Tuesday 14 April 2015

நடிகர், இயக்குனர்களின் சொந்தப்பட முடிவு ஏன்?

நடிகர்களும், இயக்குனர்களும் சொந்தப்பட தயாரிப்பில் ஆர்வம் காட்டுகின்றனர். கடந்த சில வருடங்களில் தயாரிப்பாளர்களான இயக்குனர்களின் எண்ணிக்கை இரண்டு டஜனை தொடுகிறது.
 


படம் தயாரிப்பது தற்கொலைக்கு சமமாக மாறிவரும் சூழலில் நடிகர்கள், இயக்குனர்கள் மட்டும் படத்தயாரிப்பில் ஆர்வம் காட்டுவது ஏன்?
 
பாலா தனது பி ஸ்டுடியோஸ் சார்பில் பிசாசு படத்தை தயாரித்தார். மிஷ்கின் படங்களுக்கு மினிமம் ஐந்து கோடி வியாபாரமிருக்கிறது. புதுமுகம் நடித்திருந்தாலும். பிசாசு மூன்றரை கோடியில் தயாரானது. அதனை ஐந்தரை கோடிக்கு அவர் ஸ்ரீ தேனாண்டாள் ஃபிலிம்ஸுக்கு தந்தார். உட்கார்ந்த இடத்தில் இரண்டு கோடி லாபம். பாலா என்ற பெயருக்கு இருக்கும் விளம்பர வெளிச்சத்தால் அவரால் இரண்டு கோடி சம்பாதிக்க முடிந்தது. 
 
சுசீந்திரன், ஆதலால் காதல் செய்வீர் படத்தை பர்ஸ்ட் காப்பி அடிப்படையில் தயாரித்தார். அதாவது, ஒரு கதையைச் சொல்லி, அதனை படமாக்க ஐந்து கோடியோ இல்லை பத்து கோடியோ ஆகும். அதற்குள் படத்தை முடித்துவிடுவேன் என்று ஒப்பந்தம் போட்டு, தயாரிப்பாளரிடமிருந்து பணத்தை வாங்கி படமெடுத்து முதல் காப்பியை தயாரிப்பாளரிடம் தருவது. ஒப்பந்தத்தைத் தாண்டி பட்ஜெட் எகிறினால் அது தயாரிப்பாளரின் கவலையில்லை, பர்ஸ்ட் காப்பி அடிப்படையில் படத்தை எடுத்துத்தர முன்வந்தவர்தான் அப்பணத்துக்கு பொறுப்பு.
 
சுசீந்திரன், ஆதலால் காதல் செய்வீர் படத்தை பர்ஸ்ட் காப்பி அடிப்படையில் எடுத்துத் தருவதாக பெரிய தொகை ஒன்றை வாங்கி, மிகக்குறைந்த பட்ஜெட்டில் படத்தை முடித்தார். அந்தவகையில் அவருக்கு மூன்று கோடிக்கு மேல் லாபம் பார்த்ததாக நம்பத்தகுந்த வட்டாரங்கள் கூறுகின்றன. 
 
இப்போது பல இயக்குனர்கள் பர்ஸ்ட் காப்பி அடிப்படையில்தான் படம் இயக்குகின்றனர். யுடிவு தொடர் தோல்விகளை சந்தித்தபின், படத்தை இயக்குகிறவர்களை தயாரிப்பில் துணைக்கழைத்துக் கொள்கிறது. ஆரம்பம் படத்தில் விஷ்ணுவர்தன், அஞ்சானில் லிங்குசாமி, புறம்போக்கில் ஜனநாதன். இயக்குனரையும் ஒரு தயாரிப்பாளராக சேர்த்துக் கொள்ளும்போது யுடிவியின் ரிஸ்க் குறைகிறது.
 
குறித்த நேரத்தில் படம் வெளியாகாத கோபத்தில் விஷால் தயாரிப்பாளரானார். அவர் தயாரித்த இரு படங்களும் குறித்த நேரத்தில் வெளியாயின. விஷாலே ஒரு தயாரிப்பாளர் எனும் போது, அவரை வைத்து படம் தயாரிக்க படநிறுவனங்கள் ஆர்வம் காட்டுகின்றன.
 
சூர்யா, கார்த்தி படங்கள் பல கோடிகள் லாபம் சம்பாதிப்பதால் அவர்களே படத்தை தயாரிக்க ஆரம்பித்தனர். அதனால்..
 
சம்பளத்துடன், ஒரு தயாரிப்பாளருக்கு கிடைக்கும் லாபமும் அவர்களை சென்றடைகிறது.
 
சிவ கார்த்திகேயனும் இனி சொந்தப் படங்கள் தயாரிப்பது என்ற முடிவை எடுத்திருக்கிறார். அவர் ஒரு படம் தயாரிப்பார். அதனை யார் அதிக விலைக்கு கேட்கிறார்களோ, அவர்கள் படத்தை வெளியிட்டுக் கொள்ளலாம்.
 
ஏன் இப்படியொரு முடிவு?
 
சிவ கார்த்திகேயன் நடிப்பில் கடைசியாக வெளியான படம் காக்கி சட்டை. கதையாகப் பார்த்தால் சுமாரான படம். ஆனால் வசூல்? 14 கோடியில் தயாரான படம் 50 கோடிக்கு மேல் வசூலித்ததாக சிவ கார்த்திகேயனே ட்விட்டரில் கூறினார். 50 கோடி வசூலித்த படத்துக்கு - தனுஷ் தயாரிப்பாளர் என்பதால் - ஐந்து கோடி அளவுக்கே சம்பளம் வாங்கியிருப்பார் சிவ கார்த்திகேயன். வெளி தயாரிப்பாளர் என்றால், எட்டு கோடிவரை கிடைக்கும். 
 
சிவ கார்த்திகேயன் இதே காக்கி சட்டையை அவரது சம்பளம் போக பத்து கோடியில் தயாரித்திருந்தால், குறைந்தபட்சம் 30 கோடிகளுக்கு விற்றிருக்கலாம். லாபம் 20 கோடிகள். 
 
சிவ கார்த்திகேயன் படம் என்றால் பத்து கோடி சேட்டிலைட் உரிமையே போகிறது. திரையரங்கு வியாபாரம் வெளிநாட்டு உரிமை என்று முப்பது கோடி உறுதி. நடிகர்கள் தயாரிப்பாளராகும் போது நடிகராக சம்பாதிப்பதைவிட மூன்று மடங்கு ஒரே படத்தில் சம்பாதிக்கலாம்.
 
ஒன்றுக்கு மேற்பட்ட தொழில் இருந்தால் அதுவே ஒரு பலம். சன் பிக்சர்ஸ் படம் தயாரித்தால் சன் தொலைக்காட்சியில் புரமோட் செய்யலாம். இதுவே வேறு ஒருவர் என்றால் விளம்பரத்துக்கே கோடிகள் அழவேண்டும். நடிகரோ, இயக்குனரோ தயாரிப்பில் இறங்கும் போது தயாரிப்பின் ரிஸ்க் குறைகிறது. அதனை இன்றைய தலைமுறை அறுவடை செய்ய முயல்வதன் விளைவே நடிகர்கள், இயக்குனர்களின் தயாரிப்பு அவதாரம்.
 

Saturday 4 April 2015

ஜானி - ரஜினியின் இன்னொரு முகம்

"தங்கையை நம்பி ஒப்படைக்கலாம் போன்ற முகம் " என்று ரஜினியின் முக வசீகரம் பற்றி ஒருமுறை எழுதினார் எழுத்தாளர் சுஜாதா. பாலசந்தரால் அறிமுகம் செய்யபட்ட ரஜினி என்ற நடிகரின் திறமையான முகங்கள் வெளிப்பட்டது இயக்குநர் மகேந்திரன் அவர்களின் இலக்கிய தரமான படங்களில்தான்.

முள்ளும் மலரும், கை கொடுக்கும் கை குறிப்பாய் ....ஜானி .கதாநாயகன் இரட்டை வேடங்கள் ஏற்கும் படங்களில் தனித்துவம் மிக்க, எனக்கும், எல்லோருக்கும் எப்பவும் பிடித்த ஜானி படம் பற்றிய ஒரு பார்வை.

கமர்ஷியல் சினிமாவுக்கும், அழகியல் அம்சம் உள்ள கலை படத்திற்க்கும் இடையே பயணிக்கும் மகேந்திரன் அவர்களின் திரைக்கதை, ரஜினி - ஸ்ரீதேவி பாந்தமான நடிப்பு, கதையோடு உணர்வு பூர்வமாக கலந்து இருக்கும் இசைஞானி அவர்களின் இசை.....இவை எல்லாம் சேர்ந்து தமிழ் சினிமாவில் மறக்க முடியாத படமாக உருவாக்கபட்டு இருக்கிறது ஜானி.

ஜானி , வித்யாசாகர் என இரு வேடங்களில் ரஜினி. அர்ச்சனாவாக ஸ்ரீதேவி. பாமாவாக தீபா. இந்த நான்கு கதாபாத்திரங்களை வைத்து பின்னபட்ட கதை.

இரண்டு ரஜினிகளுக்கு இடையே உள்ள வித்தியாசம் மீசை மற்றும் மூக்கு கண்ணாடி. ஆனால், பார்வையிலையே பெரும் வித்தியாசம் காட்டுகிறார் ரஜினி. முகபாவனைகள் மூலம் ஒரு தேர்ந்த நடிகராக பரிணாமிதது இருக்கிறார்.


ஜானி : தனது தந்தையின் கடன்களை தீர்ப்பதர்க்கு, மன உறுததலொடு திருட்டு தொழிலில் ஈடுபடுகிறார்.பாடகி அர்ச்சனாவின் குரலில் மனத்துக்கு அமைதியை தேடுகிறார்.

வித்யாசாகர் : முடிவெட்டும் தொழிலாளியாக இருப்பவர். தனது தோட்டத்தில் இருக்கும் பூக்களை கூட எண்ணி வைக்கும் சிக்கனம். அதே சமயம், " காசு விஷயத்துல கருமியா இருக்கறது தப்பில்ல. ஆனா, பிரத்தியாருக்கு அன்பு செலுத்துரத்தில் யாரும் கருமியா இருக்கக்கூடாது." என்று கொள்கையொடு இருப்பவர்.

அர்ச்சனா : புகழும்,பணமும் பெற்ற ஒரு பாடகி. தனிமையில் வாடும், அன்புக்கு எங்கும் பெண். புடவையில், பாந்தமும், அடக்கமும், எளிமையும் உள்ள இந்த கதாபாத்திரத்தில் ஸ்ரீதேவி கச்சிததமாய் பொருந்துவது கதைக்கு பெரிய ப்ளஸ்.

பாமா : எதிலும் திருப்தி அடையாத ஏழை பெண்ணாக தீபா. கிழிசல் உடையில் கவர்ச்சியாய் தோன்றும் வேடம் இவருக்கும் opt.

தான் செய்யும் தவறுகள் காரணமாக தன்னை போலவே உருவ ஒற்றுமை உள்ள அப்பாவி வித்யாசாகரை போலீஸ் தொல்லை செய்வதை அறிந்து, நேரில் வந்து வித்யாசாகரை சந்தித்து தன்னை அறிமுகம் செய்து கொண்டு, தனது கைரேகையை அவரிடம் ஒப்படைத்து இன்னும் பத்து நாளில் எல்லா பிரச்சினைகளையும் தீர்ப்பதாக ஜானி சொல்லும் காட்சி படத்தின் ஹை லைட்.

"ஒரு இனிய மனது இசையை அழைத்து செல்லும் " பாடலை கேட்டு ஒரு ரசிகராக அர்ச்சனாவிடம் அறிமுகம் ஆகும் ஜானி, படிப்படியாக அவரிடம் நட்பு கொள்கிறார். அர்ச்சனா சிததார் இசைக்கும் போதும், தனது பிறந்த நாளின் போதும் தாயின் நினைவுகளை பகிர்கிறார்.ஜானிக்காக அர்ச்சனா பாடுவதாக வரும் "என் வானிலே ஒரே வெண்ணிலா " கண்ணதாசன் வரிகளில், ராஜாவின் இசையில் உலக தரம். இந்த இரண்டு பாடல்களின் தேன் குரல் வண்ணம் ஜென்சி.


நட்பு காதல் ஆகிறது. குற்ற உணர்வு காரணமாக அர்ச்சனாவின் காதலை ஜானி ஏற்க மறுப்பதும், அதற்கு காரணமாக தான் பல பேர் முன்பு மேடையில் பாடும் பெண் என்பதால்தான் என அர்ச்சனா நினைப்பதும், பின் இருவரும் சமாதானம் அடைவதும் கவிதைகள்.

இந்த காதல் கவிதை என்றால், வித்யாசாகர் - பாமா இடையே ஆன காட்சிகள் சிறுகதை. அனாதையான பாமாவை தனது வீட்டு வேலைக்காரியாக்கி , பின் தனது மனைவி ஆக்க விரும்பும் வித்யாசாகரிடம் "நாளைக்கு நமக்கு பிறக்கும் குழந்தைக தங்கள் அப்பா ஒரு பார்பார் என சொல்லிக்கொள்ள எவ்வளவு கஷ்டப்படும்" என்று பாமா கூறும் காட்சி யதார்த்தம். இதற்கு முன்பு அவர்கள் இருவரும் ஒரு கடைக்கு போகும் காட்சியில் ஒரு பணக்கார இளைஞனை அறிமுக படுத்துகிறார் இயக்குநர் மகேந்திரன். அவன் கையில் இருக்கும் புத்தகத்தின் பெயர் future shock.

நாம் எதிர்பார்த்தபடி, பாமா அந்த பணக்கார இளைஞனுடன் ஓட முயலும் போது, வித்யாசாகர் அவர்களை சுட்டு கொன்று விடுகிறார். ஒரே உருவம் கொண்ட ஜானி, வித்யாசாகர் இருவரையும் போலீஸ் தூரத்துகிறது.

சந்தர்ப்ப சூழல் காரணமாக ஒரு ஆதிவாசி கூட்டத்தில் பதுங்குகிறார் ஜானி. "ஆசைய காத்துல தூது விட்டு " பாடலும், அதில் வரும் நடனமும், இசையும்,எஸ். பி ஷைலஜாவின் ஏக்கம் வழியும் குரலும், நாமே ஒரு காட்டுக்குள் இருப்பதாக ஒரு உணர்வை தருகிறது.

அதைப்போல, ஜானி என நினைத்து வித்யாசாகருக்கு அடைக்கலம் தருகிறார் அர்ச்சனா. பாமாவை போலவே எல்லா பெண்களையும் எண்ணும் வித்யாசாகர் அங்கேயே நிரந்தரமாக தங்கி, அர்ச்சனாவின் அழகையும், பணத்தையும் அனுபவிக்க முடிவு செய்கிறார். பின், கொஞ்சம் கொஞ்சமாக மனம் திருந்துகிறார். அர்ச்சனாவின் கண்ணீரும், ஜானி மீது அவர் வைத்து இருக்கும் பரிசுத்தமான அன்பும் எப்படி வித்யாசாகரின் மிருக தன்மையை அழிக்கின்றது என்பதே மீதி கதை.

"நான் உங்க ஜானி இல்லை " என்று வெளியேறும் காட்சியில் அர்ச்சனாவிடம் வித்யாசாகர் பேசும் வசனத்தில் தனது அழுத்தமான முத்திரையை பதிக்கிறார் மகேந்திரன்."நான் பார்பார் by profession , murderer by accident , இன்னைக்கு மனுஷன் உங்களாலே, thank you very much"..

இறுதி காட்சியில், வித்யாசாகர் சொன்னபடி, கொட்டும் மழையில். தனியாக கச்சேரி செய்யும் அர்ச்சனாவை தேடி வருகிறார் ஜானி. "காற்றில் எந்தன் கீதம் காணாத ஒன்றை தேடுதே .." .என்று கதையின் சுகமான முடிவை ஜானகியின் இனிய குரலில், நம் மனதுக்குள் மழையாய் பொழிகிறார் இசை என்கிற இளையராஜா .

ஆறில் இருந்து அறுபது வரை, ஜானி போன்ற அன்றைய படங்களில் வெளிப்பட்ட ரஜினி என்ற நடிகரின் தேர்ந்த, வெகு யதார்த்தமான முகம் பின்னர் வந்த படங்களில் ஏனோ அதிகம் தெரியவில்லை. அதுதான் நம் தமிழ் சினிமா.இன்றைக்கு சினிமாவில், ஜப்பான் உட்பட உலகம் எங்கும் ரசிகர்களை கொண்டவராக, மற்ற நடிகர்கள் யாரும் நெருங்க கூட முடியாத முதல் இடத்தில் இருக்கிறார் ரஜினிகாந்த் .

மலையாள திரை உலகில், சர்வதேச தரத்திலான அமரம்,பரதம், வான்ப்பிரஸ்தம் போன்ற படங்களில், அந்தந்த கதாபாத்திரங்களில் எந்த அளவுக்கு உணர்ச்சிகளை வெளிப்படுத்த வேண்டுமோ, அந்த அளவுக்கு எதார்த்தமான நடிப்பினை வழங்கி,வாழ்ந்து இருப்பார்கள் மம்முட்டியும், மோகன்லாலும்.

அவர்களுக்கு இணையாக தமிழில் எதார்த்த நடிப்பை வெளிப்படுத்த கூடிய ஒரே நடிகர் ரஜினி அவர்கள்தான். ஆறிலிருந்து அறுபது வரை, முள்ளும் மலரும், கை கொடுக்கும் கை, மற்றும் ஜானி போன்ற படங்கள் அதற்க்கு சரியான உதாரணங்கள்.

சூப்பர் ஸ்டார் என்ற வெகு ஜன ஒப்பனை முகத்துக்கு பின் ஒளிந்து கொண்டு இருக்கும் ஒரு சிறந்த யதார்த்த நடிகரின் முகம் தெரிகிறதா உங்களுக்கு?

அது,, நமது கரவொலிகளில், விசில் சத்தங்களில், கட் அவுட்களின் நிழல்களில், காணாமலே போய்விட்ட முகம்...ரஜினி அவர்களின் இன்னொரு முகம்.

இயக்குனர் சிகரமும் காவிய கவிஞரும்

இயக்குனர் சிகரம் பாலசந்தர் பாடல்கள் எடுப்பதில் வல்லவர். அவரது படங்கள் மட்டுமின்றி பாடல்களும் புதுமை நிறைந்ததாக இருக்கும். வறுமையின் நிறம் சிவப்பு படத்தில் இடம்பெறும், சிப்பி இருக்குது முத்து இருக்குது பாடல் ஒன்றே போதும், அவரது திறமையை அறிய.


 
தூர்தர்ஷனில் காவிய கவிஞர் வாலி தனது மலரும் நினைவுகளை பதிவு செய்த நிகழ்ச்சியில் இயக்குனர் சிகரமும் கலந்து கொண்டு பேசினார். நிகழ்ச்சியை நடத்தியவர் நெல்லை ஜெயந்தா. அந்த அருமையான நிகழ்ச்சி நூலாகவும் வெளிவந்துள்ளது. 
 
மதுரையில் பறந்த மீன் கொடியை உன் விழிகளில் கண்டேனே என்ற வாலியின் அற்புதமான பாடல் குறித்தும், அந்தப் பாடல் தனக்கு கற்றுத் தந்த பாடம் குறித்தும் இயக்குனர் சிகரம் அதில் பகிர்ந்து கொண்டுள்ளார்.
 
"மதுரையில் பறந்த மீன்கொடியை உன் விழிகளில் கண்டேனே ரொம்ப அற்புதமான பாட்டு. எல்லா ஊர்ப் பெயர்களும் அதில் வரும். ஆனால் அதில ஒரு டிராஜடி ஆகிப்போச்சு. நான் ரொம்ப ரசித்த பாட்டு, ஜெமினி பிரமாதமாக நடிச்சிருப்பார். அந்தப் பாடல் இடைவேளையில் வரும். ஏற்கனவே ஒன்றரை மணிநேரம் தம்மடிக்காம தம்பிடிச்சு உட்கார்ந்திருக்காங்க. அப்ப இந்தப் பாட்டு வந்தவுடன் பாதிபேர் எழுந்து வெளியே போயிட்டாங்க. அப்போ எல்லாம் உள்ளுக்குள்ள சிகரெட் பிடிக்கக் கூடாதுன்னு சட்டம் இருந்தது. பல தியேட்டர்களிலும் இதே நிலை.
 
"எப்பவுமே இடைவேளை வரும்போது டைரக்டர் ஜாக்கிரதையாக இருக்கணும். அங்கபோயி இந்த மாதிரி ஸ்லோ உள்ள காட்சியை வைக்காமல் இடைவேளைக்குப் பிறகு கொடுத்தால் ரசிப்பாங்க. இடைவேளை நேரத்தில் இந்தப் பாட்டை கொடுத்ததால் எழுந்து போயிட்டாங்க. கொடுத்தது என் தப்பு. ஃபோன் பண்ணி பார்த்தால் எல்லா ஊர்களிலும் இதேநிலை என்றார்கள்.  கஷ்டமா போச்சு. மதுரை ஆடியன்ஸ்கூட எழுந்து போனார்கள்னு சொன்னாங்க. சரின்னு சொல்லிட்டு அந்தப் பாட்டை எல்லா ஊர்களிலும் நீக்க சொல்லிட்டேன். 
 
"இதிலிருந்து என்ன கத்துகிட்டேன்னா... ஒரு படத்துல பாட்டு வைக்கிற இடத்தக்கூட கவனமா பண்ணணும்னு. வெறும் சீனுன்னு நான் எழுதுறேன். நான் டைரக்ட் பண்ணிட்டு போயிடறேன். பாட்டு சீன் அப்படியில்ல. பாட்டுன்னா ஒரு கவிஞர் வர்றாரு. ஒரு மியூஸிக் டைரக்டர் வர்றாரு. நான் உட்கார்ந்துக்கிறேன். அப்புறம் நடன இயக்குனர். இவ்வளவு பேரும் சேர்ந்து பண்ற உழைப்பு வீணாகிப் போயிடக் கூடாதில்லையா? அதனால ஒரு பாட்ட எந்த இடத்தில் போடணும், போடக் கூடாதுன்னு ஒரு முடிவுக்கு வந்தேன்."
 
 - இயக்குனர் சிகரத்தின் இந்த வார்த்தைகளிலிருந்து அவர் ஒரு திரைப்படத்தை, திரைப்பட ரசிகர்களின் மனநிலையை எப்படி நுட்பமாக அணுகி புரிந்து வைத்துள்ளார் என்பதை அறியலாம். 

பாடல்களை படமாக்குவதைப் போலவே அதனை எழுதி வாங்குவதிலும் தனித்துவமானவர் இயக்குனர் சிகரம் பாலசந்தர். அதுபற்றி வாலி கூறியதை நெல்லை ஜெயந்தா தனது நூலில் குறிப்பிட்டுள்ளார்.
 
இனி வாலியின் அனுபவம்.
"பாடல் எழுதி வாங்குவதில் பாலசந்தருக்கும் அண்ணாவுக்கும் ஒரு ஒற்றுமை உண்டு. நான் எம்.ஜி.ஆருக்கு எழுதின முதல் படம், நல்லவன் வாழ்வான். அண்ணாதான் டயலாக். அண்ணா வந்து, இந்தப் பாட்டில் இந்தக் கருத்தெல்லாம் வரலாம் அப்படீன்னு எழுதிக் கொடுத்திடுவாரு. உடுமலை நாராயண கவி எல்லாம் அண்ணா எழுதின வரிகளை பல்லவி ஆக்கியிருக்காங்க. அண்ணா மாதிரி பாலசந்தரும் பாட்டுல என்னென்ன வேணும்னு சொல்லிடுவாரு. பாட்டுக்கு மெட்டீரியல் தர்றதுங்கிறது அண்ணாவுக்கு பிறகு இவர்தான். இரு கோடுகள் படத்துல வர்ற புன்னகை மன்னன் பாட்டு பட்டிமன்றம் மாதிரி இருக்குன்னு சொல்றீங்க. அந்தப் பாட்டு அப்படி இருக்கணும்னு சொன்னதே அவர்தான்."
 
ஒரு படத்துக்கு ஒரு பாடலாசிரியரை பயன்படுத்தவே பாலசந்தர் விரும்புவார். அது ஏன்?
 
"ஒரு படத்துக்கு ஒரு கவிஞர்னு சொல்லிட்டா, அவர்கிட்ட முழு கதையையும் சொல்லிடுவோம். அப்பவே அவர்களும் கதைக்குள்ள வந்துவிடுவார்கள். எப்ப பாட்டு வேணும்னு நாம கேட்டாலும் உடனே எழுதித்தர முடியும். ஒருமுறை வாலி தன்னுடைய புதுக்கவிதை புத்தகம் ஒன்றை என்கிட்ட கொடுத்தாரு. அப்போ நான் அக்னி சாட்சின்னு ஒரு படம் பண்ணலாம்னு இருந்தேன். அப்போ வாலி எழுதின, நான் உன் நிஜத்தை நேசிக்கிறேன், என் நிழலையோ பூசிக்கிறேன், அதனால்தான் உன் நிழல் விழுந்த மண்ணைக்கூட என் நெற்றியில், நீறுபோல் இட்டுக் கொள்கிறேன் என்ற புதுக்கவிதை என் நினைவுக்கு வந்தது. 
 
"அது என்னை ஏதோ செய்தது. உடனே வாலிகிட்ட இதைக் கொஞ்சம் முன்னும் பின்னும் மாற்றி மியூசிக் பண்ணி எடுத்துக்கிறேன்னு சொன்னேன். அந்தப் பாட்டு பிரமாதமாக வந்தது. அவருடைய நிறைய புதுக்கவிதைகளை நான் அவரிடம் இருந்து திருடி என் படத்துல வச்சிருக்கேன்னு அவர்கிட்ட சொல்வேன். எனக்கு புதுக்கவிதை மேல அப்படியொரு மோகம்."
 
பாலசந்தர் படத்தில் வாலி எழுதிய அனேக நல்ல பாடல்களில் முக்கியமானது, எதிர்நீச்சல் படத்தில் வருகிற, வெற்றி வேண்டுமா போட்டுப் பாரடா எதிர்நீச்சல். இது பற்றி பாலசந்தர் பெருமிதமாக பல இடங்களில் குறிப்பிட்டுள்ளார்.
 
"எதிர்நீச்சல் படத்தில் கஷ்டப்பட்டு ஒருத்தன் முன்னுக்கு வர ஆசைப்படுகிறான். ஒரு தன்னம்பிக்கை பாட்டு, டைட்டில் பாடலா வைக்கணும்னு கேட்டேன். கவிஞர் உடனே எழுதிக் கொடுத்தார். அந்தப் பாடல்தான், வெற்றி வேண்டுமா போட்டுப் பாரடா எதிர்நீச்சல். இந்தப் பாட்டைப் பற்றி இன்னொரு விஷயம் சொல்லணும். அப்போ அண்ணா அவர்கள் உடல்நலம் சரியில்லாமல் இருந்த சமயத்தில் இந்தப் படத்தைப் பார்த்தார். 45 நிமிடம் பேசினார். படம் முழுவதும் பார்த்திட்டு, படம் ரொம்ப நல்லா இருக்கு. இந்த, வெற்றி வேண்டுமா பாட்டை யார் எழுதினதுன்னு கேட்டார். நான், வாலி எழுதினார்னு சொன்னேன். உடனே அவர், ரொம்ப நல்லா இருக்குன்னு அவர்கிட்ட சொல்லுங்கன்னு சொல்லச் சொன்னார்."