எழுதியிருந்தார். எம்.ஏ.திருமுகம் இயக்கிய இந்தப் படத்தில் சரோஜா தேவி ஜோடியாக நடித்தார். 133 நாட்கள் ஓடி வசூலை வாரித் தந்தது. 
 
எங்க வீட்டுப் பிள்ளை (1965) 
 
எம்.ஜி.ஆர் ஒரே மாதிரியான கதைகள் கொண்ட படங்களில் நடிக்கிறார் என்ற குற்றச்சாட்டை நீக்கிய படம் ‘எங்க வீட்டுப்பிள்ளை'. 236 நாட்கள் ஓடி மாபெரும் வெற்றிப் படமாக விழா கொண்டாடிய படம். 1965, ஜனவரியில் வெளியானது. பி.நாகிரெட்டியாரின் விஜயா வாஹினி நிறுவனம் தயாரிப்பில், சாணக்கியா இயக்கத்தில் வெளி வந்து தமிழ்த்திரையுலகிற்கே திருப்புமுனையை தந்தபடம். இதில் சரோஜாதேவியும், புதுமுக நடிகை ரத்னாவும் ஜோடியாக நடித்தார்கள். வசனத்தை சக்தி கிருஷ்ணாசாமி எழுதியிருந்தார். 13 தியேட்டர்களில் 100 நாட்கள், 7 அரங்குகளில் 175 நாட்கள், 3 அரங்குகளில் 236 நாட்கள் ஓடிய படம் இது. 
 
ஆயிரத்தில் ஒருவன் (1965) 
 
 எம்ஜிஆர் கிட்டத்தட்ட சரித்திரப் படங்களில் நடிப்பதை நிறுத்தியிருந்த நேரத்தில், ஒப்புக் கொண்ட சரித்திரப் படம் ஆயிரத்தில் ஒருவன். சிவாஜியின் ஆஸ்தான இயக்குநராக இருந்த பிஆர் பந்துலு, கர்ணன் படத்தால் ஏற்பட்ட நஷ்டத்தைத் தொடர்ந்து எம்ஜிஆரிடம் கால்ஷீட் கேட்டு வந்தார். மறுப்பேதும் சொல்லாமல் எம்ஜிஆரும் நடித்துக் கொடுத்தார். எங்க வீட்டுப் பிள்ளை என்ற ப்ளாக்பஸ்டர் வெளியான அதே 1965-ம் ஆண்டு, ஜூலையில் ஆயிரத்தில் ஒருவன் படம் வெளியாகி மாபெரும் வெற்றியைப் பெற்றது. இப்படி ஒரு வெற்றி வேறு எந்த நடிகருக்கும் அமையாது எனும் அளவுக்கு பிரமாண்ட வெற்றிப் பெற்ற படம் ஆயிரத்தில் ஒருவன். இனி எம்ஜிஆரை மிஞ்ச ஒரு நடிகர் திரையுலகில் இல்லை என்று அழுத்தமாக உணர வைத்த படம் ஆயிரத்தில் ஒருவன். முதல் வெளியீட்டில் வெள்ளி விழா கண்ட இந்தப் படம், 50 ஆண்டுகளுக்குப் பிறகு 2014-ல் மீண்டும் வெளியிடப்பட்டபோது, 190 நாட்கள் ஓடி கோடிகளை அள்ளி, எம்ஜிஆர் என்ற ஆளுமையின் பெருமையை உணர வைத்தது. 
 
காவல்காரன் (1967) 
 
ஆர்.எம்.வீரப்பன் சத்யா மூவிஸ் நிறுவனம் சார்பில் தயாரித்த படம் ‘காவல்காரன்'. எம்.ஜி.ஆருக்கு ஜோடியாக செல்லி ஜெயலலிதா நடித்திருந்தார். ப.நீலகண்டன் படத்தை இயக்கியிருந்தார். வித்வான் வே.லட்சுமணன் வசனத்தை எழுதியிருந்தார். துப்பாக்கியால் சுடப்பட்டு மருத்துவமனையிலிருந்து வந்த பிறகு எம்.ஜி.ஆர். தனது சொந்தக் குரலில் பேசி நடித்தப் படம் ‘காவல்காரன்'. குண்டடிப்பட்டு பாதிக்கப்பட்டு பேசிய எம்.ஜி.ஆரின் சொந்தக் குரலை மக்கள் ஏற்றுக் கொள்வார்களா என்று அனைவரும் சந்தேகத்தை கிளப்பிய போது, ஏற்றுக் கொள்வோம் என்று மக்கள் ‘காவல்காரன்' படத்தையே மாபெரும் வெற்றிப் படமாக்கி 160 நாள் வெற்றிகரமாக ஓடவைத்து வசூலிலும் சாதயைப் படைக்க வைத்தார்கள். எம்ஜிஆரின் திரையுலக வாழ்க்கையே காவல்காரனுக்கு முன், காவல்காரனுக்குப் பின் என்றாகிவிட்டது. 
 
குடியிருந்த கோயில் (1968) 
 
ஜி.என். வேலுமணியின் சரவணா பிலிம்ஸ் நிறுவனம் சார்பில் தயாரித்த படம் ‘குடியிருந்த கோயில்.' இதிலும் மாறுபட்ட இரு வேடங்களில் எம்.ஜி.ஆர். சிறப்பாக நடித்திருந்தார். இவருக்கு ஜோடியாக செல்வி ஜெயலலிதா, ராஜஸ்ரீ நடித்திருந்தனர். கே.சங்கர் படத்தை இயக்கியிருந்தார். வசனம் கே.சொர்ணம், சிறந்த நடிருக்கான விருதை தமிழ்நாடு அரசிடமிருந்து முதன் முதலில் எம்.ஜி.ஆருக்கு பெற்றுத் தந்தபடம். 146 நாட்கள் ஓடி பெரிய வசூலைத் தந்தது. 
 
ஒளிவிளக்கு (1968) 
 
எஸ்.எஸ்.வாசனின் ஜெமினி பிக்சர்ஸ் நிறுவனம் எம்.ஜி.ஆரை மாறுபட்ட கதாபாத்திரத்தில் துனிச்சலாக நடிக்க வைத்து எடுத்த படம் ‘ஒளிவிளக்கு'. இது எம்.ஜி.ஆருக்கு 100வது படம். படத்தை சாணக்யா இயக்கியிருந்தார். கே.சொர்ணம் வசனம் எழுதியிருந்தார். செல்வி ஜெயலலிதா ஜோடியாக நடித்திருந்தார். இதுவரை நடித்திராத முரட்டுத்தனம், திருட்டுத்தனம் கொண்ட குடிகாரன் கதாபாத்திரத்தில் எம்.ஜி.ஆர் நடித்திருந்தார். இப்படிப்பட்ட படங்களில் எம்.ஜி.ஆர் நடிப்பதை மக்கள் ஏற்றுக் கொள்வார்களா? என்ற சந்தேகத்தைப் போக்கி 176 நாட்கள் ஓடி வெள்ளி விழா கொண்டாடியப் படம் ‘ஒளி விளக்கு'. 
 
அடிமைப் பெண் (1969) 
 
எம்.ஜி.ஆர் வித்தியாசமான கதாபாத்திரத்தில் கதாநாயகனாக நடித்து, தனது எம்.ஜி.ஆர். பிக்சர்ஸ் நிறுவனத்தின் சார்பில் தயாரித்து, டைரக்டர் கே.சங்கர் இயக்கத்தில் உருவாக்கிய படம் ‘அடிமைப் பெண்'. செல்வி ஜெயலலிதா இரட்டை வேடத்தில் நடித்திருந்தார். சொந்தக் குரலில் ‘அம்மா என்ற அன்பு....' என்று ஒரு பாடலையும் பாடியிருந்தார். வசனத்தை கே.சொர்ணம் எழுதியிருந்தார். இந்தப் படத்தின் கதை வரலாற்று கதையுமல்லாமல், சமூக கதையுமல்லாமல், மந்திர ஜாலங்களைக் கொண்ட கதையுமில்லாமல், ஆனால் எல்லாம் கலந்த கதையாக இருந்தது. இப்படி ஒரு கதையை வெற்றிப் பெற வைப்பது அவ்வளவு சுலபமான வேலையில்லை. அப்படிப்பட்ட படத்தை மக்கள் ஏற்றுக் கொண்டு 176 நாட்கள் ஓட வைத்து வெற்றி விழா கொண்டாட வைத்தார்கள். 
 
மாட்டுக்கார வேலன் (1970) 
 
 எம்.ஜி.ஆர் இரட்டை வேடத்தில் நடித்த படம். செல்லி ஜெயலலிதா, லட்சுமி ஜோடியாக நடித்திருந்தார்கள். ப.நீலகண்டன் இயக்கத்தில் ஜெயந்தி பிலிம்ஸ் நிறுவனம் படத்தைத் தயாரித்தது. ஏ.எல். நாராயணன் வசனம் எழுதியிருந்தார். முதலில் இந்தப் படத்தை டி.ஆர். ராமண்ணா இயக்குவதாக இருந்தது பிறகு அவருக்கு அதிக வேலைகள் இருந்ததால், ப.நீலகண்டன் படத்தை இயக்கினார். இந்த டைரக்டர் படத்தை இயக்குவார் என்று சொல்லிவிட்டு வேறொரு டைரக்டரை வைத்துப் படத்தை எடுக்கும் போது படம் சரியாக வருமா, வெற்றி பெறுமா? என்று விநியோகஸ்தர்கள், பத்திரிகையாளர்கள் சந்தேகத்தை எழுப்பியதால் படத்திற்கு சிக்கல் வந்தது. ஆனால் எல்லா சிக்கலையும் மீறி இந்தப் படத்தை சிறப்பாக தயாரித்தார் தயாரிப்பாளர் கனகசபை. மக்களும் ஏற்றுக் கொண்டு 177 நாட்கள் ஒட வைத்தார்கள். வசூலிலும் சாதனைப் படைத்தது. 
 
ரிக்ஷாக்காரன் (1971)
 
 எம்.ஜி.ஆர். ரிக்ஷா தொழிலாளியாக நடித்த படம் ‘ரிக்ஷாக்காரன்' ஆர். எம்.வீரப்பனின் சத்யா மூவிஸ் நிறுவனம் படத்தை தயாரித்திருந்தது. எம்.கிருஷ்ணன் படத்தை இயக்கியிருந்தார். ஆர்.கே.சண்முகம் வசனத்தை எழுதியிருந்தார். புதுமுக நடிகையான மஞ்சுளா எம்.ஜி.ஆருக்கு ஜோடியாக கதாநாயகியாக நடித்து அறிமுகமானார். இந்தப் படம் எடுக்கும்போது சிலர் ஒடாது, வெற்றி பெறாது என்று ஆரூடம் சொன்னார்கள். ஆனால் படம் வெளிவந்து 167 நாட்கள் ஓடி வசூலில் மாபெரும் சாதனைப் புரிந்தது. ‘ரிக்ஷாக்காரன்' எம்.ஜி.ஆருக்கு சிறந்த நடிகருக்கான பாரத் விருதினைக் கொடுத்து கௌரவித்தது இந்திய அரசு. ரிக்ஷாவில் இருந்துக் கொண்டே எம்.ஜி.ஆர் சிலம்பு சண்டைப் பேட்டது அனைவராலும் பேசப்பட்டது, பாராட்டப்பட்டது. 
 
 
உலகம் சுற்றும் வாலிபன் (1973) 
 
எம்.ஜி.ஆர். இரட்டை வேடமேற்று நடித்து தனது எம்.ஜி.ஆர். பிக்சர்ஸ் சார்பில் தயாரித்து இயக்கிய படம். ‘உலகம் சுற்றும் வாலிபன்'. லதா, மஞ்சுளா, சந்திரகலா, தாய்லாந்து நடிகை ரூங்ரேட்டா கதாநாயகிகளாக நடித்திருந்தார்கள். கே.சொர்ணம் வசனம் எழுதினார். இந்தப்படம் வெளிவருவதற்கு பல தடைகள் ஏற்பட்டன. அதை எல்லாம் முறியடித்து வெளிவந்து மாபெரும் வெற்றிப் பெற்றது. எம்.ஜி.ஆர் நடித்த படங்களில் அதிக வசூலை அள்ளிக் குவித்து சாதனைப் புரிந்த படம் ‘உலகம் சுற்றும் வாலிபன்' அன்றைய காலகட்டத்தில் 3 கோடிக்கு ‘இன்றைய கால கட்டத்தில் (300 கோடி) மேல் வசூலை தந்து அரசாங்கத்திற்கு 1.25 கோடிக்கு வரியைக் கட்ட வைத்த முதல் தென்னகப் படம் ‘உலகம் சுற்றும் வாலிபன்'.

-பெரு துளசிபழனிவேல்